ஆடி அமாவாசை: சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலில் பக்தர்கள் குவிந்தனர்
வத்திராயிருப்பு: விருதுநகர் மாவட்டம் சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலில் ஆடி அமாவாசை திருவிழா சிறப்பு பூஜையுடன் தொடங்கியுள்ளதால் ஏராளமான பக்தர்கள் அங்கு குவிந்துள்ளனர். விழாவை முன்னிட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.
வத்திராயிருப்பு அருகே மேற்கு தொடர்ச்சி மலையில் சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயில் உள்ளது. ஆண்டுதோறும் இங்கு ஆடி அமாவாசை விழா 3 தினங்கள் கோலாகலமாகக் கொண்டாடப்படுகிறது. லட்சக்காணக்கான பக்தர்கள் வருவார்கள்.
பக்தர்களுக்கு அனுமதி
ஆடி அமாவாசை விழாவை முன்னிட்டு கடந்த 8ம் தேதி முதல் வரும் 18ம் தேதி வரை பக்தர்கள் கோயிலுக்கு சென்று வர அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ஏராளமான பக்தர்கள் கோயிலுக்கு வந்த வண்ணம் உள்ளனர். சோதனைக்கு பின்னரே பக்தர்களின் உடமைகள் அனுமதிக்கப்படுகின்றன.
வனத்துறையினர் பதிவு
பாலிதீன்பை, பீடி, சிகரெட், தீப்பெட்டி உள்ளிட்ட பொருட்களை எடுத்துச்செல்ல அனுமதி இல்லை. பக்தர்களின் பெயர், முகவரி, செல்போன் எண் ஆகியவற்றை வனத்துறையினர் பதிவு செய்து வருகின்றனர். காலை 6 மணி முதல் மாலை 4 மணி வரை பக்தர்கள் கோயிலுக்கு செல்ல அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
ஆடி அமாவாசை விழா
கோயிலில் ஆடி அமாவாசை திருவிழா நேற்று மாலை சிறப்பு பூஜைகளுடன் துவங்குகிறது. பிரதோஷத்தை முன்னிட்டு சுந்தரமகாலிங்கம் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடை பெற்றன. இன்று சிவராத்திரியை முன்னிட்டு சிறப்பு பூஜை நடைபெறும்.
18 வகை அபிஷேகம்
அமாவாசை நாளான 14ம் தேதி காலை 6 மணிக்கு மேல் பால், பழம், பன்னீர், இளநீர் உள்ளிட்ட 18 வகையான அபிஷேகங்கள் நடை பெற உள்ளன. பக்தர்களின் பாதுகாப்பு வசதிக்காக மலைப்பகுதிகளில் 5 இடங்களில் காவல்துறை, வனத் துறை, தீயணைப்புத் துறை, மருத்துவத்துறையினர் முகாமிட்டுள்ளனர்.
போலீஸ் பாதுகாப்பு
தாணிப்பாறையில் இருந்து மலை கோவில் வரை பாதுகாப்புப்பணியில் 900 போலீசார் ஈடுபட்டுள்ளனர். வெள்ளம் வரும்பட்சத்தில் பக்தர்கள் உடனே இறங்கக் கூடாது, ஓடை, ஆறுகளில் பக்தர்கள் தங்கக்கூடாது என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது என்று மதுரை சரக டிஐஜி ஆனந்தகுமார் சோமானி தெரிவித்தார்.
மழை வெள்ளம்
கடந்த மே 17ல் வைகாசி அமாவாசையின் போது சதுரகிரிமலைப்பகுதியில் பலத்த மழை பெய்து, காட்டாற்று வெள்ளம் பெருக்கெடுத்தது. இதில் பக்தர்கள் 9 பேர் பலியானார்கள். இதையடுத்து கோயிலுக்கு செல்ல பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டது. பின்னர் பக்தர்களின் கோரிக்கையை ஏற்று பவுர்ணமி, அமாவாசை, பிரதோஷம் ஆகிய நாட்களில் மட்டும் அனுமதி அளிக்கப்படுகிறது குறிப்பிடத்தக்கது.