சீயான் விக்ரம் 'திண்டுக்கல்' உலா- நேற்று தியேட்டர்! இன்று ஜல்லிக்கட்டு! காரணமே நாயகி துஷாராதான்!
திண்டுக்கல்: நடிகர் சீயான் விக்ரம் திண்டுக்கல் உமா ராஜேந்திரா திரை அரங்கத்தில் நேற்று தாம் நடித்த வீரதீர சூரன் படத்தை ரசிகர்களுடன் அமர்ந்து பார்த்தார்; இதனைத் தொடர்ந்து இன்று திண்டுக்கல் நத்தம் அருகே நத்தமாடிபட்டி ஜல்லிக்கட்டு போட்டியை நேரில் கண்டு ரசித்தார் விக்ரம். வீர தீர சூரன் படத்தில் நடித்த நாயகி துஷாரா விஜயனின் சொந்த ஊர் என்பதால் திண்டுக்கல் பக்கம் ரவுண்ட்ஸ் வந்து கொண்டிருக்கிறார் நடிகர் சீயான் விக்ரம்.
சீயான் விக்ரம்- துஷாரா விஜயன் நடிப்பில் வெளியான வீர தீர சூரன் நீதிமன்ற சிக்கல்களை எல்லாம் தாண்டி வெளியாக் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. தாமதமாக வந்தாலும் ரசிகர்களின் கொண்டாட்டங்களுக்கு தீனி போட்டுக் கொண்டிருக்கிறார் சீயான் விக்ரம்.

திண்டுக்கல் விசிட்
முன் எப்போதும் இல்லாத வகையில் இந்த முறை சீயான் விக்ரம் திண்டுக்கல் பக்கம் விசிட் அடித்துள்ளார். திண்டுக்கல் உமா ராஜேந்திரா தியேட்டரில் நடிகர் சீயான் விக்ரம், வீர தீர சூரன் திரைப்படத்தை ரசிகர்களுடன் கண்டு களித்தார்.
திண்டுக்கல் தியேட்டரில் அதகளம்
திரையரங்குக்குள் சீயான் விக்ரம் உள்ளே செல்ல முடியாத அளவுக்கு அதிர்வேட்டுகள் முழங்க, ரசிகர்கள் பட்டாளம் நெருக்கியடித்தது. ஒரு கட்டத்தில் உமா ராஜேந்திரா திரையரங்க மாடியின் ஜன்னல் கண்ணாடிகளை ரசிகர்கள் ஆர்வ கோளாறில் அடித்து நொறுக்கினர். இதனால் நொந்து போன சீயான் விக்ரம், காரில் ஏறி நின்று ரசிகர்களிடம் பேசி வழிவிடுமாறு கேட்டுக் கொண்டார். இதனையடுத்தே திரையரங்குக்குள் விக்ரமால் நுழையவே முடிந்தது. திரையரங்கில் ரசிகர்களுடன் அமர்ந்து தான் நடித்த படத்தை கண்டு மகிழ்ந்தது சீயான் விக்ரம் டீம்.
நத்தமாடிபட்டி ஜல்லிக்கட்டு
இதனைத் தொடர்ந்து இன்றும் திண்டுக்கல் ஏரியாவில்தான் சீயான் விக்ரம் டீம் வலம் வந்து கொண்டிருக்கிறது. திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே நத்தமாடிபட்டி ஜல்லிக்கட்டு போட்டியை நடிகர் சியான் விக்ரம், நடிகை துஷாரா விஜயன் உள்ளிட்டோர் பார்வையாளர்களோடு பார்வையாளர்களாக கேலரியில் அமர்ந்து பார்த்து ரசித்தனர்; ஜல்லிக்கட்டு மாடுபிடி வீரர்களை கரகோஷம் எழுப்பி உற்சாகப்படுத்தினர்.

உண்மையான வீரதீர சூரர்கள்
நத்தமாடிபட்டி ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியில் பேசிய நடிகர் விக்ரம், நான் முதன்முதலில் ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியை இங்குதான் பார்க்கிறேன்.. உண்மையிலேயே நான் வீரதீரசூரன் அல்ல.. நிஜமான வீரதீரசூரர்கள் யார் என்றால் நீங்கள்தான். இந்த காளைகளை அடக்கும் வீரர்கள் தான் நிஜமான வீரதீர சூரர்கள். உண்மையான ஹீரோக்கள் என்றார். வீர தீர சூரன் படத்தின் நாயகியான துஷாரா விஜயன் பேசும்போது. இது நம்ம ஊர் திருவிழா; அதனால்தான் நேரில் வந்துள்ளேன் என்றார்.
துஷாரா விஜயனின் சொந்த ஊர் பாசம்
சார்பட்டா பரம்பரை மூலம் அதிகம் பேசப்பட்ட நடிகை துஷாரா விஜயனின் சொந்த ஊர் திண்டுக்கல் மாவட்டம் சாணார்பட்டி. இவரது தந்தை திண்டுக்கல் மாவட்ட திமுக பிரமுகரான சாணார்பட்டி விஜயன். கோவையில் படித்துக் கொண்டிருந்த துஷாரா விஜயன், பின்னர் திரைத்துறைக்குள் நுழைந்தார். 2019-ல் போதை ஏறி புத்தி மாறி படத்தில் அறிமுகமானாலும் 2021-ல் வெளியான பா.ரஞ்சித்தின் சார்பட்டா பரம்பரை கதாபாத்திரத்தில்தான் அதிகமாக பாராட்டுகளை அள்ளிக் குவித்தார் துஷாரா விஜயன்.












Click it and Unblock the Notifications