அச்சத்தால் அதிமுக இரு அணிகளும் இணையலாம்.. மனப்பூர்வமாக அல்ல.. திவாகரன் ‘கிளியர்’ பேச்சு
ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ் அணிகள் அச்சத்தின் காரணமாக இணையலாமே தவிர மனப்பூர்வமாக இணைய வாய்ப்பில்லை என்று சசிகலாவின் சகோதரர் திவாகரன் கூறியுள்ளார்.
தஞ்சாவூர்: அதிமுகவில் இருந்து பிரிந்துள்ள ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ் அணிகள் பயத்தின் காரணமாக இணையலாம் என்றும் மனப்பூர்வமாக அவர்கள் இணைய வாய்ப்பில்லை என்றும் சசிகலா சகோதரர் திவாகரன் கூறியுள்ளார்.
தஞ்சையில் டிடிவி தினகரனை சந்தித்தப் பின்னர் திவாகரன் செய்தியாளர்களிடம் பேசியதாவது:

நான் அதிமுகவில் உறுப்பினர் கூட கிடையாது. அதிமுகவின் எந்தப் பதவியிலும் நான் இல்லை. எப்போதுமே அரசியலின் பின்னணியில் இருந்து செயல்படுவதுதான் என் வேலை. அதிமுகவில் இருந்து பிரிந்துள்ள இரு அணிகளும் மனப்பூர்வமாக இணைய வாய்ப்பில்லை. ஏதோ அச்சத்தின் காரணமாக இணையலாம்.
நிராகரிப்பது என்பது அரசியலில் சகஜமான ஒன்றுதான். அதே போன்று பங்காளிக்குள் சண்டை வருவது இயல்பான ஒன்றுதான். என்னிடம் வரும் அதிமுக தொண்டர்களைக் கூட நான் முதல்வரைச் சந்தியுங்கள் என்று சொல்லி அனுப்பி விடுகிறேன்.
அதிமுகவில் கடந்த ஓராண்டாகவே நடவடிக்கை எதுவும் நடக்கவில்லை. மேலூரில் நடைபெற உள்ள எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவில் தொண்டர்களுக்கு தெளிவு பிறக்கும். சசிகலா எங்கு இருக்கின்றாரோ அங்குதான் அதிமுக தொண்டர்கள் இருப்பார்கள்.
நீட் தேர்வு, காவிரி பிரச்சனையில் தமிழர்களின் உரிமை பறிபோய்க் கொண்டிருக்கிறது. தமிழகத்தைப் பொறுத்தவரை முதல்வர் பழனிச்சாமியின் தலைமையில் நல்ல ஆட்சி நடந்து கொண்டிருக்கிறது. அடுத்த 4 ஆண்டுக் காலமும் இந்த ஆட்சி நீடிக்கும். கட்சியைக் காப்பாற்ற நினைக்கும் நாங்கள் ஆட்சியைக் கவிழ்க்க மாட்டோம்.












Click it and Unblock the Notifications