தொகுதி வளர்ச்சிக்கு தடையாக உள்ளார்.. அமைச்சர் மீது ஆளும் கட்சி எம்எல்ஏ பரபரப்பு புகார்!
கடலூர் மாவட்ட வளர்ச்சிக்கு அமைச்சர் எம்சி சம்பத் தடையாக உள்ளார் என பண்ருட்டி எம்எல்ஏ சத்யா பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
கடலூர்: மாவட்ட வளர்ச்சிக்கு அமைச்சர் எம்சி சம்பத் தடையாக உள்ளார் என பண்ருட்டி எம்எல்ஏ சத்யா பன்னீர்செல்வம் குற்றம்சாட்டியுள்ளார்.
ஆர்கே நகர் இடைத்தேர்தலில் டிடிவி தினகரன் வெற்றி பெற்றதை தொடர்ந்து முதல்வர் அணியில் இருந்து பலரும் அணி தாவ தொடங்கியுள்ளனர்.
அணி தாவுபவர்களை எச்சரிக்கும் வகையில் தினகரனுக்கு ஆதரவாக செயல்படுபவர்களை கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் துணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் கட்சியிலிருந்து அதிரடியாக நீக்கியுள்ளனர்.
அமைச்சர் மீது எம்எல்ஏ புகார்
இந்நிலையில் அதிமுக எம்எல்ஏ ஒருவர் அமைச்சர் எம்சி சம்பத் மீது பகிரங்கமாக குற்றம்சாட்டியுள்ளார். அமைச்சருக்கு எதிராக ஆளும்கட்சியினரே போர்க்கொடி தூக்கியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
மாவட்ட ஆட்சியரிடம் மனு
தொழிற்துறை அமைச்சர் சம்பத் தொகுதி வளர்ச்சிக்கு தடையாக இருக்கிறார் என பண்ருட்டி எம்எல்ஏ சத்யா பன்னீர்செல்வம் புகார் கூறியுள்ளார். இதுகுறித்து அமைச்சர் எம்சி சம்பத் மீது மாவட்ட ஆட்சியரிடம் பண்ருட்டி எம்எல்ஏ சத்யா பன்னீர்செல்வம் மனு அளித்துள்ளார்.
துரும்பை கூட கிள்ளிபோடவில்லை
தொகுதியில் முடக்கப்பட்ட அரசின் பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தக்கோரி ஆட்சியரிடம் மனு அளித்தார். இதைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், கடலூர் மாவட்டத்துக்குட்பட்ட 9 தொகுதிகளுக்கும் அமைச்சர் ஒரு துரும்பை கூட கிள்ளி போடவில்லை என அவர் குற்றம்சாட்டினார்.
களங்கம் ஏற்படுத்தும் வகையில்
மேலும் தொகுதிப் பணிகளில் ஈடுபடும் எம்எல்ஏக்களையும் பணி செய்ய விடாமல் அமைச்சர் எம்சி சம்பத் தடுப்பதாகவும் அவர் குற்றம்சாட்டினார். ஜெயலலிதா, முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் அமைச்சர் எம்சி சம்பத் நடந்து கொள்வதாகவும் அவர் கூறினார்.
அமைச்சரை கண்டிக்க வேண்டும்
கடலூர் மாவட்ட வளர்ச்சிக்கும் அமைச்சர் சம்பத் தடையாக இருக்கிறார் என்று எம்எல்ஏ சத்யா குற்றம் சாட்டியுள்ளார்.
இதனை முதல்வரும் துணை முதல்வரும் கண்டிக்க வேண்டும் என்றும் பண்ருட்டி எம்எல்ஏ சத்யா தெரிவித்துள்ளார்.
அதிமுகவினர் அதிர்ச்சி
எம்எல்ஏக்கள் எம்பிக்கள் பலர் தினகரன் அணிக்கு தாவி வரும் நிலையில் அமைச்சர் மீது அதிமுக எம்எல்ஏ ஒருவரே சரமாரியாக குற்றம்சாட்டியிருப்பது அதிமுகவினர் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.