ஓபிஎஸ்ஸை இணைத்தால் ஒழித்துவிடுவார்- லெட்டர் பேடு கட்சியாகவே இருக்கட்டும்.. கொங்கு கோஷ்டியின் வியூகம்
ஓபிஎஸ் அணியுடனான பேச்சுவார்த்தைக்கு முட்டுக்கட்டை போடுவதே கொங்கு அமைச்சர்கள்தான் என கூறப்படுகிறது.
சென்னை: முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வத்தை மீண்டும் கட்சியில் இணைத்தால் தங்களை ஒழிக்கவே பார்ப்பார்... அதனால் அவர் லெட்டர் பேடு கட்சியாகவே இருந்துவிட்டு போகட்டும் என திடமான முடிவில் இருக்கின்றனராம் கொங்கு கோஷ்டி.
எடப்பாடி பழனிசாமி அணியினர் போக்கு காட்டி வருவதால் அதிருப்தியில் இருக்கிறார் ஓ.பன்னீர்செல்வம். நம் கட்சியை வலுப்படுத்தி நாம் யார் என்பதைப் புரிய வைப்போம். ஒட்டுமொத்த தொண்டர்களும் நம் பக்கம்தான் உள்ளனர் என தெம்புடன் இருக்கிறார் ஓபிஎஸ்.
தினகரனையும் பன்னீர்செல்வத்தையும் ஓரம்கட்டிவிட்டு கட்சியை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரும் வேலையில் இறங்கியுள்ளனர் கொங்கு அமைச்சர்கள். இதற்கு எதிராக எம்.எல்.ஏக்கள் வெற்றிவேல், தங்க.தமிழ்ச்செல்வன் ஆகியோர் போர்க்கொடி உயர்த்தினாலும், திரைமறைவு வேலைகள் மூலம் தினகரனை ஒரே அடியாக ஒதுக்கும் வேலைகளைத் தீவிரப்படுத்தியிருக்கிறார் எடப்பாடி பழனிசாமி.

செல்வாக்கை பெற முயற்சி
அ.தி.மு.க அமைச்சர்கள் மற்றும் எம்.எல்.ஏக்கள் மத்தியில் தனக்கென தனிப்பெரும் செல்வாக்கை உருவாக்க போராடி வருகிறார் முதல்வர் எடப்பாடி. சசிகலா குடும்பத்தை ஓரம்கட்டுவதன் மூலம் மட்டுமே செல்வாக்கை வளர்த்துக் கொள்ள முடியும் என அவர் நம்புகிறார். அதேநேரம், ஓபிஎஸ்ஸையும் எதிரியாகத்தான் பார்க்கிறாராம் எடப்பாடி.

ஓபிஎஸ் வந்தால் இடையூறு
அவரைப் பொறுத்தவரை கட்சி அதிகாரம் ஓபிஎஸ்-க்கு போய்விட்டால், வரக் கூடிய தேர்தல்களில் தம்மை அவர் முன்னிறுத்த மாட்டார். மூன்று முறை முதல்வராக இருந்துவிட்டதால், மீண்டும் அந்தப் பதவியைப் பிடிப்பதற்காக அணியைத் திரட்டுவார். எப்படிப் பார்த்தாலும் இடையூறுதான் ஏற்படும்' என எண்ணுகிறாராம்.

லெட்டர் பேடு கட்சியாகவே...
'புரட்சித் தலைவி அம்மா என்ற பெயரில் தனிக் கட்சி நடத்தி வருகிறார் ஓபிஎஸ். அந்தக் கட்சியையே அவர் நடத்திக் கொள்ளட்டும். கட்சியில் இருந்து அவர் நீக்கப்பட்டதை நாம் பரிசீலனை செய்ய வேண்டியதில்லை. நீக்கம், நீக்கமாகவே இருக்கட்டும். ஒருகட்டத்தில் அதுவும் லெட்டர் பேடு கட்சியாக மாறிப் போய்விடும். நாம் அதை அழிக்க வேண்டியதில்லை என்ற மன ஓட்டத்தில் உள்ளது கொங்கு டீம்.

ஓபிஎஸ் கொந்தளிப்பு
அதனால்தான், இணைப்பு என்று அமைச்சர்களே கேள்விகளைப் போட்டு பதில்களை வெளியிடுகின்றனர். எங்களிடம் அதிகாரப்பூர்வமாக யாரும் பேசவில்லைஎன ஓபிஎஸ் பேட்டியளித்தார். இத்தனை மாதம் இல்லாமல் ஊழல் அரசு என திடீரென ஓபிஎஸ் கொதிப்பதற்கும் காரணம், தம்மை கொங்கு மண்டலம் ஓரம்கட்டுகிறது என்பதால்தான். இதனையடுத்தே, புரட்சித் தலைவி அம்மா அணிக்கு நிர்வாகிகளை நியமிக்கும் வேலையில் இறங்கியிருக்கிறாராம் ஓபி.எஸ்.












Click it and Unblock the Notifications