சுப்ரீம் கோர்ட் உத்தரவால் "ஷாக்"... என்னாகுமோ.. ஏதாகுமோ... கடும் பரபரப்பில் அதிமுகவினர்!!
சென்னை: பவானி சிங் விவகாரம் தொடர்பாக உச்சநீதிமன்ற நீதிபதிகளின் முரண்பட்ட தீர்ப்பு மற்றும் அந்த வழக்கு தற்போது 3 பேர் கொண்ட பெஞ்சுக்கு மாற்றப்பட்டுள்ளது ஆகிய காரணங்களால் அதிமுகவினர் இடையே கடும் பதட்டமும், பரபரப்பும் அதிகரித்துள்ளது.
நல்ல தீர்ப்பு வரும், அம்மாவுக்கு விடிவு பிறக்கும் என்ற நம்பிக்கையில் இருந்தவர்களுக்கு இந்தத் தீர்ப்பு பெரும் அதிர்ச்சியளித்துள்ளதாம். இந்த தீர்ப்பால் ஜெயலலிதா வழக்கு மேலும் தாமதமாகும் நிலையும் ஏற்பட்டிருப்பதால் அதிமுகவினரிடையே படபடப்பு அதிகரித்துள்ளது.

சொத்துக் குவிப்பு வழக்கில் பெங்களூரு தனி நீதிமன்றம் அளித்த தீர்ப்பை எதிர்த்து ஜெயலலிதா, கர்நாடக உயர்நீதிமன்றத்தில் அப்பீல் செய்துள்ளார். இது நீதிபதி குமாரசாமி பெஞ்ச்சில் விசாரிக்கப்பட்டு தற்போது தீர்ப்புக்காக காத்திருக்கிறார் ஜெயலலிதா.
பெங்களூரு தனி நீதிமன்றத்தில் அரசுத் தரப்பில் பலர் வாதிட்டு கடைசியாக பவானி சிங் வாதிட்டார். இந்த நிலையில் அப்பீல் வழக்கிலும் அவரே ஆஜரானார். இதற்கு திமுக தரப்பு கடும் ஆட்சேபனை கிளப்பியது. மேலும் கர்நாடக அரசு பவானி சிங் ஆஜராக அனுமதி தரவில்லை. மாறாக, தமிழக அரசின் லஞ்ச ஒழிப்புப் போலீஸ் சார்பில் பவானி சிங்கை ஆஜராக வைத்து விட்டனர்.
இதை எதிர்த்து திமுக பொதுச் செயலாளர் அன்பழகன் கர்நாடக உயர்நீதிமன்றத்தில் பெரும் சட்டப் போராட்டம் நடத்தினார். அங்கு தோல்வியைத் தழுவவே அவர் உச்சநீதிமன்றத்தை நாடினார். அங்கு அவரது மனுவை நீதிபதிகள் லோகூர் மற்றும் பானுமதி ஆகியோர் அடங்கிய பெஞ்ச் விசாரித்தது. விசாரணையின் இறுதியில் நேற்று நீதிபதிகள் தீர்ப்பளித்தனர். ஆனால் இரு நீதிபதிகளும் மாறுபட்ட தீர்ப்பை அளித்தனர்.
நீதிபதி லோகூர், பவானி சிங் ஆஜரானது சட்டவிரோதம் என்று தீர்ப்பளித்தார். பானுமதியோ, சரிதான் என்று தீர்ப்பளித்தார். இதையடுத்து தற்போது இந்த வழக்கு 3 நீதிபதிகள் கொண்ட பெஞ்சுக்கு மாற்றப்பட்டு விட்டது.
இதை அதிமுகவினர் யாரும் எதிர்பார்க்கவில்லை. காரணம், இந்த தீர்ப்பு ஜெயலலிதாவுக்கு சாதகமாக வரும், அதேபோல வருகிற 18ம் தேதி கர்நாடக உயர்நீதிமன்றத்திலும் நீதிபதி குமாரசாமி சாதகமாக தீர்ப்பளிப்பார் என்ற நம்பிக்கையில் இருந்தனர் அதிமுகவினர். தற்போது 2 நீதிபதிகள் பெஞ்ச் மாறுபட்ட தீர்ப்பளித்து அது 3 நீதிபதிகள் பெஞ்ச்சுக்கு மாறியுள்ளதால் அவர்களிடையே திக் திக் அதிகரித்துள்ளது.
மேலும் நீதிபதி குமாரசாமியும் தீர்ப்பை அறிவிக்க 15 நாள் அவகாசம் கேட்டுள்ளார். சுப்ரீம் கோர்ட் தீர்ப்பை அறிய அவரும் காத்திருக்கப் போவதாக தெரிகிறது. எனவே அதிமுகவினர் மத்தியில் பெரும் பரபரப்பு காணப்படுகிறது.
அம்மா வழக்கு என்னாகுமோ, ஏதாகுமோ என்ற பரபரப்பும் தொற்றிக் கொண்டுள்ளது.












Click it and Unblock the Notifications