ரூ.4.97 கோடி வரி ஏய்ப்பு? நடிகை ராதிகா, சரத்குமாரிடம் துருவித்துருவி விசாரித்த வருமான வரித்துறை
வருமான வரித்துறை விசாரணையின் போது ரூ.497 கோடி வரி ஏய்ப்பு செய்ததாக சரத்குமாரும், ராதிகாவும் ஒப்புதல் அளித்துள்ளதாக வருமான வரித்துறை தகவல்கள் தெரிவிக்கின்றன.
சென்னை: ராடன் நிறுவனத்தில் நடைபெற்ற வருமான வரித்துறையினரின் சோதனையை தொடர்ந்து அங்கு கைப்பற்றப்பட்ட முத்திய ஆவணங்கள் தொடர்பாக விளக்கம் அளிக்க நடிகர் சரத்குமாருடன் அவரது மனைவி ராதிகாவும் ஆஜராகி உள்ளனர். அவர்களிடம் வருமான வரித்துறை அதிகாரிகள் 5 மணிநேரமாக தீவிர விசாரணை நடத்தினர்.
ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலையொட்டி, வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா, பரிசுப் பொருள்கள் வழங்கப்படுவதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டின.

இதைத் தொடர்ந்து கடந்த வெள்ளிக்கிழமை தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், முன்னாள் எம்பி சிட்லபாக்கம் ராஜேந்திரன், நடிகர் சரத்குமார், எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்கழக துணை வேந்தர் கீதாலட்சுமி ஆகியோரது வீடுகளிலும், அலுவலகங்களிலும் வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டனர்.
வருமான வரித்துறையினர் அனுப்பிய சம்மனின்படி, விஜயபாஸ்கரும், சரத்குமாரும், ராஜேந்திரனும் நுங்கம்பாக்கத்தில் உள்ள வருமான வரித்துறை அலுவலகத்தில் திங்கள்கிழமை ஆஜராகினர் விளக்கம் அளித்தனர். இந்த நிலையில், நடிகை ராதிகாவுக்கு சொந்தமான சென்னை தேனாம்பேட்டையில் உள்ள ராடன் மீடியா ஒர்க்ஸ் அலுவலகத்திலும் வருமான வரித்துறை அதிகாரிகள் நேற்று சோதனை மேற்கொண்டனர். அங்கிருந்த ஆவணங்களை ஆய்வு செய்தனர்.
இதைத் தொடர்ந்து வருமான வரித்துறையினரின் உத்தரவின் பேரில் நடிகை ராதிகாவும், சரத்குமாரும் நுங்கம்பாக்கத்தில் உள்ள வருமான வரித்துறை அலுவலகத்தில் இன்று ஆஜராகினர். அவர்களிடம் சுமார் 5 மணிநேரமாக வருமான வரித்துறை அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தினர்.
இந்த விசாரணையின் போது ரூ.497 கோடி வரி ஏய்ப்பு செய்ததாக சரத்குமாரும், ராதிகாவும் ஒப்புதல் அளித்துள்ளதாக வருமான வரித்துறை தகவல்கள் தெரிவிக்கின்றன. இதையடுத்து அவர்கள் இருவரும் வருமான வரித்துறை அலுவலகத்தில் இருந்து கிளம்பிச் சென்றனர்.












Click it and Unblock the Notifications