கரூரைப் பயமுறுத்தும் மர்மக் காய்ச்சல்- ஒரு சிறுமி பலி; 4 பேர் மருத்துவமனையில் அனுமதி
கரூர்: கரூரில் வேகமாகப் பரவி வருகின்ற மர்ம காய்ச்சலால் சிறுமி ஒருவர் உயிரிழந்துள்ளார். மேலும் நான்கு பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கரூர் மாவட்டம், நெரூர் வடபாகம் ஊராட்சியில் உள்ள ஒத்தக்கடையைச் சேர்ந்த செல்வராஜ் மகள் தர்ஷினி. இவருக்கு கடந்த ஒரு வாரமாக காய்ச்சல் இருந்த நிலையில் பரமத்தியிலுள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் பரிசோதனை செய்ததில் விஷ காய்ச்சலின் பாதிப்பு இருந்தது தெரியவந்தது.
இதையடுத்து மருத்துவரின் ஆலோசனையின் பேரில் கடந்த புதன்கிழமை அச்சிறுமி கரூர் அரசு மருத்துவமனைக்கு சேர்க்கப்பட்டார். தொடர்ந்து, மேல் சிகிச்சைக்காக வியாழக்கிழமை திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி சிறுமி தர்ஷினி நேற்று உயிரிழந்தார்.
இந்நிலையில் ஒத்தக்கடையைச் சேர்ந்த வீரா என்பவரின் மகன் விக்னேஷ், மகாமுனி மகள் சைலஜா, மகன் கிஷோர், பாப்பாத்தி ஆகிய நான்கு பேர் மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்டு கரூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனால் கரூர் சுற்றுவட்டாரத்தில் பெரும் பதட்டம் நிலவி வருகின்றது.