திருடன் - போலீஸ் - நான்... மடிப்பாக்கத்தில் ஒரு லைவ் சேஸிங்!
சென்னை: மடிப்பாக்கத்தில் பட்டப்பகலில் போலீசாரிடம் மாட்டிய திருடன், அவர்கள் சற்று அஜாக்கிரதையாக இருந்த நேரத்தில் மின்னல் வேகத்தில் தப்பி ஓடினான்.
மடிப்பாக்கம் பகுதியில் தொடர்ந்து பட்டப் பகலிலேயே திருட்டுகள் நடப்பதால் முக்கிய தெருக்கள், சாலையின் சந்திப்புகளில் போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
இன்று மடிப்பாக்கம் டாக்டர் அம்பேத்கர் மெயின் சாலையில், சந்தேகத்துக்கிடமாக நடமாடிய ஒரு இளைஞனை பிடித்து விசாரித்தனர் போலீசார். அதில் அவன் நிஜமாகவே திருடன் என்பதும், இந்தப் பகுதியில் ஏற்கெனவே சில வீடுகளில் நகைகள், ரொக்கம் திருடியவன் என்பதும் தெரியவந்தது. இன்றும் சில வீடுகளை நோட்டம் விடவே அவன் வந்திருக்கிறான்.
அவன் நடமாடிய பகுதியில் பட்டப் பகலிலேயே கூட ஆள் நடமாட்டம் இருக்காது. பெரும்பாலும் வீட்டை மூடிக் கொண்டு சீரியலில் மூழ்கியிருப்பார்கள். அல்லது தூங்கிக் கொண்டிருப்பார்கள். இந்த நேரத்தில்தான் அதிக அளவு இங்கு திருட்டுகள் நடக்கின்றன, வாகனங்கள் காணாமல் போகின்றன.
சிக்கிய திருடனின் கைகளை மடக்கிப் பிடித்து ஒரு போலீஸ்காரர் விசாரித்துக் கொண்டிருந்தபோது, அவரைத் தள்ளிவிட்டு ஓட்டம் பிடித்தான் அந்தத் திருடன்.
மின்னல் வேகத்தில் ஓடிய அவனுக்கு ஈடு கொடுத்து போலீஸ்காரரால் ஓட முடியவில்லை. எனவே எதிரில் வந்தவர்களிடம் அவனை மடக்குமாறு குரல் எழுப்பினார். உடனே மேலும் இருவரும் திருடனைத் துரத்தியபடி ஓடினர்.
வேகமாக ஓடிய திருடன் சட்டென்று திரும்பி, சாக்கடை நிறைந்திருக்கும் ஒரு காலி மனைக்குள் குதித்தான். முழங்காலளவு சாக்கடையில் ஓடத் தொடங்கினான். காலில் செருப்பு கூட இல்லை. ஆனால் கல், முள் எதையும் பார்க்காமல் ஓடினான்.
அவனை மேற்கொண்டு தொடராமல், இந்த சாலைக்கு இணையாக உள்ள எதிர்சாலையை நோக்கி போலீசார் உள்பட அனைவரும் விரைந்தனர். மயிரிழையில் அந்த சாலையை அனைவர் கண்ணெதிரிலும் கடந்து போன திருடன், தெருவின் முடிவிலிருந்த காம்பவுன்டை ஏறிக் குதித்தான்.
அடுத்த நொடியில் ஒரு வண்டி ஸ்டார்ட் ஆகும் சத்தம். போய்ப் பார்த்தால், வண்டியைக் கிளப்பிக் கொண்டு வேகமாக போய்க் கொண்டிருந்தான் திருடன். அந்தப் பகுதியில் அப்போது கடமையில் இருந்தவர் ஒரே ஒரு போலீஸ்காரர்.
தன்னால் பிடிக்க முடியாததால், கையிலிருந்த மைக் மூலம் அத்தனை போலீஸ் செக்போஸ்ட்களுக்கும் தகவல் சொல்லிக் கொண்டிருந்தார்.
'சாயங்காலத்துக்குள்ள பயபுள்ளய பிடிச்சிடுவோம்' என்றார்.
இதுகுறித்து மடிப்பாக்கம் காவல் நிலையத்தில் தொடர்பு கொண்டபோது, "இவனைத்தான் ரொம்ப நாளா தேடிக்கிட்டிருக்கோம். போலீசார் கையில் சிக்கிய அவன், பின்னர் எதிர்பாராத நேரத்தில் பிடியிலிருந்து தப்பி ஓடிவிட்டான். அவன் தப்பியபோது பிடித்து இழுத்ததில் சட்டை மட்டும் சிக்கிக் கொண்டது. போலீசார் துரத்திச் சென்றுள்ளனர். சீக்கிரமே பிடிச்சிடுவோம்," என்றனர்.