ரிசார்ட்டில் 5வது நாளாக சிறை.. சசிகலா பேசியும் திருப்தி இல்லாத எம்எல்ஏக்கள்.. தொடரும் கட்டுப்பாடுகள்
கூவத்தூர் ரிசார்ட்டில் 5வது நாளாக அதிமுக எம்எல்ஏக்கள் அடைக்கப்பட்டுள்ளனர். சிறைவாசத்தில் இருக்கும் அவர்களிடம் சசிகலா பேசியும் திருப்தி இல்லையாம். இதனால் கட்டுப்பாடுகள் மேலும் அதிகரிக்கப்பட்டுள்ளதாம்.
சென்னை: கூவத்தூர் சொகுசு ரிசார்ட்டில் அதிமுக எம்எல்ஏக்கள் 5வது நாளாக சிறைவாசம் அனுபவித்து வருகின்றனர். அதிமுக பொதுச் செயலாளர் சசிகலா அவர்களிடம் நேரில் சென்று பேசியும் அதிருப்தியோடுதான் எம்எல்ஏக்கள் இருக்கிறார்கள் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
தமிழக முதல்வர் ஓ. பன்னீர் செல்வத்திற்கு அதிமுக எம்எல்ஏக்கள் ஆதரவு அளித்துவிடப் போகிறார்கள் என்ற அச்சத்தில் அவர்கள் அனைவரும், ஈ.சி.ஆர் சாலையில் உள்ள சொகுதி ரிசார்ட்டில் தங்க வைக்கப்பட்டனர்.
ஆளுநர் முறையான பதில் அளிக்காததாலும், ஓபிஎஸ்ஸூக்கு ஆதரவு பெருகி வருவதாலும் அச்சத்தில் உறைந்து போயுள்ள சசிகலா கோஷ்டி, தொடர்ந்து 5வது நாளாக எம்எல்ஏக்களை சிறைவாசத்தில் வைத்துள்ளது.
கூவத்தூர் சொகுசு ரிசார்ட்
சென்னையில் இருந்து புதுச்சேரிக்கு செல்லும் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ளது கோல்டன் பே ரிசார்ட்ஸ். கடற்கரையை ஒட்டியுள்ள இந்த பண்ணை ரிசார்ட்டில் அனைத்து வசதிகளும் உள்ளன. வெளிநாட்டினர் மற்றும் பெரும் பணக்காரர்கள் தங்கிச் செல்லும் இந்த இடத்தில்தான் மன்னார்குடி அடியாட்கள் அதிமுக எம்எல்ஏக்களை சிறை வைத்துள்ளனர்.
அடியாட்கள் கண்காணிப்பு
எம்எல்ஏக்கள் தங்க வைக்கப்பட்டுள்ள ரிசார்ட்டிற்கு யாரும் சென்று விட முடியாத படி மன்னார்குடி அடியாட்கள் கூவத்தூர் முழுக்க குவிக்கப்பட்டுள்ளனர். ஆட்சியாளர்கள், கட்சிக்காரர்கள் தவிர மற்ற யாரும் அப்பகுதிக்குள் செல்ல முயன்றால் உடனே அவர்கள் தடுத்து நிறுத்தப்பட்டு மிரட்டப்படுகிறார்கள்.
எம்எல்ஏக்கள் மிரட்டல்
அடைக்கப்பட்டுள்ள எம்எல்ஏக்கள் வேறு யாரையும் தொடர்பு கொள்ள முடியாத அளவிற்கு அவர்களது செல்போன்கள் அணைத்து வைக்கப்பட்டுள்ளன. இதையும் தாண்டி செல்போனில் தொடர்பு கொண்டுவிடப் போகிறார்கள் என்ற அச்சத்தில் ஜமார் வண்டிகளும் நிறுத்தப்பட்டன. பின்னர், புகார் எழுந்த நிலையில் ஜாமர் வேன்கள் அந்தப் பகுதியில் இருந்து அகற்றப்பட்டன.
கடும் அதிருப்தி
சசிகலா கோஷ்டியினரின் இந்த அடாத செயல்கள் கடும் விமர்சனத்திற்கும், அதிருப்திக்கு ஆளானது. இதனைத் தொடர்ந்து அப்படி ஒன்றும் நடந்துவிட வில்லை என்பது போல் காண்பிக்க சில ஆதரவு எம்எல்ஏக்களை வைத்து பேட்டி கொடுக்க வைத்தனர்.
நேரில் சசி
பல எம்எல்ஏக்களின் உறவினர்கள் ஆட்கொணர்வு வழக்குகளை தொடர்ந்துள்ளனர். இதனால், எம்எல்ஏக்கள் அடைத்து வைக்கப்பட்ட கூவத்தூர் ரிசார்ட்டில் சசிகலா நேரில் சென்று பேசிவிட்டு வந்தார். என்றாலும், எம்எல்ஏக்களுக்கு திருப்தி இல்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
எம்எல்ஏக்களுக்கு தொடரும் கட்டுப்பாடுகள்
இன்றோடு 5வது நாளாக சிறையில் வைக்கப்பட்டது போல் உள்ள அதிமுக எம்எல்ஏக்களுக்கு கட்டுப்பாடுகள் தொடர்ந்து வருகிறதாம். அவர்களது போன்கள் இன்னும் சுவிட் ஆப் செய்யப்பட்டே உள்ளன. யாரிடம் பேசக் கூடாது, பார்க்கக் கூடாது, குறிப்பாக ஓபிஎஸ் ஆட்கள் கூப்பிட்டால் ஓடிவிடக் கூடாது என்று கடுமையான கட்டுப்பாடுகளை விதித்துள்ளதாம் மன்னார்குடி கோஷ்டி.