திமுக அப்பவே எப்படி பெர்பெக்டாக இருந்திருக்கு பாருங்க!
சென்னை: கருணாநிதியின் உடல்நிலை குறித்து இப்போது போலவே அப்போதும் சில விஷயங்களை மக்களுக்கு அவ்வப்போது அப்டேட் செய்ததில் திமுகவுக்கு நிகர் திமுகதாங்க.
கருணாநிதி கடந்த ஒன்றரை ஆண்டுகளாக உடல்நிலை சரியில்லாமல் அவ்வப்போது காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். அப்போது கடந்த 2016-ஆம் ஆண்டு ஜெயலலிதா அப்பல்லோவில் அனுமதிக்கப்பட்ட சமயம் கருணாநிதியும் காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அப்போது அவருக்கு டிராக்கியாஸ்டமி கருவி பொருத்தப்பட்டது. அப்போது அவர் டிவி பார்ப்பது போன்ற படத்தை வெளியிட்டனர்.
அதுபோல் கடந்த ஜூலை மாதம் 28-ஆம் தேதி ரத்த அழுத்தம் குறைபாடு காரணமாக அவர் காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த போதும் அவர் கண்களை திறந்து பார்த்தபடியும் வெங்கையா நாயுடு நலம் விசாரிக்க வந்த போதும் எடுத்த படங்கள் வெளியாகின.
கருணாநிதி விஷயத்தில் இப்போது மட்டுமல்ல அப்போதும் வெளிப்படை தன்மை இருந்துள்ளது. கருணாநிதி கண் நோயால் அவதிப்பட்டது குறித்து முரசொலியில் வெளியான தகவல் இதோ...
|
தோழர்கள் பிடிவாதம்
கண் நோயின் காரணமாக கடந்த 3 மாதங்களாக மருத்துவமனையில் இருந்த ஆசிரியர் மு.க. அவர்கள் இடது கண்கணில் ஏற்பட்டிருந்த கொடிய வலி நீங்கி, இப்போது வீட்டுக்கு வந்து ஓய்வு பெற்றுக் கொண்டிருக்கிறார். அவரது உடல்நிலையைப் பற்றிய பல சந்தேகங்களுடன் தோழர்கள் ஆவல் நிறைந்த கடிதங்கள் எழுதிய வண்ணமிருக்கிறார்கள. சந்தேகப்படுவது போன்ற நிலைமை ஏதுமில்லையென்பதை அறிவிப்பதோடு தோழர்களின் பிடிவாதம் நிறைந்த விருப்பத்திற்கிணங்க தற்போது அவரது படத்தையும் வெளியிட்டிருக்கிறோம் என்று அவரது உடல்நலம் குறித்த விளக்கத்தை அளித்துள்ளனர்.
விளக்கம் அளித்த கருணாநிதி
அதுபோல் 1953-ஆம் ஆண்டு கருணாநிதி சந்தித்த கார் விபத்து குறித்து அவரே விளக்கம் அளித்திருந்தார். இதில் அவர் கூறுகையில் 1953-ஆம் ஆண்டு நான் சந்தித்த கார் விபத்து பற்றியும் அதனால் என்னுடைய ஒரு கண் பாதிக்கப்பட்டது பற்றியும் அந்த பாதிப்பு இன்று வரையில் என்னைத் தொல்லைப்படுத்தி வருவதை பற்றியும் விவரிக்க விரும்புகிறேன்.
ஒரு மணிக்கு கூட்டம் முடிந்தது
1953-ஆம் ஆண்டு முகவை மாவட்டத்தைச் சேர்ந்த பரமக்குடியில் எனக்கு ஒரு பாராட்டு விழா பொதுக் கூட்டம் அதில் கலந்து கொள்ள சென்னையில் மாலை 3 மணிக்கு காரில் புறப்பட்டேன். குறித்த நேரத்தில் பரமக்குடி போய் சேர வேண்டுமே என்பதற்காக கார் சற்று வேகமாகச் சென்று கொண்டிருந்தது. திருச்சி அருகில் சென்று கொண்டிருந்த போது கொம்பு நீளமாக உள்ள கொடி ஆடு காரின் ரேடியேட்டரில் பாய்ந்ததால் கார் பழுதாகி வேறொரு வாடகைக் கார் எடத்துக் கொண்டு பரமக்குடிக்குப் புறப்பட்டேன். என்னுடைய காரில் அன்பில் தர்மலிங்கம், திருச்சி பராங்குசம், திருவாரூர் தென்னன் ஆகியோர் வந்தார்கள். மேடைக்குச் செல்லும் வரை மதுரை முத்து கூட்டத்தில் பேசி கொண்டிருந்தார். நான் போனதும் பேசத் தொடங்கி இரவு ஒரு மணிக்கு கூட்டம் முடிவுற்றது.
பேஸ்புக்கில் பதிவு
மறுநாள் திருச்சி தேவர் மன்றத்தில் சிறப்புக் கூட்டம் திரும்பும் போது அசதியின் காரணமாக நானும் நண்பர்களும் கண்ணயர்ந்து விட்டோம். வாடகைக் காரை ஓட்டிய தோழரும் சற்றுக் கண்ணயர்ந்துவிட்டார். அதனால் திருச்சி வரும் வழியில் திருப்பத்தூர் பயணிகள் விடுதிக்கு அருகில் கார் மைல் கல்லில் மோதி, மைல் கல்லும் உடைந்து , பயணிகள் விடுதியின் முன்புற வாயில் கதவில் போய் மோதிக் கொண்டு நின்றது. இதற்கிடையே காருக்குள் இருந்த நாங்கள் உருண்டோம். நண்பர்களுக்கு காயம் எதுவும் இல்லை. ஆனால் எ் மூக்கிலிருந்து ரத்தம் குபு குபு எனக் கொட்டியது. முதல் சிகிச்சை செய்து திருச்சி வந்து சேர்ந்தோம். மறுநாள் காலையில் முகமே வீங்கி என்னுடைய இடது கண்ணில் வலி தொடங்கியது என்று ஏராளமான விஷயங்களை கருணாநிதி சொல்லியுள்ளார். அவரது பேஸ்புக் பதிவு புகைப்பட வடிவில் இந்த செய்தியில் சேர்க்கப்பட்டுள்ளது.
திமுகவின் தெளிவு
இதே போல் ஜெயலலிதா விவகாரத்திலும் அவர் அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த போதும் அவரது புகைப்படங்களை வெளியிட்டிருந்தால் தற்போது அவரது மரணத்தில் மர்மம் என்ற பிரச்சினை எழுந்திருக்க வாய்ப்பில்லை. ஆனால் இப்போதும் சரி அப்போதும் சரி கருணாநிதியின் உடல்நிலை குறித்து தொண்டர்களும் மக்களும் கவலைக்கொள்ளாதிருக்க அப்டேட்டுகளை செய்ததில் திமுகவுக்கு அப்போதே ரொம்பத் தெளிவாக இருந்திருக்கிறது.