குலாலர்களுக்காக பிறந்தது புதுக் கட்சி... 20 வேட்பாளர்களும் அறிவிப்பு
சென்னை: முன்னாள் காங்கிரஸ் மாவட்டத் தலைவரான சேம. நாராயணன், புதிய கட்சி தொடங்கி, 20 லோக்சபா தொகுதிகளுக்கு வேட்பாளர்களையும் அறிவித்துள்ளார்.
குலாலர்களுக்காக இந்தக் கட்சி தொடங்கப்பட்டுள்ளதாக சேம நாராயணன் தெரிவித்துள்ளார். இந்தக் கட்சிக்கு, மக்கள் தேசிய கட்சி என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது.
அதன் அறிமுக விழா இன்று சென்னையில் நடந்தது. குலாலர் சங்க மாநிலத் தலைவராகவும் இருந்து வரும் சேம நாராயணன் புதிய கட்சி குறித்துக் கூறுகையில்,
தமிழகத்தில் 40 லட்சம் குலாலர்கள் இருக்கிறார்கள். அவர்களுக்கு போதிய சலுகைகளோ, அரசியல் அங்கீகாரமோ கிடைக்கவில்லை. எனவே புதிய கட்சி தொடங்கி எங்கள் பலத்தை நிரூபிக்க இருக்கிறோம்.
நாடாளுமன்ற தேர்தலில் 20 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளோம். போட்டியிடும் தொகுதிகளில் வெற்றி பெற கடினமாக உழைப்போம். அடுத்த சட்டசபை தேர்தலில் நிச்சயம் எங்கள் பிரதிநிதிகள் சட்டசபைக்கு செல்வார்கள். அதற்கான முயற்சிகளில் ஈடுபடுவோம் என்று தெரிவித்தார்.
பின்னர் 20 தொகுதிகளுக்கான வேட்பாளர்களையும் நாராயணன் அறிவித்தார். அந்த விவரம்...
ராஜகோபால் (கோவை), பொன்னுசாமி (திருப்பூர்), அங்கம்மாள் (ஈரோடு), சுப்பிரமணியம் (சேலம்), சிவக்குமார் (நாமக்கல்), முத்து சொக்கன் (திண்டுக்கல்), சுகுமாறன் (கன்னியாகுமரி), முருகானந்த வேளார் (நெல்லை), ராமன் (சிவகங்கை), குப்புசாமி (கரூர்), ரவி (திருவாரூர்), செல்வம் (தஞ்சை), சரவணன் (கிருஷ்ணகிரி), ஆனந்த் (தர்மபுரி), திருப்பதி (வேலூர்), ரவி (கடலூர்), ராமசாமி (வடசென்னை), கணேசன் (தென்சென்னை), தாயுமானவர் (மத்திய சென்னை), கருணாகரன் (காஞ்சீபுரம்).