மீண்டும் உடைந்த அதிமுக.. அம்மா அணியும் காலி... எடப்பாடி - தினகரன் கோஷ்டிகளாக பிளவு!
அதிமுக அம்மா அணி இரண்டாக பிளவு பட்டுள்ளது. டிடிவி தினகரனை அமைச்சர்கள் ஒதுக்கி வைத்துள்ள நிலையில் சில எம்எல்ஏக்கள் தினகரனை ஆதரித்துள்ளனர்.
சென்னை: அதிமுக அம்மா அணி இரண்டாக பிளவு பட்டுள்ளது. முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் அமைச்சர்கள் சில எம்எல்எக்களும், டிடிவி தினகரனுக்கு சில எம்எல்ஏக்களும் ஆதரவு அளித்துள்ளதால் அந்த அணி உடைந்துள்ளது.
அதிமுக ஏற்கனவே ஒபிஎஸ் அணி சசிகலா அணி என இரண்டாக பிளவுபட்டது. இப்போது சசிகலா அணியில் இருந்த அமைச்சர்களும், எம்எல்ஏக்களும் இரண்டாக பிளவு பட்டுள்ளது.
சசிகலா, டிடிவி தினகரனை ஒதுக்கி வைத்தால் மட்டுமே பேச்சுவார்த்தைக்கு சம்மதிப்போம் என்று ஓபிஎஸ் கூறியதை அடுத்து பரபரப்பு அதிகரித்தது. இந்த நிலையில் டிடிவி தினகரன் ஆதரவு எம்எல்எக்கள் ஓ.பன்னீர் செல்வத்திற்கு எதிராக கருத்து கூறினர். எம்எல்ஏ வெற்றிவேல், டிடிவி தினகரனை விலக்கி வைத்து விட்டு எதையும் முடிவு செய்ய முடியாது என்றார்.
அமைச்சர்கள் ஆலோசனை
இந்த நிலையில் தலைமைச் செயலகத்தில் அமைச்சர்கள் திடீர் ஆலோசனை நடத்தினர். அப்போது டிடிவி தினகரனை சந்தித்த சில எம்எல்ஏக்கள் நாங்கள்தான் உண்மையான அதிமுக என்றனர். 122 எம்எல்ஏக்களும் ஒற்றுமையாக இருப்பதாக தெரிவித்தார்.
டிடிவி தினகரனுக்கு கல்தா
இந்த நிலையில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் வீட்டில் அமைச்சர்கள் கூடி ஆலோசனை நடத்தினர். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய ஜெயக்குமார், டிடிவி தினகரன் குடும்பத்தினரை ஒதுக்கி வைப்பதாக கூறினார்.
அமைச்சர்கள் முடிவு
கட்சியைக் காப்பாற்றவும் இரட்டை இலையை மீட்பதற்காகவே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக ஜெயக்குமார் தெரிவித்தார். எடப்பாடி பழனிச்சாமி வீட்டில் நடைபெற்ற ஆலோசனையின் போது அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், எஸ்.பி. வேலுமணி, செங்கோட்டையன் ஆகியோர் உடன் இருந்தனர்.
டிடிவி தினகரனுக்கு ஆதரவு
அமைச்சர்களின் கருத்துக்கு சாத்தூர் எம்எல்ஏ சுப்ரமணியன், ஆண்டிபட்டி எம்எல்ஏ தங்கத்தமிழ் செல்வன், பெரம்பூர் எம்எல்ஏ வெற்றிவேல் ஆகியோர் எதிர்ப்பு தெரிவித்தனர். எங்களுக்கு எல்லாமே டிடிவி தினகரன்தான் என்றும் அவர் சொல்வதைத்தான் கேட்போம் என்றும் கூறினர். இதன் மூலம் கட்சி பிளவு பட்டது உறுதியானது. ஏற்கனவே இரண்டாக பிளவு பட்ட அதிமுக இப்போது மூன்றாக பிளவுபட்டுள்ளது. ஆக அதிமுக அம்மா அணியும் உடைந்து காலியாகிவிட்டது.