தினகரனுக்கு குக்கர் ஒதுக்க முதல்வர் தரப்பு எதிர்ப்பு - சுப்ரீம் கோர்ட்டில் அப்பீல்
டெல்லி ஹைகோர்ட் உத்தரவை எதிர்த்து முதல்வர் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு
சென்னை: டிவி.தினகரனுக்கு குக்கர் சின்னம் தரப்பட்டதை எதிர்த்தும், புதிய பெயர் ஒதுக்கீடு செய்வதையும் எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் அதிமுக சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது
ஆர்கே.நகர் இடைத்தேர்தலில் சுயேச்சையாக குக்கர் சின்னத்தில் போட்டியிட்டு தினகரன் வெற்றி பெற்றார். இதை அடிப்படையாக கொண்டு தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் உட்பட எதிர்வரும் அனைத்து தேர்தல்களிலும் பயன்படுத்த குக்கர் சின்னத்தை நிரந்தரமாக தங்களுக்கே ஒதுக்க வேண்டும் என கோரி டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கில் தீர்ப்பளித்த நீதிபதி ரேகா பாலி, தமிழகத்தில் உள்ளாட்சி மற்றும் அடுத்து வரும் அனைத்து தேர்தல்களிலும் போட்டியிட தனி அணி பெயரையும், குக்கர் சின்னத்தையும் ஒதுக்க வேண்டும் என்ற கோரிக்கையை நீதிமன்றம் ஏற்கிறது. மேலும், டிடிவி.தினகரனுக்கு குக்கர் சின்னத்தையும், அவர் குறிப்பிட்டு தெரிவித்துள்ள மூன்று கட்சி பெயர்களில் ஏதாவது ஒன்றை அடுத்த 3 வாரங்களில் தலைமை தேர்தல் ஆணையம் ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று தீர்ப்பளித்தார்.
குக்கர் சின்னம் ஒதுக்க தீர்ப்பு
மேலும், மேற்கண்ட மூன்று கட்சி பெயர்களை தவிர வேறு ஏதாவது ஒரு பெயரை அவர் குறிப்பிட்டு தெரிவித்தாலும் அதையும் தேர்தல் ஆணையம் பரிசீலிக்க வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து, டிடிவி.தினகரனுக்கு விரைவில் குக்கர் சின்னத்தையும், தனி கட்சி பெயரையும் தேர்தல் ஆணையம் ஒதுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தினகரன் கேட்ட கட்சிகள்
அனைத்திந்திய அம்மா திராவிட முன்னேற்ற கழகம், எம்ஜிஆர் அம்மா முன்னேற்ற கழகம், அம்மா எம்ஜிஆர் முன்னேற்ற கழகம் ஆகிய பெயர்களில் ஏதாவது ஒரு பெயரை ஒதுக்குமாறு டெல்லி உயர் நீதிமன்றத்தில் டிடிவி. தினகரன் குறிப்பிட்டுள்ளார்.
இரட்டை இலை வழக்கு
அதிமுக கட்சி பெயர் மற்றும் இரட்டை இலை தொடர்பான வழக்கு நிலுவையில் உள்ளது. வழக்கை தொடர்ந்து நடத்தி இரட்டை இலை சின்னத்தையும், கட்சியையும் மீட்போம். அதுவரை நடைபெறும் தேர்தல்களில் குக்கர் சின்னத்தை பயன்படுத்துவோம் என்று கூறியிருந்தார் தினகரன்.
முதல்வர் தரப்பு அப்பீல்
மதுரை மாவட்டம் மேலூரில் நாளைய தினம் புதிய அமைப்பின் பெயரை அறிவித்து கொடியை ஏற்றி வைக்கப் போகிறார் டிடிவி தினகரன். அதிமுக தொடர்பான எந்த பெயரையும் தினகரனுக்கு விட்டுத்தர மாட்டோம் என்று அமைச்சர்கள் கூறி வந்தனர். இந்த நிலையில் தினகரனுக்கு குக்கர் சின்னம் ஒதுக்க உத்தரவிட்டதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் அப்பீல் செய்யப்பட்டுள்ளது.
குக்கரை எதிர்க்கும் முதல்வர்
டிடிவி தினகரனுக்கு புதிய கட்சி பெயர் ஒதுக்கீடு செய்வதையும் எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. தினகரன் அணிக்கு குக்கர் சின்னத்தையும் கட்சி பெயரையும் உயர்நீதிமன்றம் ஒதுக்கியது, தேர்தல் ஆணைய சட்ட விதிகளுக்கு எதிரானது என முதல்வர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.