போலி சமூகவலைதளங்கள் மூலம் அவதூறு தகவல்கள்..காவல் ஆணையர் அலுவலகத்தில் சரத்குமார் புகார்...
சென்னை: போலி சமூக வலைதளங்கள் மூலம் அவதூறு தகவல்களை பரப்புபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று, அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் சார்பில் காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் மனு கொடுக்கப்பட்டுள்ளது.
அண்மையில், மது பாட்டில் அருகில் இருக்க மது கோப்பையை ஏந்தியபடி சரத்குமார் உள்ள புகைப்படம் பேஸ்புக்கில் வெளியானது. இது போட்டோ சூட்டில் எடுக்கப்பட்ட புகைப்படம் என்று சரத்குமார் சார்பில் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், சரத்குமார் சார்பில் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் மனு ஒன்று அளிக்கப்பட்டுள்ளது.
அந்த புகார் மனுவில் சரத்குமார் கூறியிருப்பதாவது...
எனது பெயரில், எனது புகைப்படங்களுடன் பல போலியான சமூகவலைதளங்கள் செயல்பாட்டில் இருந்து வருவது தெரியவந்துள்ளது. இவற்றின் மூலமாக சில விரும்பத்தகாத அல்லது பயன்பாட்டில் இல்லாத எனது புகைப்படங்களை வெளியிடுவதை அந்த போலியான சமூகவலைத்தளங்களை இயக்குபவர்கள் மேற்கொண்டு வருகிறார்கள்.
சட்டமன்ற உறுப்பினர், அரசியல்கட்சி தலைவர், நடிகர் சங்க தலைவர், முன்னணி நடிகர்களுள் ஒருவர் என பல்வேறு துறைகளில் சமூக அந்தஸ்தோடு, முக்கியமான நபராக நான் இருந்து வரும் நிலையில், இத்தகைய வெளியீடுகள் சிலரது திட்டமிட்ட சதியாகவே எண்ணத்தோன்றுகிறது.
மேலும் இச்செயல்கள் முற்றிலும், எனது புகழுக்கும், கவுரவத்திற்கும், களங்கம் விளைவிக்கும் செயல்கள் என்பதையும், கவனத்திற்கு கொண்டுவர விரும்புகிறேன்.
இதன் அடிப்படையில் என் பெயரில், எனது புகைப்படங்களை வெளியிட்டு இயங்கி வரும் போலியான சமூக வலைதளங்களை உடனடியாக முடக்கவும், அத்தகைய சமூகவலைதளங்களை இயக்கி வருபவர்கள் மீது சட்டப்படி தகுந்த நடவடிக்கை எடுக்கவும் ஆவண செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சரத்குமார் கையெழுத்திட்டு கொடுத்துள்ள இந்த மனுவை சென்னை மத்திய குற்றப்பிரிவின் சைபர் கிரைம் காவல் துணை ஆணையர் ஜெயக்குமார் பெற்றுக்கொண்டார். உரிய நடவடிக்கைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.