அனிதா வீட்டில் விஜய்.. குடும்பத்தாரை நேரில் சந்தித்து ஆறுதல்
மருத்துவ இடம் கிடைக்காமல் உயிரிழந்த அரியலூர் மாணவி அனிதாவின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து நடிகர் விஜய் ஆறுதல் கூறினார்.
Recommended Video
அரியலூர் : நீட் தேர்வால் எம்பிபிஎஸ் சீட் கிடைக்காமல் உயிரிழந்த மாணவி அனிதாவின் குடும்பத்தாரை நேரில் சந்தித்து நடிகர் விஜய் ஆறுதல் தெரிவித்தார்.
பிளஸ் 2வில் ஆயிரத்து 176 மதிப்பெண்கள் பெற்ற போதும் நீட் தேர்வில் 86 மதிப்பெண் மட்டுமே பெற்றதால் அரியலூர் மாவட்டம் குழுமூரைச் சேர்ந்த மாணவி அனிதாவின் மருத்துவ கனவு தகர்ந்தது. இதனால் மனமுடைந்த அனிதா கடந்த 1ம் தேதி தனது உயிரை மாய்த்துக் கொண்டார்.
தனக்காக இல்லாவிட்டாலும் தன்னைப் போல கஷ்டப்படும் மாணவர்களுக்காக நீட்டை தமிழக அரசு தடை செய்ய வேண்டும் என்று கடைசியாக அனிதா கூறியிருந்தார். இந்நிலையில் அனிதாவின் மரணத்திற்கு நீதி கேட்டு தமிழகம் முழுவதும் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
போராட்டங்கள்
கடந்த வாரம் முழுவதும் பள்ளி கல்லூரி,மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அரசியல் கட்சியினரும் கண்டனப் பொதுக்கூட்டம், போராட்டம் உள்ளிட்டவற்றின் மூலம் நீட் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.
கமல் கருத்து
நடிகர் கமல்ஹாசனும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் போது நீட் தேர்வுக்காக நாம் போராட வேண்டிய அவசியமில்லை. நம் பிள்ளைகளின் எதிர்காலத்தை நிர்ணயிக்கும் உரிமையை நாம் எங்கோ தவறவிட்டுவிட்டோம். கல்வி கொள்கைகளை வகுக்கும் உரிமை மாநில அரசுகளிடம் தான் இருக்கவேண்டும். அப்படிதான் இருந்தது, ஆனால் எமெர்ஜென்சியின்போது மத்தியில் எடுத்து வைத்துக்கொண்டனர். அதை மாநில அரசு திரும்ப பெற வேண்டும் என்று கூறியிருந்தார்.
திரையுலம் ஆதரவு
இதே போன்று நடிகர் சூர்யாவும் நீட் தேர்வை விமர்சித்து நாளேடு ஒன்றில் ஒரு பக்கம் கட்டுரை எழுதியிருந்தார். இயக்குனர்கள் ரஞ்சித், வெற்றிவேல், சீமான், அமீர் உள்ளிட்ட திரைத்துறையினரும் அனிதாவின் மரணத்திற்கு நீதி கேட்டும், நீட் தேர்வை எதிர்த்தும் குரல் கொடுத்து வருகின்றனர்.
குழுமூரில் விஜய்
இதனிடையே நடிகர் விஜய் அரியலூர் மாவட்டம் குழுமூரில் அனிதாவின் வீட்டிற்கு சென்று அவரது தந்தை மற்றும் சகோதரரை சந்தித்து ஆறுதல் தெரிவித்தார். அனிதாவின் தந்தை சண்முகத்துடன் அவர் தரையில் அமர்ந்து ஆறுதல் சொன்னார்.
குடும்பத்தினருக்கு ஆறுதல்
அனிதாவின் தந்தை சண்முகத்தின் தோல் மீது கை போட்டு விஜய் ஆறுதல் சொல்லும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளன. இந்த புகைப்படத்தில் அனிதாவின் தந்தை மற்றும் சகோதரர் இருவருக்கும் இடையில் அமர்ந்து விஜய் ஆறுதல் சொல்கிறார்.