தாயினும் சாலப் பரிந்து.. ஆற்று வெள்ளத்தில் சிக்கிய குட்டிகளை காப்பாற்ற துடித்த நாய்!
Recommended Video

திருப்பூர்: திருப்பூரில் நொய்யல் ஆற்று வெள்ளத்தில் சிக்கிக் கொண்ட தனது 10 குட்டிகளையும் காப்பாற்ற ஒரு தாய் நாய் தவித்த தவிப்பு திருப்பூர் மக்களிடையே பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி விட்டது.
மனிதர்களை விட விலங்குகளே உயர்வான பாசம் கொண்டவை. மனிதர்களை மிஞ்சி விடும் தாய்மை உணர்வும் விலங்குகளுக்கு உண்டு. இதை உலகம் பலமுறை பார்த்துள்ளது. திருப்பூரில் நேற்று இப்படி ஒரு பாசப் போராட்டத்தை நேரில் பார்த்து நெகிழ்ந்தனர் மக்கள்.
திருப்பூர் நொய்யல் ஆற்றில் நீர் வரத்து இல்லாத காலங்களில் தெருவில் வாழும் நாட்டு நாய்கள் நொய்யல் ஆற்றின் நடுவே உள்ள பாறை இடுக்குகளில் தங்குவது வழக்கம்.

ஆற்றில் சிக்கிய நாய்க்குட்டிகள்
காசிபாளையம் பகுதியில் உள்ள பாறையில் கடந்த சில நாட்களுக்கு முன் 10 குட்டிகளை ஈன்ற நாட்டு நாய் பாறைகளில் வைத்தே தனது குட்டிகளை வளர்த்து வந்துள்ளது. இந்நிலையில் நொய்யல் ஆற்றில் நேற்றிரவு நீர் வரத்து அதிகரித்ததால் பாறையை சுற்றி நீர் நிறைந்துள்ளது.

தவிப்புக்குள்ளான குட்டிகள்
வெள்ளத்தில் சிக்காமல் தாய் நாய் மட்டும் வெளியேறிய நிலையில் 10 குட்டி நாய்களும் வெளியேற முடியாமல் தவித்துள்ளன. இதனை கண்ட தாய் நாய் நேற்றிரவு முதல் அப்பகுதியில் குரைத்துக் கொண்டே தவித்து வந்தது. நாய் தொடர்ந்து பாறையை பார்த்து குரைப்பதை கண்ட அப்பகுதி பொதுமக்கள் பாறையில் நாய் குட்டிகள் இருப்பதை கண்டறிந்தனர்.

பத்திரமாக மீட்பு
இதையடுத்து தீயணைப்புப் படையினருக்குத் தகவல் போனது. விரைந்து வந்த திருப்பூர் தெற்கு தீயணைப்பு வீரர்கள் நொய்யல் ஆற்றின் நடுவே பாறைகளின் மீது தத்தளித்தபடி இருந்த 10 நாய் குட்டிகளையும் பாதுகாப்பாக மீட்டனர். மீட்கப்பட்ட குட்டி நாய்களுக்கு அப்பகுதியினர் பால் உணவு உள்ளிட்டவற்றை உண்ண கொடுத்தனர்.

மரணிக்காத மனிதாபிமானம்
நாய்குட்டிகள் தானே என்று அலட்சியம் காட்டாமல் கடுமையாக முயற்சித்து நாய்குட்டிகளை காப்பாற்றிய தீயணைப்பு வீரர்களை அப்பகுதியினர் வெகுவாக பாராட்டினர். மனிதாபிமானம் இன்னும் மரணிக்கவில்லை என்பதையே இச்சம்பவம் எடுத்துரைத்தது என்றால் அது மிகையாகாது.












Click it and Unblock the Notifications