குழப்பத்தில் இருக்கும் அதிமுக தொண்டர்கள்... யார் தலைமையை ஏற்பது என திண்டாட்டம்!
அதிமுகவல் தலைமையில்லாமல் போனதால் இப்போது உருவாகியிருக்கும் 3 தலைமைகளில் எந்தத் தலைமையின் கீழ் செயல்படுவது என்ற குழப்பத்தில் தொண்டர்கள் உள்ளனர்.
சென்னை : அதிமுகவில் 3 தலைவர்கள் உருவாகியுள்ளதால் எந்தத் தலைமையை ஏற்பது என்ற குழப்ப நிலைக்கு தொண்டர்கள் தள்ளப்பட்டுள்ளனர்.
அதிமுகவில் ஜெயலலிதா என்ற சக்தி இருந்த வரை கப் சிப் என்று வாய் மூடிக்கிடந்தவர்கள் எல்லாம் இப்போது நாங்கள் தான் அதிகார மையம் என்பதை நிலைநாட்டத்துடிக்கின்றனர். இது தற்போது தலைமைப் பொறுப்பிற்காக முண்டியடிக்கும் 3 பேருக்குமே பொருந்தும் எனலாம்.
எம்ஜிஆரால் தோற்றுவிக்கப்பட்ட அதிமுக கண்டிராத தலைமைச் சண்டையே கிடையாது. கட்சியை தோற்றுவித்த எம்ஜிஆரின் மறைவிற்குப் பிறகும் எம்ஜிஆரின் மனைவி ஜானகியம்மாள், ஜெயலலிதா இருவருக்கும் இடையே கட்சியை யார் கைப்பற்றுவது என்ற போட்டி இருந்தது. இறுதியில் ஜானகியம்மாளை தோற்கடித்து கட்சியை கைப்பற்றினார் ஜெயலலிதா.
ஆனால் தற்போது அதிமுகவில் 3 தலைமை உருவாகியுள்ளது, இதில் என்ன கொடுமை என்றால் எல்லோருமே ஒற்றுமையே அதிமுகவின் பலம் என்று சொல்லிக்கொண்டு தனித் தனியாக செயல்பட்டு கட்சியை பலவீனப்படுத்துவதாகக் கருதுகின்றனர் தொண்டர்கள்.
ஓ.பிஎஸ் சிறந்த தலைவரா?
அதிமுகவில் இருந்து பிரிந்து வந்து ஓ.பன்னீர்செல்வம் தனியாக செயல்படத் தொடங்கி மக்களை சந்திக்கும் பிரச்சாரத்தில் இறங்கினார். ஓ.பன்னீர்செல்வம் ஏற்கனவே முதல்வராக இருந்துள்ளதால் மக்களுக்கு அந்த அறிமுகம் இருக்கிறது, ஆனால் அப்போதும் கூட ஜெயலலிதா சொல்படியே செயல்படுகிறார் ஓ.பிஎஸ் என்பதால் கட்சித் தலைவராக அவரின் செயல்பாடு எப்படி இருக்கும் என்பது தொண்டர்களுக்குத் தெரியவில்லை.
கட்சியை வளர்ப்பாரா ஈபிஎஸ்?
இதே போன்று சசிகலாவால் முதல்வராக அறிமுகம் செய்யப்பட்டவர் எடப்பாடி பழனிசாமி. பிப்ரவரி மாதம் அவர் பொறுப்பேற்றது முதல் ஆட்சி நடக்கிறது, ஆனால் பெரிய அளவில் மக்களைக் கவரும் அம்சங்கள் எதையும் செய்துவிடவில்லை என்ற கருத்து மக்கள் மத்தியிலும் தொண்டர்கள் மத்தியிலும் நிலவுகிறது. மேலும் தினகரன் சிறைக்கு சென்றது முதல் மத்திய அரசுடன் தொடர்ந்து நெருக்கம் காட்டி வரும் முதல்வர் பழனிசாமி மத்திய அரசுக்கு சார்பாக நடந்து ஆட்சியை தக்கவைத்துக் கொள்வதிலேயே கவனமாக இருக்கிறார் என்று பார்க்கப்படுகிறது. எனவே அவரின் தலைமையின் கீழ் செயல்பட்டால் கட்சிக்கு அது வளர்ச்சி கொடுக்குமா என்று சந்தேகிக்கின்றனர் தொண்டர்கள்.
அச்சுறுத்தும் வழக்குகள்
சசிகலா குடும்ப அரசியல் அதிமுகவில் இருக்கக் கூடாது என்பதே ஜெயலலிதா காலத்தில் இருந்தே தொண்டர்கள் மனதில் இருக்கும் ஒரு விஷயம். ஆனால் ஜெயலலிதா மறைவிற்குப் பிறகு சசிகலா குடும்பத்தைத் தவிர யாரும் அதிமுகவை வழிநடத்த முடியாது என்பது போன்ற தோற்றத்தை உருவாக்கி தொண்டர்கள் மனதில் இடம்பிடிக்க பார்த்தனர். எனினும் ஊழல் வழக்குகளில் சிக்கித் திளைத்துக் கொண்டிருக்கும் தினகரன் எப்படி கட்சியை வழிநடத்துவார், திடீரென அவருக்கு சட்டரீதியான தண்டனை எதுவும் கிடைத்துவிட்டால் பிறகு கட்சித் தலைமைக்கு மீண்டும் ஒரு வெற்றிடம் ஏற்படுமே என்றும் கருதுகின்றனர் தொண்டர்கள்.
குழப்பத்தில் தொண்டர்கள்
தினகரனுக்கு இருக்கும் செல்வாக்கு என்ன என்பதை அறிந்து கொள்ள அவரே நடத்தும் ஆகஸ்ட் 14 முதல் தொடங்கும் சுற்றுப்பயணம் இதற்குப் பதில் சொல்லும். எது எப்படியாக இருந்தாலும் 'ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு' என்பதை மறந்து நானே ராஜா நானே மந்திரி என மூன்று தலைவர்களும் எடுப்பதால் எந்தத் தலைமையை ஏற்பது என்ற குழப்பத்தில் உள்ளனர் தொண்டர்கள்.
கலங்கடிக்கும் தலைமை போட்டி
இரட்டை இலை என்றால் எம்ஜிஆர் கட்சி என்று இன்றைய காலகட்டத்திலும் நம்பும் மூத்த குடிமக்கள் இன்னும் கிராமப்புறங்களில் இருக்கத் தான் செய்கிறார்கள். ஆனால் அவர்களையே கலங்கடிக்க வைக்கிறது அதிமுக தலைமை யார் என்ற போட்டி?