பெல்ட்டுக்கு பதில் பாவாடை நாடா கட்டிக்கோங்க... பாஜகவுக்கு குஷ்பு சரமாரி கேள்வி
மாடுகளை கொல்லக் கூடாது என்று தடைவிதித்துள்ள மத்திய பாஜகவினர் பெல்ட்டுக்கு பதிலாக நாடாவை அணிந்துக் கொள்வார்களா என்று நடிகையும் காங்கிரஸ் செய்தித் தொடர்பாளருமான குஷ்பு கேள்வி எழுப்பியுள்ளார்.
சென்னை: மாடுகளை கொல்லக் கூடாது என்று கூறும் மத்திய பாஜகவினர் தங்கள் பேண்ட்டுக்கு பெல்ட்டுக்கு பதிலாக நாடாவை அணிந்து கொள்வார்களா என்று குஷ்பு கேள்வி எழுப்பியுள்ளார்.
எருமை மாடு, பசு மாடு, காளை மற்றும் ஒட்டகம் ஆகியவற்றை இறைச்சிக்காக பயன்படுத்த மத்திய அரசு கடந்த வெள்ளிக்கிழமை தடை விதித்துள்ளது. விவசாய பணிகளுக்காக மட்டும் விவசாயிகள் சந்தைகளில் மாடுகளை விற்க மத்திய அரசு அனுமதி தந்துள்ளது. மத நம்பிக்கைகளுக்காக மாடுகளை பயன்படுத்தவும் தடை விதித்துள்ளது.
இதற்கு நாடு முழுவதும் எதிர்ப்பு வலுத்து வருகிறது. கேரளா, புதுவை ஆகிய மாநிலங்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இந்நிலையில் தனி திராவிடம் கோரி கேரளா மாநிலத்தில் தனி ஹேஷ்டேக் உருவாக்கப்பட்டுள்ளது.
மாட்டிறைச்சிக்கான தடை குறித்து நடிகை குஷ்பு தெரிவிக்கையில், மக்கள் என்ன உண்ண வேண்டும் என்பதை அரசு சொல்லக் கூடாது. என்னுடைய தட்டில் என்ன இருக்க வேண்டும் என்பதை நான்தான் முடிவு செய்ய வேண்டும். மத்திய அரசு அல்ல.
இதைத்தான் உண்ண வேண்டும், இதைத்தான் உடுத்த வேண்டும், இதைத் தான் படிக்க வேண்டும் என்று கட்டாயப்படுத்தும் உரிமை யாருக்கும் இல்லை. உலகிலேயே இந்தியாதான் மாட்டிறைச்சி ஏற்றுமதியில் முன்னணியில் இருக்கிறது.
தாவரங்களுக்கு உயிர் உண்டு என்பதால் அதையும் தடை செய்தால் பாஜகவினர் யாரும் உண்ணாமல் இருக்க முடியுமா?, தோல் செருப்புகள் அணியாமல் வெறுங்காலில் நடக்க முடியுமா?, பேண்டு பெல்ட்டுக்கு பதில் நாடாவை கட்டிக் கொள்ள முடியுமா? என்று சரமாரியாக கேள்வி எழுப்பினார் குஷ்பு.