காசு, பணம், துட்டு.. அதிமுகவினரின் அலம்பல்கள் "மெனி மெனி"!
சென்னை: அம்மா ஜெயிலுக்குப் போயிருந்த அந்த சில நாட்களில்.. அடேங்கப்பா அதிமுகவினர் செய்த அமளி துமளிக்கென்றே தனியாக ஒரு கின்னஸ் சாதனை அவார்டு வழங்கி பாராட்டிடலாம்.
நிச்சயமாக அதிமுகவினருக்கே கூட மலைப்பாக இருக்கும்.. நாமெல்லாம் இவ்ளோ வேலைகளைச் செய்தோமா என்று. அப்படி ஒரு பெரும் பட்டியலே போடும் அளவுக்கு அவர்கள் செய்த அலப்பறைகளின் அளவு பெருஸ்ஸாகும்.
இதுகுறித்து டைம் பாஸ் ஒரு பட்டியலைப் போட்டு, ஆக மொத்தம் எவ்வளவு செலவு என்பதையும் சொல்லியுள்ளது. வாங்க நாமும் படிச்சுப் பார்க்கலாம்... கிட்டத்தட்ட கல்யாண வீடு, காது குத்து விழாச் செலவுக் கணக்கு போலத்தான் இருக்கிறது இந்த அமளி துமளியின் இன்சைட் ஸ்டோரி.
பால்குடம்.. பறவை காவடி
ஜெயலலிதாவுக்கு இப்போது ஜாமீன் கிடைத்துவிட்டது. ஆனால் அவர் சிறையில் இருந்தபோது 'மக்களின் முதல்வருக்கு அநீதி இழைக்கப்பட்டதாக உண்ணாவிரதங்கள், பால்குடம், பறவைக் காவடி, மொட்டை அடித்தல் என விதவிதமாக தூள் கிளப்பினார்கள்.
கண்ணா, இது தானா வந்ததுல்ல..!
ஆனால் இவை எல்லாமே தானாகச் சேர்ந்த கூட்டம் அல்ல; காசு கொடுத்துச் சேர்த்த கூட்டம் என்பதுதான் மேட்டரே.
"மருதைக்காரங்கே" பவுசே தனிதான்!
அதிக அட்ராசிட்டி செய்தது மதுரைக்காரர்கள்தான். உள்ளூர் அரசியல் புள்ளிகள் ஒவ்வொரு வீட்டுக்கும் சென்று மொட்டை அடிக்க ஆட்களைத் தேடியிருக்கிறார்கள்.
வாங்கண்ணே.. மொட்டை போட்டுக்கலாம்
மொட்டை அடிக்கும் ஒவ்வொருவருக்கும் 500 முதல் 1,000 ரூபாய் வரை வழங்கப்பட்டிருக்கிறதாம். பால்குடம் எடுக்கும் தாய்மார்கள் ஒவ்வொருவருக்கும் புதிய குடம், அதில் நிரப்ப அரை லிட்டர் பால், ஒரு தேங்காய், சுமந்து வருவதற்குக் கூலியாக 1,000 ரூபாய் என அறிவிக்க, மதுரை வீதியெங்கும் மஞ்சள் வீதியாகியிருக்கிறது.
பிரேக்பாஸ்ட்.. லன்ச் ப்ரீ ராசா!
தவிர, இந்த "அறப்போராட்டத்தில்" கலந்துகொள்ளும் அனைவருக்கும் காலை, மதிய உணவுகள் வழங்கப்பட்டிருக்கின்றன. மொட்டை, பால்குடம் தாண்டி அலகு குத்துவதில் ஆர்வமாய் இருந்திருக்கிறார்கள் பலர்.
வேல் சைஸுக்கு தக்கன காசு தருவோம்ய்யா!
காரணம், அலகு குத்துபவர்களுக்கு 1,000 ரூபாய். குத்தும் வேலின் அளவைப் பொறுத்து விலை மாறுபட்டிருக்கிறது. அதிகபட்சமாக வழங்கப்பட்ட தொகை 5,000 ரூபாய்.
பறவைக்குத்தான் காசே!
இருப்பதிலேயே "காஸ்ட்லி"யான போராட்டம் பறவைக் காவடி எடுத்ததுதான். 10,000 ரூபாய்.
அடடே.. சில்லறைப் பார்ட்டியா நீ...!
இதெல்லாம் செட் ஆகாது. ஏதாவது சில்லறை வேலை இருந்தா கொடுங்க பாஸு என இழுத்தவர்களுக்கு கோவில்களில் நடைபெற்ற பிரார்த்தனைகள், யாகங்களில் கலந்துகொள்ள வைத்திருக்கிறார்கள்.
ஆகாரமும் ஆளுக்கு 100 ரூபாய் பணமும்
இதில் பங்கேற்ற "கழகத்தின் போர்வாள்களுக்கு" ஆளுக்கு 100 ரூபாய் பணமும், காலை உணவும் கொடுக்கப்பட்டிருக்கிறது.
மஞ்சா கலர் சேலை
சென்னையில், ஆலந்தூர் தொகுதியில் உள்ள ஆஞ்சநேயர் கோவிலில் பால்குடம் எடுக்கும் விழா நடந்தது. இதில் பங்குபெறும் பெண்களுக்கு மஞ்சள் நிற சேலை, குடம், 1,000 ரூபாய் பணமும் வழங்கப்பட்டிருக்கிறது. உண்ணாவிரதங்களில் பங்கேற்பவர்களுக்கு 200 ரூபாய், இரண்டு வேளை சாப்பாடு வழங்கப்பட்டதாம்
மாரில் அடித்துக் கொண்டு அழுதா.. !
மனிதச் சங்கிலி போன்ற சாதாரண போராட்டங்களுக்கு 200 ரூபாயும் காலை உணவும். முக்கியமான விஷயம். மாரில் அடித்துக்கொண்டு அழுவதற்கு 1,000 ரூபாயாம்.
அந்த அக்கா நல்லா அடிச்சிச்சு.. எக்ஸ்ட்ரா துட்டு கொடு!
தவிர, இதில் அதிகமாக பெர்ஃபார்ம் செய்யும் பெண்களுக்கு எக்ஸ்ட்ரா சார்ஜும் வழங்கப்பட்டிருக்கிறது.
உஷார் பார்ட்டி திருச்சி
திருச்சிக்காரர்கள் ரொம்ப வெவரமானவர்கள். மொட்டையோடு பலரும் நின்று விட்டனர். மன்னார்புரம் பகுதியைச் சேர்ந்த உள்ளூர் அ.தி.மு.க புள்ளி ஒருவர் இதற்காகவே தினசரி காலையில் எழுந்தவுடன் முதல்வேலையாக வண்டியை எடுத்துக் கிளம்பிவிடுகிறார். சிறியவர்களுக்கு 100 ரூபாயும் பெரியவர்களுக்கு 500 ரூபாயும் வழங்கப்பட்டிருக்கிறது. 'தலை தீபாவளி' குஷியோடு வளைத்து வளைத்து தலையை வழித்துக்கொண்டிருக்கிறார்கள்.
கொங்கு மண்டல தங்கங்கள்
கொங்கு மண்டலமும் இதில் சளைக்கவில்லை. உண்ணாவிரதத்தில் கலந்துகொள்பவர்களுக்கு 300 ரூபாயும் இரண்டு வேளை உணவும் வழங்கப்பட்டிருக்கிறது. கோஷம் போடுபவர்களுக்கு 200 ரூபாய், மொட்டை அடித்துக்கொள்ள அதிகபட்சமாக 3,000 ரூபாய் வழங்கப்பட்டிருக்கிறது.
சேலை டீபால்ட்!
ஒரு மணி நேரம் கோஷம் போடுவதற்கு 100 ரூபாய், மனிதச் சங்கிலியில் கலந்துகொண்டவர்களுக்கு 100 ரூபாய். எல்லாப் போராட்டங்களிலும் பெண்களுக்கு ஒரு சேலை என்பது சிறப்புச் சலுகை.
சாதாரணமாக செத்தாலும் அம்மாவுக்காக...!
தவிர, சில கொடுமையான விஷயங்களும் நடந்திருக்கின்றன. சிங்காநல்லூர் பகுதியில் இயற்கை மரணமாக இருந்தாலும் ஜெயலலிதாவிற்காகவே இறந்தேன் என எழுதிக்கொடுத்தால், அதற்காக ஒரு லட்சம் ரூபாயில் இருந்து 5 லட்சம் ரூபாய் வரை கொடுக்கப்படும் என விலை பேசியிருக்கிறார்கள் அம்மாவின் விசுவாசிகள்.
கூலிக்கு மனு கொடுக்க ஒரு கும்பல்
ஜெயலலிதா சிறையில் இருந்த பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறை வளாகத்தில் தினமும் ஜெயலலிதாவைச் சந்திக்க மனு கொடுக்கவே கூலிக்கு ஆளை நியமித்திருக்கிறார்கள். ஒவ்வொரு மனுவுக்கும் 500 ரூபாய் வழங்கப்பட்டதாம்.
ஒப்பாரி வச்சா 2000 ரூவா!
தவிர, அங்கே ஒப்பாரி வைக்கும் பெண்களுக்கு அதிகபட்சமாக 2,000 ரூபாய் வழங்கப்பட்டிருக்கிறது.
ஆமா.. இவங்கெல்லாம் ஏன் பொங்கவே இல்லை!
இதில் புரட்சி, போராட்டம் எனப் பொங்காமல் அடக்கி வாசித்திருக்கும் இரண்டு மாவட்டங்கள் நெல்லை மற்றும் தூத்துக்குடி. நெல்லையில் ஒருநாள் உண்ணாவிரதம் நடந்திருக்கிறது. மொட்டை அடித்துகொள்பவர்களுக்கு 200 ரூபாய் வழங்கப்பட்டிருக்கிறது. மொட்டை அடிக்கப்பட்ட ஆட்களும் இங்கே விரல்விட்டு எண்ணக்கூடிய அளவில்தானாம். தூத்துக்குடி பகுதியில் அதிகபட்சமாக நடந்தது 'மொட்டை'தான். சிறிய அளவில் நடந்த போராட்டங்களில் கலந்து கொண்டவர்களுக்கு 200 ரூபாயும், மொட்டை அடித்துக்கொண்டவர்களுக்கு 500 ரூபாயும் கொடுத்திருக்கிறார்கள்.
அடுத்து யாராச்சும் கைதாவாங்களா.. இந்த வாட்டி "சேலரியையும், சேலையையும்" கூட்டிக் கேட்கனும் என்று இந்த "வேலையில்லா பட்டதாரிகள்" ஆவலுடன் காத்திருப்பதாக ஒரு பேச்சும் நிலவுகிறது.