டெங்கு மரணம் தவிர்க்காத அரசு அகல வேண்டும்... நேரடியாகவே சாடும் கமல்ஹாசன்!
டெங்கு மரணம் தவிர்க்க ஆவன செய்யாத அரசு அகல வேண்டும் என்று நடிகர் கமல்ஹாசன் வலியுறுத்தியுள்ளார்.
சென்னை : தமிழகத்தில் டெங்கு மரணம் தவிர்க்க ஆவன செய்யாத அரசு அகல வேண்டும் என்று நடிகர் கமல்ஹாசன் வலியுறுத்தியுள்ளார்.
தமிழகம் முழுவதும் டெங்கு காய்ச்சல் நோய் வேகமாக பரவி வருகிறது. ஆனால் இவற்றை கட்டுப்படுத்த தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக சுகாதார அமைச்சர் விஜயபாஸ்கரும், சுகாதாரச் செயலர் டாக்டர் ராதாகிருஷ்ணனும் கூறி வருகின்றனர்.
எனினும் மாநிலத்தில் டெங்கு மரணங்கள் தவிர்க்க முடியாதவையாக இருந்து வருகின்றன. தமிழகத்தில் தற்போது வரை டெங்கு காய்ச்சலுக்கு 18 பேர் உயிரிழந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
டிஏவி மாணவன் பலி
சென்னை ஐஐடியில் படித்த மாணவர் பிரேம் அவினாஷ், மதுரையைச் சேர்ந்த பிரியா என்ற பெண், வேடசந்தூரில் 2 குழந்தைகள் என டெங்கு காய்ச்சலுக்கு பரிதாபமாக பலியாகினர். இந்நிலையில் நடிகர் கமல்ஹாசன் டெங்கு காய்ச்சலுக்கு கோபாலபுரம் டிஏவி பள்ளி மாணவன் பார்கவ் பலியாகியுள்ளதாக தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
ஜுரச் சங்கு வீண்
'செவிடர்க்கு நான் ஊதிய டெங்கு ஜுரச் சங்கு வீண். டெங்கு மரணம் தவிர்க்க ஆவன செய்யா அரசு அகல வேண்டும்' என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
விழித்திருங்கள் பெற்றோர்
அரசு தூங்குகிறது பெற்றோர் விழித்திருங்கள். இனி காவலர் நாம்தான். கேள்விக்கான பதிலை பெறாது அமையாதீர் என்றும் கமல்ஹாசன் கேட்டுக் கொண்டுள்ளார்.
டெங்கு பற்றி முன்னரே சொன்ன கமல்
டெங்கு பிரச்னை குறித்து கடந்த ஜூலை மாதமும் கமல்ஹாசன் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் கூறியிருந்தார். அதில் நீட் பற்றி எனக்குத் தெரியாது. டெங்கு பற்றி எனக்குத் தெரியும், என் குழந்தை ஏறக்குறைய இறந்தேயிருக்கும். எனவே தமிழக அரசே இதில் கவனம் செலுத்துங்கள். இல்லையேல் விலகுங்கள் என்று அப்போதும் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.