திருச்செந்தூர் முருகன் கோவில் ஆவணித் திருவிழா.. கொடியேற்றத்துடன் தொடக்கம்
திருச்செந்தூர்: திருச்செந்தூர் முருகன் கோவிலில் ஆவணித் திருவிழா கொடியேற்றத்துடன் நேற்று தொடங்கியது.
அறுபடைவீடுகளில் இரண்டாம் படை வீடாக திகழ்வது திருச்செந்தூர். அங்குள்ள புகழ் பெற்ற முருகன் கோவிலில் ஆலயத்தில் ஆவணித் திருவிழா வெகு விமர்சையாக கொண்டாடப்படுவது வழக்கம்.
இங்கு நேற்று அதிகாலை கொடியேற்றத்தோடு ஆவணித் திருவிழா தொடங்கியது. இம்மாதம் 27ந் தேதி வரை தொடர்ந்து 12 நாட்கள் விழா நடைபெறும்.
கொடியேற்றத்தை முன்னிட்டு நேற்று அதிகாலை 1 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டது. 1.30 மணிக்கு விஸ்வரூப தரிசனமும் தொடர்ந்து மற்ற பூஜைகளும் நடைபெற்றன. முன்னதாக கொடி, யானை மீது ஏற்றி ஊர்வலமாக கொண்டு வரப்பட்டது.
ஆவணத் திருவிழாவையொட்டி பெருமளவில் பக்தர்கள் திரண்டு வருவார்கள் என்பதால் கோவில் நிர்வாகம் சார்பில் பல்வேறு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மாவட்ட நிர்வாகமும் சிறப்புப் பேருந்துகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. போலீஸாரும் பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்துள்ளனர். குடிநீர் உள்ளிட்ட ஏற்பாடுகளும் சிறப்புற செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.