திருடிய செல்போனைத் திருப்பிக் கொடுக்க ரூ. 3000 கேட்ட சிறுவன்.. போலீஸ் கைது
திருப்பூர்: திருப்பூரில் திருடிய செல்போனை கொடுக்க 3 ஆயிரம் கொடுப்பதாக கூறியதை நம்பி வீட்டுக்கு வந்த சிறுவன் போலீசாரால் கைது செய்யப்பட்டான்.
திருப்பூர் நகரில் உள்ள கல்லூரி சாலை மாஸ்கோ நகர் பகுதியை சேர்ந்த அழகுராஜா. பனியன் நிறுவனத்தில் தையல் தொழிலாளியாக வேலை செய்கிறார்.
இவருடைய மனைவி ஜெயலட்சுமி. கடந்த 25 ஆம் தேதி அதிகாலையில் அழகுராஜாவின் வீட்டுக்குள் நுழைந்த மர்ம ஆசாமி, ஜெயலட்சுமி வைத்திருந்த இரண்டு செல்போன்கள் மற்றும் ரூபாய் 400 ஐ திருடிச்சென்று விட்டனர்.
சுவிட்ச் ஆப் செய்யப்பட்ட செல்போன்:
காலையில் தூங்கிஎழுந்த ஜெயலட்சுமி தனது செல்போனை காணாமல் திடுக்கிட்டார். பின்னர் தனது செல்போன் எண்ணை தொடர்பு கொண்ட போது அது "சுவிட்ச் ஆப்" செய்யப்பட்டு இருந்தது. ஆனால் அவர் விடாமல் தனது எண்ணை தொடர்பு கொண்ட படியே இருந்துள்ளார்.
செல்போனை கேட்ட ஜெயலட்சுமி:
இரண்டு நாட்களுக்கு பின்னர் திடீரென செல்போனை திருடியவன் ஜெயலட்சுமியிடம் பேசினான். அப்போது, எனக்கு செல் போன் முக்கியமாக தேவைப்படுகிறது, அதிலுள்ள நம்பர்கள் எனக்கு அவசியம் தேவை. அதனால், போனை கொடுத்துவிடு என்று ஜெயலட்சுமி கேட்டுள்ளார்.
மூவாயிரம் கேட்ட திருடன்:
போனை திருடியவன், செல்போனை கொடுக்க வேண்டுமானால் தனக்கு மூவாயிரம் பணம் கொடுக்க வேண்டும் என்று கூறியுள்ளான். அதற்கு எனது வீட்டுக்கு வந்து செல்போனை கொடுத்துவிட்டு ரூபாய் 3 ஆயிரத்தை வாங்கி செல்லுமாறு ஜெயலட்சுமி கூறியுள்ளார்.
16 வயதான சிறுவன்:
இந்த நிலையில் நேற்று காலை ஜெயலட்சுமி வீட்டுக்கு வந்த 16 வயது சிறுவன் ஒருவன் ஜெயலட்சுமியின் இரண்டு செல்போன்களை கொண்டு வந்து கொடுத்துள்ளான்.
போலீசில் ஒப்படைப்பு:
உடனே அக்கம், பக்கத்தினர் உதவியுடன் அந்த சிறுவனை பிடித்த ஜெயலட்சுமி அவனை திருப்பூர் வடக்கு போலீசில் ஒப்படைத்தனர்.
சிறுவர் சீர்திருத்தப் பள்ளி:
போலீஸ் விசாரணையில், அந்த சிறுவன், தான் ஜெயலட்சுமியின் வீட்டுக்குள் புகுந்து செல்போனை திருடியதை ஒப்புக்கொண்டான். இதைத்தொடர்ந்து போலீசார் அந்த சிறுவனை கைது செய்து சிறுவர் சீர்திருத்த பள்ளிக்கு அனுப்பி வைத்தனர்.












Click it and Unblock the Notifications