பாரதியாரின் 132வது பிறந்தநாள்: எட்டையபுரத்தில் கொண்டாட்டம்!
தூத்துக்குடி: பாரதியாரின் 132வது பிறந்தநாள் விழா அவரது சொந்த ஊரான தூத்துக்குடி மாவட்டம், எட்டையபுரத்தில் உள்ள அவரது மணி மண்டபத்தில், கோவில்பட்டி பாரதியார் நினைவு அறக்கட்டளை சார்பில் நேற்று கொண்டாடப்பட்டது.
இந்த விழாவில், பள்ளி மாணவர்கள் பாரதியார் வேடமும், மாணவிகள் பாரதியின் மனைவி செல்லம்மாள் வேடமும் அணிந்து எட்டையபுரம் பேருந்து நிலையத்திற்கு அருகில் உள்ள பாரதியார் மணி மண்டபத்தில் இருந்து முக்கிய வீதிகள் வழியாக பாரதியாரின் பிறந்த வீட்டிற்கு பேரணியாக சென்றனர். பின்னர் பாரதியின் சிலைக்கு மலர் தூதி மரியாதை செய்தனர்.

132 இளம்பாரதிகளும், பாரதி கண்ட கனவை நிறைவேற்றும் வகையில், பெண் கல்வி, பெண் விடுதலை குறித்து கோவில்பட்டி சார் ஆட்சியர் விஜயகார்த்திகேயன் தலைமையில் உறுதிமொழி எடுத்தனர்.
'வந்தே மாதரம்', 'அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே' என்ற முழக்கங்கள் எழுப்பப்பட்டது. பாரதியின் கவிதைகள் ஒப்புவிக்கும் போட்டியும் நடைபெற்றது.
இதேபோல் கும்பகோணத்தை அடுத்த கோவிந்தபுரத்தில் உள்ள ஸ்ரீ பாண்டுரங்க பஜனாஸ்ரமம் சார்பில் பாரதியின் 132 வது பிறந்தநாளை ஒட்டி அவரது பாடல்களைப் பாடி இசையஞ்சலி செலுத்தப்பட்டது.












Click it and Unblock the Notifications