எங்கும் கொள்ளை... எதிலும் கொள்ளை..சுதந்திரமாக கொள்ளையடிக்க வெள்ளையர்கள் விரட்டியடிப்பா?
எங்கு பார்த்தாலும் மக்களிடம் இருந்து ஏதாவது ஒரு வகையில் கொள்ளையடிக்கப்பட்டுத்தான் வருகிறது.
சென்னை: பேருந்து கட்டணம், சினிமா டிக்கெட் கட்டணம், பெட்ரோல் டீசல் கட்டணம் ஆகியவற்றில் ஏதாவது ஒரு வகையில் மக்களிடம் இருந்து கொள்ளை அடிக்கப்பட்டுத்தான் வருகிறது என்று அப்துல் கலாம் லட்சிய இந்தியா கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அக்கட்சியின் தலைமை நிலைய செயலாளர் ந.குருமூர்த்தி வெளியிட்ட அறிக்கையில் கூறுகையில், பெரிய நடிகர்கள் படம் ரிலீஸ் என்றால் ஒரு வாரத்திற்கு அதிக விலையில் டிக்கெட் விற்று மக்களிடம் கொள்ளை அடிக்கிறார்கள். வார இறுதியில் மற்றும் பண்டிகை நாட்களில் தனியார் பேருந்துகள் பேருந்து பயணத்திற்கு அதிக விலையில் டிக்கெட் விற்று மக்களிடம் கொள்ளை அடிக்கிறார்கள்.
சாதாரண டிக்கெட்களை இல்லாதது போல காட்டி அதிக விலையில் கிடைக்கும் தக்கல் டிக்கெட் மட்டும் கிடைக்கும் படி ரயிலில் மக்களிடம் இருந்து கொள்ளை அடிக்கிறார்கள்.
சில்லறையாக கிடைக்காது என்று தெரிந்தும் அந்த சில்லறை விலைகளில் பொருள்களை விற்று மருந்து கடைகளும் , மளிகை கடைகள் இனிப்பு கடைகளும் செலுத்தவேண்டிய பணத்தை ரவுண்டு ஆஃப் செய்து தினமும் நுகர்வோர்களாக வரும் கோடிக்கணக்கான மக்களிடம் இருந்து சிறுக சிறுக கொள்ளையடிக்கிறார்கள்.
என்னதான் எண்ணெய் நிறுவனங்கள் லாபத்தில் இயங்கினாலும் கச்சா எண்ணெய் விலை குறைந்து இருந்தாலும் பெட்ரோல் டீசல் சமையல் எரிவாயு போன்றவற்றை அதிக விலைக்கு விற்று அதிலும் மக்களிடம் இருந்து கொள்ளை அடிக்கிறார்கள். வித விதமான வரிகள் என்று மக்களிடம் இருந்து கொள்ளை அடிக்கிறார்கள்
இது போதாதென்று அரசும் இப்போது பேருந்து கட்டணங்களை திடீரென்று உயர்த்தி மக்களிடம் இருந்து கொள்ளை அடிக்கிறார்கள். இத்தனை வகையாக அடிக்கும் கொள்ளையில் பங்கு வாங்கும் அரசு அதிகாரிகளும் அரசியல் வாதிகளும் இது போதாதென்று என்று லஞ்சமாக மற்றும் ஊழல் செய்து மக்களிடம் இருந்து கொள்ளை அடிக்கிறார்கள், இப்படி கொள்ளையடித்த கோடிகளை தேர்தலின் போது ஓட்டு வாங்க மக்களிடமே தந்து மீண்டும் ஆட்சிக்கு வந்து அதிகமாக கொள்ளையடிக்கிறார்கள்
சொந்த நாட்டில் நினைக்கும் போதெல்லாம் சுதந்திரமாக மக்களிடம் இருந்து கொள்ளை அடிக்க முடியாது, வளங்களை சுரண்ட முடியாது என்று தான் வெள்ளையர்களை விரட்டி சுதந்திரம் பெற்று சுதந்திரமாக இத்தனை வகைகளிலும் மக்களிடம் இருந்து கொள்ளை அடிக்கிறார்களா? வளங்களை சுரண்டுகிறார்களா?
இவ்வாறு அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.