கடவுளே அராஜக ஆட்சியிலிருந்து நாட்டை காப்பாற்று!... விஷால் அதிரடி டுவீட்
கடவுளே அராஜக ஆட்சியிலிருந்து நாட்டை காப்பாற்ற வேண்டும் என்று நடிகர் விஷால் டிவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
சென்னை : விஷாலின் வேட்புமனு நிராகரிப்பு குறித்து தேர்தல் ஆணையம் பதில் அளித்துள்ள நிலையில் அராஜக ஆட்சியிலிருந்து கடவுள்தான் நாட்டை காப்பாற்ற வேண்டும் என்று நடிகர் விஷால் டுவிட்டரில் கருத்து வெளியிட்டுள்ளார்.
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிட விஷாலின் வேட்புமனுவை தேர்தல் அதிகாரி ஆய்வு செய்தார். வேட்புமனுவில் முன்மொழிந்தவர்கள் இருவர் தங்களது கையெழுத்து இல்லை என்று மறுப்பு தெரிவித்ததால் வேட்புமனுவை நிராகரித்ததாக அதிகாரி கூறினார்.
ஆனால் தனக்கு முன்மொழிந்தவர்களை மதுசூதனன் ஆள்கள் மிரட்டியதாக விஷால் குற்றம்சாட்டினார். இதையடுத்து பல்வேறு இழுபறிகளுக்கு மத்தியில் அவரது வேட்புமனு ஏற்கப்பட்டு பின்னர் நிராகரிக்கப்பட்டது.
இதையடுத்து விஷால் சென்னை தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானியிடம் புகார் அளித்தார். மேலும் இந்திய தேர்தல் ஆணையத்திலும் அவர் மனு தாக்கல் செய்தார்.
இந்த மனு மீது தேர்தல் ஆணையம் பதில் அளித்துள்ளது. அதில் தேர்தல் அதிகாரி எடுத்த முடிவே இறுதியானது. விஷாலின் மனுவை பரிசீலனை செய்வது குறித்து தேர்தல் அதிகாரியிடமே அவர் முறையிடலாம் என்று பதில் அளித்துள்ளது.
Still awaiting Democracy to lift its head up again....
— Vishal (@VishalKOfficial) December 7, 2017
God save my beloved country from this anarchy !!#JusticeDelayedIsJusticeDenied
இதையடுத்து நடிகர் விஷால் தனது டுவிட்டரில் ஒரு கருத்தை வெளியிட்டுள்ளார். அதில் அராஜக ஆட்சியிலிருந்து கடவுள்தான் நாட்டை காப்பாற்ற வேண்டும்.
நாட்டில் ஜனநாயகம் மீண்டெழும் என்று காத்திருக்கிறேன் என்று டுவிட்டரில் கருத்து வெளியிட்டுள்ளார்.