பிராமணர் அல்லாதவர்கள் அர்ச்சகர்களாக நியமனம்.. கேரள முதல்வருக்கு கமல் வாழ்த்து!
பிராமணர் அல்லாதவர்களை அர்ச்சகர்களாக நியமித்த கேரள முதல்வருக்கு நடிகர் கமல்ஹாசன் டிவிட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
சென்னை: பிராமணர் அல்லாதவர்களை அர்ச்சகர்களாக நியமித்த கேரள முதல்வருக்கு நடிகர் கமல்ஹாசன் டிவிட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
கேரளாவில் 6 தலித்துகள் உட்பட 36 பிராமணர் அல்லாதவர்களை அர்ச்சகர்களாக திருவிதாங்கூர் தேவஸ்தானம் நியமித்தள்ளது. திருவிதாங்கூர் தேவஸ்தானம் கேரளா மாநில அறநிலையத்துறை அமைச்சகத்தின் கீழ் உள்ள தன்னாட்சி பெற்ற அமைப்பாகும்.
இதன் கீழ் 1248 கோவில்கள் உள்ளன. இந்த கோவில்களில் அனைத்து ஜாதியினரையும் அர்ச்சகராக்க வேண்டும் என கோரிக்கை எழுந்தது.
இதையடுத்து தற்போது எழுத்து மற்றும் நேர்முகத் தேர்வுகள் மூலம் 36 பிராமணர் அல்லாதவர்களை அர்ச்சகர்களாக தேர்வு செய்து அறிவித்துள்ளது. இவர்களில் 6 பேர் தலித்துக்கள். இவர்கள் முழு நேர மற்றும் பகுதி நேர அர்ச்சகர்களாக செயல்படுவார்கள் அறிவிக்கப்பட்டது.
கேரள அரசின் இந்த நடவடிக்கையை பல்வேறு தரப்பினரும் வரவேற்றுள்ளனர். இந்நிலையில் நடிகர் கமல்ஹாசன் கேரள முதல்வரின் நடவடிக்கையை பாராட்டி டிவிட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
திருவாங்கூர் தேவஸ்தானத்தில் பிராமணர் அல்லாத அர்சகர்கள் நியமனம். நன்றி கேரள முதல்வருக்கும் தேவஸ்தானத்துக்கும். வைக்கம் வீரர்க்கு வணக்கம்.
— Kamal Haasan (@ikamalhaasan) October 9, 2017
கேரள முதல்வருக்கும் தேவஸ்தானத்துக்கும் நன்றி தெரிவித்துள்ளார். பெரியாரின் கனவு நிறைவேறியாதாக தெரிவிக்கும் வகையில் பெரியாருக்கு வணக்கத்தையும் தெரிவித்துள்ளார். அண்மையில் பினராய் விஜயனை கமல் சந்தித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.