Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

இந்தியன் ரயில்வே அதிகாரியா? இரக்கமற்ற அதிகாரியா?... மாற்றுத்திறனாளியின் மனக்குமுறல்!

மாற்றுத்திறனாளி சலுகையில் டிக்கெட் பதிவு செய்யப் போன போது தனக்கு நேர்ந்த அவமானத்தை மனம் திறந்து எழுதி இருக்கிறார் பாதிக்கப்பட்டவர். இதைப் படித்த பின்னராவது ரயில்வே அதிகாரிகள் திருந்துவார்களா?

Subscribe to Oneindia Tamil

சென்னை : மாற்றுத்திறனாளிக்கான சலுகையில் ரயில் டிக்கெட் பதிவு செய்யப் போன போது தனக்கு நேர்ந்த அவமானத்தை மனம் திறந்து எழுதி இருக்கிறார் பாதிக்கப்பட்டவர். இதைப் படித்த பின்னராவது ரயில்வே அதிகாரிகள் திருந்துவார்களா? இந்தியன் ரயில்வே துறையினர் பயணிகளை எப்படி அடிமைகள் போல நடத்துகிறார்கள் என்பதற்கு சான்றாக பாதிக்கப்பட்ட மாற்றுத் திறனாளி இந்த பதிவை செய்துள்ளார்.

ஏழை மக்கள் முதல் உயர் வகுப்பினர் வரை அனைவருக்குமான சவுகர்யமான பயணம் என்றால் அது ரயில்வே துறை தான். எப்போதும் மக்கள் நடமாட்டம் இருக்கும் இடத்தில் ஒன்றான இங்கு பணியில் இருக்கும் அதிகாரிகள் சிலரின் நடவடிக்கைகள் அனைவரின் மதிப்பையும் கெடுத்துவிடுகிறது. சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் தனக்கு நேர்ந்த மோசமான சம்பவத்தை ஒன் இந்தியா தமிழிற்கு எழுதியுள்ளார் சுகி என்ற மாற்றுத் திறனாளி அவரின் மனக்குமுறல் பதிவு இதோ :

A disabled person writes to Tamil one India how he humiliated by Railway officers

கடந்த வியாழனன்று மாலை 5.40 மணியளவில் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் டிக்கெட் எடுப்பதற்காக வரிசையில் நிற்க சென்றேன்.
சென்னை பார்க் டவுனில் இருந்து நடந்து வந்தால் கால் வலி ஏற்பட்டது இதனால் பயணச்சீட்டு கொடுக்கும் இடத்தில் கொஞ்ச நேரம் ஓய்வெடுத்து கொண்டே தண்ணீர் குடித்து விட்டு, நான் ஒரு மாற்றுத்திறனாளி என்பதால் அதற்கான சான்றிதழ் நகல் கேட்பார்கள், ஆதலால் நகலில் கையயொப்பம் போட்டுக்கொண்டு பயணச்சீட்டு கொடுக்கும் இடத்திற்கு சென்றேன்.

அந்த இடம் மாற்றுத்திறனாளிகளுக்கு தனியாக பயணச்சீட்டு கொடுக்குமிடம் ஆனால் அங்கு மாற்றுத்திறனாளிகள் தவிர்த்து அனைவரும் வரிசையில் நின்றாலும் ஒருசிலர் வரிசையில் நிற்காமல் நேரடியாக சென்று பயணச்சீட்டு வாங்கிச் சென்றனர். நான் கையொப்பம் போட்ட சான்றிதழ் நகலை எடுத்துக் கொண்டு அதே இடத்தில் குறைந்தது 5 நிமிடம் நின்றபடி சான்றிதழை டிக்கெட் கொடுப்பவரிடம் காட்டிக்கொண்டு பயணச்சீட்டு கொடுக்கும்படி கேட்டுக் கொண்டிருந்தேன்.

ஆனால் என்னை ஒரு பொருட்டாகவே அவர் நினைக்கவில்லை, மாற்றுத்திறனாளிகள் அல்லாத நான்கு பேருக்கு பயணச்சீட்டு கொடுத்த பிறகு என்னுடைய சான்றிதழ் நகலை கடுங்கோபத்தோடு என்னிடம் இருந்து வாங்கினார். பின்னர் "எங்கே ஒரிஜினல் சான்றிதழ்" என்று மிரட்டல் விடுப்பது போல சத்தமாக கேட்டார்.

இதோ எடுக்கிறேன் சார் என்று ஒரிஜினல் சான்றிதழ் எடுத்து அவரிடம் காட்டினேன், அங்கே ஏற்கனவே நான் கையோப்பமிட்டு கொடுத்த நகலை மிகவும் வெறுப்பாக தூக்கி எறிந்தது தெளிவாக தெரிந்தது. ஏனென்றால் அந்த சான்றிதழ் டிக்கெட் கொடுப்பவரின் கைக்கு எட்டாத தொலைவில் வீசியெறிந்திருந்தார் அந்த அதிகாரி.

நான் ஒரிஜினல் சான்றிதழ் அவரிடம் காட்டிக் கொண்டு நின்று கொண்டிருந்தேன் ஆனால் அவர் என்னை கண்டும் காணாதது போல இருந்ததால், சார் ரயிலுக்கு நேரமாச்சு சீக்கிரம் டிக்கெட் கொடுங்க என்றேன் அதற்கு அவர் "அப்படியே வீட்டுக்கு போய்டு எதுக்கு வர" என்றார்
எதும் பதில் பேசாமல் அமைதியாக இருந்தேன். ஏனென்றால் அரசு ஊழியர் இப்படி பேசுவது அதிர்ச்சியாக இருந்தது குற்றவாளியை போல பயணிகளை கையாளதான் ரயில்வே துறை கற்றுக் கொடுத்தார்கள் போலும்.

பிறகு என்னை காத்திருக்க வைத்து விட்டு மீண்டும் ஒருத்தருக்கு பயணச்சீட்டு கொடுத்த பிறகு கோபமாக என்னுடைய ஒரிஜினல் சான்றிதழ் வாங்கி பார்த்து விட்டு சான்றிதழை என்னிடம் வீசி எறிந்தார், "எங்க போற, எந்த ரயில்" என்று கோபமாக கேட்டார். "வாணியம்பாடி, ஏலகிரி ரயிலில்" செல்கிறேன் என்றேன். கைக்கு எட்டும் தூரத்தில் நான் நினுறிருந்தாலும் பயணச்சீட்டை வீசியெறிந்தார். நானோ தேடிப் பிடித்து பயணச்சீட்டை எடுத்துக் கொண்டு கடைசியாக அவரிடம் கேட்டேன் "ஒரு மாற்றுத்திறனாளி நீண்ட நேரமாக நிற்க வைத்து மனசாட்சி இல்லாமல் நடந்து கொள்கிறீர்களே இது சரியா என்றேன்".

அதற்கு அவர் தரக்குறைவான வார்த்தைகளில் என்னை திட்டத் தொடங்கினர். "ஏண்டா நாயே என்று தொடங்கி பல ஆபாச வார்த்தைகளால் திட்டி கொண்டே, பயணச்சீட்டு வாங்கும் வரை அமைதியாக இருந்துவிட்டு இப்போ பேசுறான் பாரு என்று திட்டி விட்டு இன்னும் நிறைய ஆபாச வார்த்தைகளால் தெலுங்கிலும் திட்டி தீர்த்தார்"

அவர் அமர்ந்திருந்த இடத்தில் இருந்து எழுந்து அடிக்க முயற்சி செய்தார் ஆனால் இரும்பு சன்னல் இருந்ததால் நான் தப்பித்தேன். அவருக்கு எடுபிடியாக ரவுடி போல அருகில் இருந்த ஒருத்தர் என்னை கோபத்தத்துடன் போடா என்று சொல்லி அதட்ட, அப்போதுதான் வந்த அவருக்கு தெரிந்த பெண் ஊழியரிடம் பாருங்க எவ்வளவு கொழுப்பு இவனுக்கு டிக்கெட் கொடுத்த பிறகு என்று தெலுங்கிலே எதோ நியாயாவான் போல பேசினார்.

அங்கிருந்து அழுதுக் கொண்டே கண்ணீரோடு அங்கிருந்து மெதுவாக நகர்ந்தேன் அப்போதுதான் எனக்குள் தோன்றியது எவ்வளவு பெரிய அராஜகமான இரக்கமில்லாத சமூகத்தில் வாழ்கிறோம், ஒரு மாற்றுத்திறனாளியை எப்படி அணுக வேண்டும் என்ற ஒரு புரிதல் இல்லாமல் ரவுடியை தண்டிப்பது போல் நடந்து கொண்டார்களே அவர்கள் பிள்ளையாக அண்ணன் தம்பியாக இருந்தால் இவ்வாறு நடந்திருப்பார்களா, நான் கட்டும் வரிப்பணத்தில்தான் அவர்களுக்கு சம்பளம் போகிறது அப்படி இருக்க என்னை அடிமை போல நடத்துவது எப்படி நியாயமாகும்.

இவர்களை தண்டிக்க நம்மிடம் எந்த ஆயுதமும் இல்லையே என்று கண்ணீரை துடைத்துக் கொண்டே ரயிலுக்கு இன்னும் 5 நிமிடமே இருக்க வேகமாக செல்ல ஆரம்பித்தேன், இப்போதுதான் போக்குவரத்து ஊழியர்கள் இரவு பகலாக உழைத்தவர்கள் சம்பள பிரச்சனைக்காக பல நாட்களாக போராடுகிறார்கள் ஆனால் ஒரே இடத்தில் ஏசி அறையில் அமர்ந்து கொண்டு மக்களின் வரிப்பணத்தில் சம்பளம் வாங்கிக் கொண்டு மக்களையே அடிமைகள் போல நடத்துவது சர்வதிகார ஆட்சியாளர் ஹிட்லரை விட கொடுமையாகவே உணர முடிகிறது.

ஒரு மாற்றுத்திறனாளியையே இவ்வளவு தரக்குறைவாக நடத்துகிறார்கள் என்றால் இன்னும் வயதான முதியவர்கள், மருத்துவம் பார்த்து வீடு திரும்பும் நோயாளிகள், 70% ஊனமுற்றவன் நான் ஆனால் 90% ஊனமுற்ற பயணிகளும் பயணச்சீட்டு வாங்கும்போது எவ்வளவு பாதிக்கப்படுகிறார்கள் என்பதை எண்ணிப்பார்க்க முடியாத கொடுமையாக உள்ளது. மனிதத் தன்மையே இல்லாத ரயில்வே துறை ஊழியர்கள் இப்படி நடந்து கொள்வது வெளிச்சத்திற்கு வர வேண்டும் ஆதலால் அப்படி ஒரு கொடுமை மேலும் நடக்க கூடாது மற்றும் ரயில்வே துறையின் அராஜகத்தை மக்கள் தெரிந்து கொள்ளவே உங்களுடன் பகிர்கிறேன்.

இப்படிக்கு
உண்மையுள்ள மாற்றுத்திறனாளி
சுகி என்று கண்ணீர் மல்க எழுதியுள்ளார் இவர். இந்த மாற்றுத்திறனாளியின் பதிவை பார்த்தாவது திருந்துவார்களா ரயில்வே அதிகாரிகள்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+