உள்ளாட்சித் தேர்தல்… சமத்துவ மக்கள் கட்சிக்கு இடம் ஒதுக்க அதிமுகவில் கடும் எதிர்ப்பு
திருநெல்வேலி: நெல்லை மாநகராட்சியில் சமத்துவ மக்கள் கட்சிக்கு இடம் ஒதுக்க அதிமுகவினர் கடுத் எதிர்ப்பு தெரிவித்துள்ளதால் சமக நிர்வாகிகள் திகில் அடைந்துள்ளனர்.
நெல்லை மாநகராட்சிக்கு போட்டியிட உள்ள வேட்பாளர் பட்டியலை அதிமுக தலைமை அறிவித்துவிட்ட நிலையில், வேட்பாளர்களும் தங்களது மனுக்களை தாக்கல் செய்து விட்டனர். இதில் 47வது வார்டில் போட்டியிட உள்ள அதிமுக வேட்பாளர் மகேஸ்வரியும் அடக்கம்.
இந்நிலையில், 47வது வார்டை சமத்துவ மக்கள் கட்சிக்கு ஒதுக்க கோரி அக்கட்சியினர் தலைமை கழகத்திடம் பேச்சு வார்த்தை நடத்தி வருகின்றனர். மேலும் சமத்துவ மக்கள் கட்சியின் நெல்லை பகுதி செயலாளர் ஸ்ரீதர் ராஜனின் மனைவியும் அதே வார்டில் மனு தாக்கல் செய்துள்ளார். இதனால் 47வது வார்டில் குழப்பம் ஏற்பட்டுள்ளது.
இதனையடுத்து, 47வது வார்டில் அதிமுகதான் போட்டியிட வேண்டும் என்று அதிமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் எம்.பி. விஜிலா சத்தியானந்த் வீட்டின் முன்பு திரண்டனர். அப்போது, நிர்வாகிகளிடம் பேசிய விஜிலா சத்தியானந்த், சமத்துவ மக்கள் கட்சிக்கு வார்டு ஒதுக்கப்படுவது குறித்து இதுவரை எவ்வித தகவலும் மேலிடத்திலிருந்து வரவில்லை என்று தெரிவித்துள்ளார். மேலும், நெல்லை மாநகராட்சியின் 14வது வார்டை சமத்துவ மக்கள் கட்சிக்கு கொடுக்க மேலிடத்திற்கு பரிந்துரை செய்துள்ளோம் என்றும் மேலிடம் எடுக்கும் முடிவுக்கு அனைவரும் கட்டுபட்டு செயல்பட வேண்டும் என்றும் கூறி அதிமுக நிர்வாகிகளை சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தார் விஜிலா சத்தியானந்த் எம்.பி.