அண்ணாமலை இதை செய்தால் நான் மன்னிப்பு கேட்கிறேன்.. திமுகவுக்கு சப்போர்ட்டாகவே பேசும் எஸ்.வி.சேகர்
கும்பகோணம்: தமிழகத்தில் அண்ணாமலை கட்சியை வளர்க்காமல் தன்னை வளர்ப்பதில் ஈடுபட்டுக் கொண்டிருப்பதால் தமிழகத்தில் பாஜக ஜீரோவாக இருக்கிறது என நடிகரும் பாஜக நிர்வாகியுமான எஸ்.வி.சேகர் தெரிவித்துள்ளார்.
கும்பகோணத்தில் செய்தியாளர்களுக்கு நடிகர் எஸ்.வி.சேகர் பேட்டி அளித்தார். அவர் கூறுகையில் அதிமுக கூட்டணி முடிவுக்கு அண்ணாமலைதான் காரணம், கட்சியின் நலனை தாண்டி தான் ஒருவர் மட்டுமே இருக்க வேண்டும் என்ற சுயநலத்துடன் அவர் எடுத்த மட்டமான முடிவு ஆகும்.

இதனால் தேர்தல்களில் தமிழக பாஜகவிற்குதான் மிகப் பெரிய நஷ்டம் ஏற்பட போகிறது. தமிழகத்தில் பாஜக தலைவராக உள்ள அண்ணாமலை கட்சியை வளர்க்காமல் தன்னை வளர்ப்பதில் ஈடுபட்டு கொண்டிருப்பதால் தமிழகத்தில் பாஜக ஜீரோவாக இருக்கிறது.
இந்த தேர்தலில் அண்ணாமலையால் பாஜக மோசமான விளைவை சந்திக்கும். 2024 நாடாளுமன்றத் தேர்தலில் தமிழகத்தில் அண்ணாமலை 25 இடங்களில் பாஜகவை வெற்றி பெற வைத்துவிட்டால் நான் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். வரும் நாடாளுமன்றத் தேர்தலில் திமுக 30 இடங்களை கைப்பற்றும். விஜய் அரசியலுக்கு வருவார் என அவரை தவிர எல்லாரும் பேசிக் கொண்டிருக்கிறார்கள்.
ஆனால் அவரோ இன்னும் சொல்லவில்லை. விஜய் தன்னுடைய ரசிகர் மன்றத்தை சரியாக கட்டமைத்து வைத்துள்ளார். அதன் காரணமாக அவர் அரசியலுக்கு வரக் கூடிய வாய்ப்பு அதிகம். ரஜினி அரசியலுக்கு வருவதாக சொன்னார், ஆனால் அவரால் வர முடியவில்லை, விஜய் அரசியலுக்கு வருகிறாரா இல்லையா என்பதை அவர்தான் சொல்ல வேண்டும்.
ஆளுநர் மாளிகையில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டது தற்செயலாக நடந்த ஒன்று இதனை அரசியலாக்குவதால் எந்த ஆதாயமும் கிடைக்காது. ஆளுநர் எல்லா விவகாரத்திலும் இதே போல் செய்து கொண்டிருந்தார். ஆளுகிற அரசு மீது மக்களுக்கு பரிதாபத்தை ஏற்படுத்தும் என எஸ்.வி.சேகர் தெரிவித்துள்ளார்.
தமிழக பாஜக தலைவராக அண்ணாமலை பொறுப்பேற்றது முதல் மூத்த தலைவர்களை அனுசரித்து செல்லவில்லை. தன்னிச்சையாக முடிவு எடுக்கிறார் போன்ற குற்றச்சாட்டுகள், ஆதங்கங்கள் மூத்த தலைவர்கள் வெளியே சொல்லாவிட்டாலும் மனதிற்குள் இருக்கும் என்கிறார்கள். இதை எஸ்.வி.சேகர் அண்மைக்காலமாக வெளிப்படுத்தி வருகிறார்.
எக்ஸ் ஸ்பேஸ் தளத்தில் அண்ணாமலையை கடுமையாக விமர்சித்திருந்தார். யார் தலைமைக்கு நெருக்கமாக இருக்கிறார்களோ அவர்கள் மீது சேற்றை வாரி இரைத்துவிட்டு இவர் அந்த நெருக்கமான நபராக முயற்சிக்கிறார் என்றெல்லாம் குற்றச்சாட்டு உள்ளது. பிரதமர் மோடியின் திறமையையும் நலத்திட்டங்களையும் தொலைநோக்கு பார்வையையும் பார்த்துதான் தான் பாஜகவில் இணைந்தேன் என எஸ்.வி.சேகர் தெரிவித்திருந்தார். மேலும் தமிழகத்தில் பிராமணர்கள் எல்லாம் சேர்ந்து கட்சி ஆரம்பித்தால் தன்னை அழைத்தால், தான் நிச்சயம் பாஜகவிலிருந்து வெளியேறி அந்த கட்சிக்காக உழைப்பேன் என்றும் சேகர் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications