வெளிநாடு செல்ல அனுமதி கேட்டு நடிகை குஷ்பு மதுரை ஹைகோர்ட்டில் மனு
வெளிநாடு செல்ல அனுமதி கேட்டு நடிகை குஷ்பு மதுரை ஹைகோர்ட்டில் மனு செய்துள்ளார்.
மதுரை: வெளிநாடு செல்ல அனுமதி அளிக்கும் படி கோரிக்கை விடுத்து நடிகை குஷ்பு மதுரை ஹைகோர்ட் கிளையில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.
சட்டசபை தேர்தலின்போது நடிகையும், காங்கிரஸ் செய்தித் தொடர்பாளருமான குஷ்பு மீது மூன்று கிரிமினல் வழக்குகள் தொடரப்பட்டது. இந்நிலையில் வழக்குகளை காரணம் காட்டி குஷ்புவின் பாஸ்போர்ட்டை புதுப்பிக்க சென்னை மண்டல பாஸ்போர்ட் அலுவலக அதிகாரிகள் மறுத்துவிட்டனர்.
இந்நிலையில் மதுரை ஹைகோர்ட் கிளையில் நடிகை குஷ்பு மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில், கடந்த 2011-ம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலின் போது தேனி மாவட்டம் ஆண்டிபட்டி பகுதியில் பிரசாரம் செய்தேன். அப்போது தேர்தல் விதிகளை மீறியதாக ஆண்டிபட்டி போலீசார் என் மீது வழக்குப்பதிவு செய்தனர்.
இந்த வழக்கு விசாரணைக்கு ஹைகோர்ட் தடை விதித்தது. இந்த வழக்கு நிலுவையில் இருந்ததால் எனது பாஸ்போர்ட் புதுப்பித்துத்தர மறுக்கப்பட்டது. இதுதொடர்பாக சென்னை ஹைகோர்ட்டில் தொடரப்பட்ட வழக்கில், நான் வெளிநாடு செல்லும் போது எந்த நாட்டுக்கு செல்கிறேன். எங்கு தங்குகிறேன் என்பது உள்பட முழு விவரத்தை மதுரை ஹைகோர்ட்டில் தெரிவிக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டது.
இந்தநிலையில் நான் குடும்பத்துடன் வருகிற 24-ந்தேதி முதல் அடுத்த மாதம்(மே) 14-ந்தேதி வரை பிரான்ஸ், ஸ்பெயின் உள்ளிட்ட நாடுகளுக்கு சுற்றுலா செல்கிறேன். எனவே, நான் வெளிநாடு செல்ல அனுமதிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார். இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது.