அதிமுகவும், திமுகவும் தொகுதிக்கு ரூ.10 கோடி பணப்பட்டுவாடா: அன்புமணி திடுக் புகார்
சென்னை: பென்னாகரம் தொகுதியில் தி.மு.க. மற்றும் அ.தி.மு.க. பணப்பட்டுவாடாவை துவக்கிவிட்டதாக பாமக முதல்வர் வேட்பாளர் அன்புமணி குற்றம்சாட்டியுள்ளார். பணப்பட்டுவாடாவை தடுக்க தேர்தல் ஆணையம் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார். அதிமுக சார்பில் ஒவ்வொரு தொகுதிக்கும் ரூ.10 கோடி ஒதுக்கப்பட்டிருப்பதாகவும், திமுகவிலும் அதே அளவு தொகை ஒதுக்கப்பட்டிருப்பதாகவும் அன்புமணி திடுக்கிடும் புகார் கூறியுள்ளார்.
தருமபுரி மாவட்டம் பென்னாகரம் தொகுதியில் பாமக வேட்பாளராக அன்புமணி போட்டியிகிறார். இந்த தொகுதியில் அன்புமணி தோல்வியடைவார் என்றும் பாமக மூன்றாவது இடத்திற்கு தள்ளப்படும் என்றும் நியூஸ் 7 தினமலர் நடத்திய கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அன்புமணியை தோற்கடிக்கவும், பாமக வேட்பாளர்களை தோற்கடிக்கவும் திமுக, அதிமுக பணப்பட்டுவாடாவை துவக்கி விட்டதாக சில தினங்களுக்கு முன்பு டாக்டர் ராமதாஸ் குற்றம் சாட்டினார்.
இந்த நிலையில் இன்று பென்னாகரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அன்புமணி, தற்போது, பென்னாகரம் தொகுதியில், அதிமுக, திமுக கட்சிகள் பணப்பட்டுவாடாவை துவங்கிவிட்டதாக புகார் கூறினார். தேர்தல் நேரத்தில் பணப்பட்டுவாடாவை தடுக்க தேர்தல் ஆணையம் எந்த முயற்சியும் எடுக்கவில்லை என்றும் குற்றம் சாட்டியுள்ளார்.
ஆளுங்கட்சியும், திமுகவும் பணத்தை கொடுத்து ஓட்டுக்களை வாங்கிவிட முயற்சி செய்கின்றனர். ஆனால் இன்றைக்கு இருக்கிற வாக்காளர்களுக்கு அறிவியல் பூர்வமாக யோசித்து, யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்பது தெரியும் என்றும் கூறினார்.
அன்புமணி அறிக்கை
பணப்பட்டுவாடா தொடர்பாக அன்புமணி வெளியிட்டுள்ள அறிக்கையில், ''தமிழக தேர்தலுக்கு இன்னும் ஒரு வாரம் இருக்கும் நிலையில், அதிமுகவும், திமுகவும் போட்டிப்போட்டுக் கொண்டு பண விநியோகத்தை தொடங்கியுள்ளன. வழக்கம் போலவே தேர்தல் ஆணையம் இதை தடுக்காமல் வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பது கண்டிக்கத்தக்கதாகும்.
அதிமுக - திமுக பணப்பட்டுவாடா
தமிழக சட்டசபை தேர்தலை கொள்கை அடிப்படையிலும், கடந்த காலங்களில் மேற்கொண்ட சாதனைகளின் அடிப்படையிலும் எதிர்கொள்வது தான் அரசியல் கட்சிகளுக்கு அழகாகும். ஆனால், சொல்வதற்கு கொள்கையோ, சாதனைகளோ இல்லாத நிலையில் பணத்தின் உதவியுடன் தேர்தலை சந்திக்கும் நிலைக்கு அதிமுகவும், திமுகவும் தள்ளப்பட்டிருக்கின்றன.
தொகுதிக்கு ரூ. 10 கோடி
அதிமுக சார்பில் ஒவ்வொரு தொகுதிக்கும் ரூ.10 கோடி ஒதுக்கப்பட்டிருப்பதாகவும், திமுகவிலும் அதே அளவு தொகை ஒதுக்கப்பட்டிருப்பதாகவும் செய்திகள் வருகின்றன. இந்தத் தொகை ஒவ்வொரு தொகுதியிலும் உள்ள கிளைகள் வாரியாக கொண்டு செல்லப்பட்டு பதுக்கி வைக்கப்பட்டிருக்கின்றன.
வீடு வீடாக விநியோகம்
வாக்காளர்களுக்கு இரவு நேரத்தில் ஒவ்வொரு வீடாக கொண்டு செல்லப்பட்டு விநியோகிக்கப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது. ஒரே இடத்தில் பதுக்கி வைக்கப்பட்டிருந்தால் அதிகாரிகளுக்கு தெரிந்து விடக்கூடும் என்பதால் பணத்தை பிரித்து பல இடங்களில் பதுக்கி வைத்துள்ளனர்.
கிளை நிர்வாகிகள் வீடுகளில் பணம்
பணக்கார நிர்வாகிகள், பெரிய பதவிகளில் உள்ள நிர்வாகிகள் வீட்டில் பதுக்கி வைத்திருந்தால், அதிகாரிகளுக்கு தெரிந்து பறிமுதல் செய்யப்படலாம் என்பதால் இரு கட்சிகளிலுமே கிளை நிர்வாகிகள் வீடுகளில் தான் பணம் பதுக்கி வைக்கப்பட்டுள்ளது.
ஓட்டுக்கு பணம்
தமிழ்நாட்டில் எந்த தொகுதியிலும் அதிமுகவோ, திமுகவோ மக்களை சந்தித்து கொள்கைகளைக் கூறி வாக்கு சேகரிக்கும் பணியில் ஈடுபடவில்லை. மாறாக தொகுதியில் உள்ள வாக்காளர்கள் அனைவருக்கும் பணத்தைக் கொடுத்து வாங்கி விடலாம் என்ற எண்ணத்தில் பணம் விநியோகிக்கும் வேலையில் தான் ஈடுபட்டிருக்கின்றனர்.
கட்சிகள் கணக்கெடுப்பு
ஒவ்வொரு தெருவிலும் எத்தனை வாக்காளர்கள் உள்ளனர்; அவர்களின் அரசியல் நிலைப்பாடு என்ன?; யாருடைய வாக்குகளையெல்லாம் பணம் கொடுத்து வாங்கலாம் என்பதை இரு கட்சிகளும் கணக்கெடுத்து வைத்துள்ளன.
25 பேருக்கு ஒரு நிர்வாகி
அதனடிப்படையில் 25 வாக்குகளுக்கு ஒரு நிர்வாகி வீதம் நியமிக்கப்பட்டு அவர்கள் மூலம் பொதுமக்களுக்கு பணம் விநியோகிக்கப்பட்டு வருகிறது. தேர்தல் நெருக்கத்தில் கண்காணிப்பு அதிகமாக இருக்கும் என்பதால், அதற்கு முன்பாகவே பண விநியோகத்தை முடித்துவிட வேண்டும் என்ற எண்ணத்தில் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டிருக்கின்றன.
மோசமான கலாச்சாரம்
தமிழகத்தை 50 ஆண்டுகளாக ஆட்சி செய்து வரும் அதிமுகவும், திமுகவும் சாதனைகளைக் கூறி வாக்கு சேகரிப்பதற்கு பதிலாக மக்களுக்கு பணத்தைக் கொடுத்து அவர்களின் வாக்குகளை விலைக்கு வாங்குவது அருவருக்கத்தக்க மோசமான கலாச்சாரம் ஆகும்.
திருமங்கலம் பார்முலா
வாக்குகளை விலை கொடுத்து வாங்கும் கலாச்சாரத்தை 2005 ஆம் ஆண்டில் கும்மிடிப்பூண்டி, காஞ்சிபுரம் இடைத்தேர்தலில் அறிமுகம் செய்து வைத்தது அதிமுக தான். அதன்பின் திருமங்கலம் இடைத்தேர்தலில் இந்த கலாச்சாரத்தை பிரமாண்டமாக மாற்றியது திமுக. இப்போது இரு கட்சிகளின் அடிப்படை பணியாக மாறிவிட்டது இந்த கலாச்சாரம்.
அடிப்படை வசதிகள்
தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் அடிப்படை வசதிகள் கூட செய்து தரப்படுவதில்லை. அத்தகைய குறைகளை கண்டறிந்து சரி செய்வதற்காக 25 வாக்காளர்களுக்கு ஒருவர் என்ற கலாச்சாரத்தை திமுகவும், அதிமுகவும் கடைபிடித்திருந்தால் தமிழகம் வளர்ந்த நாடுகளுக்கு இணையாக முன்னேறியிருந்திருக்கும்.
வெட்கப்பட வேண்டும்
அதை செய்யாத திராவிடக் கட்சிகள், வாக்குக்கு லஞ்சம் கொடுப்பதற்கு மட்டும் இப்படி ஒரு கட்டமைப்பை உருவாக்கியிருப்பது வெட்கப்பட வேண்டிய செயலாகும். ஆனால், இரு திராவிடக் கட்சிகளும் இதற்காக வெட்கப்படாது.
தேர்தல் ஆணையம்
தேர்தலில் அனைத்து கட்சி வேட்பாளர்களுக்கும் சமவாய்ப்பு வழங்கப்பட வேண்டியது தேர்தல் ஆணையத்தின் கடமையாகும். வாக்காளர்களுக்கு பணம் தரப்படுவதை தடுத்தும், வாக்காளர்களுக்கு தருவதற்காக பதுக்கி வைக்கப்பட்டிருக்கும் பணத்தை பறிமுதல் செய்தும் தேர்தல் ஆணையம் அதன் கடமையை நிறைவேற்ற வேண்டும்.
மே 19ம் தேதி தெரியும்
அதேநேரத்தில் திராவிடக் கட்சிகளின் இந்த தந்திரம் இத்தேர்தலில் தமிழக மக்களிடம் எடுபடாது. மக்களுக்கு எந்த நன்மையும் செய்யாமல், அவர்களின் வாக்குகளை விலைகொடுத்து வாங்கி விடலாம் என்ற அதிமுக, திமுகவுக்கு இத்தேர்தலில் மக்கள் பாடம் புகட்டப்போவது உறுதி. அதை வரும் 19ம் தேதி இக்கட்சிகள் உணரும் என்று அன்புமணி கூறியுள்ளார்.