சசிகலா, தினகரன் நீக்கப்படுவார்களா?.. செப் 12ல் கூடுகிறது அதிமுக பொதுக் குழு!
தொண்டர்களால் எதிர்பார்க்கப்பட்ட அதிமுகவின் பொதுக் குழு கூட்டம் செப்டம்பர் 12-ஆம் தேதி கூடவுள்ளது.
சென்னை: சசிகலா, தினகரனை நீக்குவதற்கு வகை செய்யும் அதிமுகவின் பொதுக் குழு கூட்டம் செப்டம்பர் 12-ஆம் தேதி சென்னையில் கூடுகிறது.
ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் அதிமுக இரு அணிகளாக பிரிந்தது. இந்நிலையில் ஆர்கே நகர் இடைத்தேர்தலின்போது இரட்டை இலை சின்னத்தை தேர்தல் ஆணையம் முடக்கியது.
கட்சி விதிகளின்படி பொதுக் குழு உறுப்பினர்களை கூட்டி சசிகலா பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்படவில்லை. எனவே நியமனம் செல்லாது என்று தேர்தல் ஆணையத்தில் வழக்கு உள்ளது. இதன் தீர்ப்பு எப்போது வரும் என்று தெரியவில்லை
தினகரன் ஆட்டம்
இந்நிலையில் பிரிந்திருந்த இரு அணிகளும் ஒன்றிணைந்துவிட்டன. இதனால் கட்சி தன் கையைவிட்டு போய்விடக் கூடாது என்பதில் தினகரன் தீவிரமாக செயல்படுகிறார். அவர் பங்குக்கு ஆதரவாளர்களை திரட்டி எடப்பாடிக்கு குடைச்சல் கொடுத்து வருகிறார்.
பொதுக் குழுதான் தீர்வு
தினகரன் பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்க சசிகலாவையும் தினகரனையும் கட்சியிலிருந்து நீக்க வேண்டும் என்பதாகும். அதை செய்ய பொதுக் குழுவை கூட்ட வேண்டும் என்பது எடப்பாடியாரின் திட்டமாகும். இதனால் நேற்று அதிமுக எம்எல்ஏ-க்கள், எம்பிக்களை அவசர அவசரமாக கூட்டினார்.
ஆலோசனை
அந்த கூட்டத்தில் 4 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதில் பொதுக் குழு கூட்டுவதும் இடம்பெற்றிருந்தது. இந்நிலையில் செப்டம்பர் 12-ஆம் தேதி பொதுக் குழு கூடுகிறது என அறிவிக்கப்பட்டுள்ளது. அவைத் தலைவர் மதுசூதனன் தலைமையில் நடைபெறவுள்ளது.
எங்கே கூடுகிறது?
சென்னை வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு வெங்கடாசலபதி மண்டபத்தில் செப்டம்பர் காலை 10.30 மணிக்கு நடைபெறவுள்ளது. அதிமுகவில் 2,780 பொதுக்குழு உறுப்பினர்களும், 250 செயற்குழு உறுப்பினர்களும் உள்ளனர். இவர்களில் பெரும்பாலானோர் தங்கள் பக்கம் இருப்பதால், செயற்குழு மற்றும் பொதுக்குழுக் கூட்டத்தை கூட்ட முடிவு செய்து உள்ளனர்.
Recommended Video
அதிமுக விதி என்ன?
அதிமுக விதிப்படி பொதுக் குழு கூட்டுவதற்கு 15 நாள்களுக்கு முன்னர் உறுப்பினர்களுக்கு அழைப்பு விடுக்க வேண்டும். இதனால் இரவோடு உறுப்பினர்களை அழைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதில் சசிகலா, தினகரன் ஆகியோரை நீக்குவது தொடர்பாக முடிவுகள் எடுக்கப்படலாம் என தெரிகிறது.