யாருப்பா அங்கே ரகசிய கூட்டம் போடுறது... அதிமுகவினரை கண்காணிக்கும் பறக்கும் படை
நெல்லை : தேர்தல் வெற்றிக்கான வியூகம் குறித்து நெல்லை மாவட்டத்தில் அதிமுக மாவட்ட செயலாளர்கள் தலைமையில் ரகசிய கூட்டம் நடைபெற்றது. பூத் ஏஜென்ட்களுக்கு பணம் விநியோகம் செய்ய இருப்பதாக தகவல் பரவியதை அடுத்து பறக்கும்படை அதிகாரிகள் கண்காணித்தனர்.
தமிழக சட்டசபைத் தேர்தலுக்கு இன்னும் 46 நாட்கள் உள்ளன. ஏப்ரல் 22ம்தேதி வேட்பு மனுத்தாக்கல் தொடங்குவதால் அனைத்து அரசியல்
கட்சிகளும் வேட்பாளர்களை தேர்வு செய்யும் பணியில் மும்முரம் காட்டி வருகின்றன.
தமிழகத்தில் 5 முனை போட்டி ஏற்பட்டுள்ளது. எனினும் பிரதான கட்சிகளான திமுக, அதிமுக, மக்கள் நலக்கூட்டணி - தேமுதிக இடையே தான் நேரடியாக போட்டி நிலவுகிறது.
திமுகவில் காங்கிரஸ், முஸ்லிம் லீக் உள்ளிட்ட கட்சிகள் இடம் பெற்றுள்ளன. அதிமுக 8 சிறு கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளது. 234 தொகுதியிலும் இரட்டை இலைச் சின்னத்தில் அதிமுக போட்டியிலாம் என்ற தகவல் பரவி வருகிறது.
அதிமுகவில் பெரும்பாலும் புதுமுகங்களுக்கே வாய்ப்பு கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. அதிமுக பணம் மற்றும் அதிகாரத்தை பயன்படுத்தி வாக்காளர்களை கவர இருப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டுகின்றன.
இந்நிலையில் மாநிலம் முழுவதும் அதிமுகவினர் ரகசிய கூட்டம் நடத்தி வருகின்றனர். மாவட்ட செயலாளர்கள் தலைமையில் ஒன்றிய, நகர
நிர்வாகிகள் மற்றும் பூத் கமிட்டி நிர்வாகிகள் கலந்து கொண்டனர். நெல்லை மாவட்டத்தில் அம்பை, சேரன்மகாதேவி ஒன்றியங்களில் ரகசிய கூட்டம் நடந்தது.
அப்போது ஒவ்வொரு வார்டிலும் எத்தனை பூத்கள் உள்ளன. எவ்வளவு வாக்காளர்கள் இருக்கின்றனர். இதில் அதிமுகவினர் எத்தனை பேர், பிற கட்சியினர், நடுநிலையாளர்கள் எத்தனை பேர்? போன்ற விவரங்கள் அடங்கிய பட்டியலை பூத் ஏஜென்ட்களுக்கு விநியோகம் செய்துள்ளனர்.
இதற்கிடையில் அங்குள்ள திருமண மண்டபங்களில் பூத் ஏஜென்ட்களுக்கு பணம் விநியோகம் செய்ய இருப்பதாக தகவல் பரவியது. இதையடுத்து தேர்தல் பறக்கும் படையினர் திருமண மண்டபங்களை ரகசியமாக கண்காணித்தனர். இந்த சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டது.