கோகுல இந்திரா அவுட்... மகளிரணி செயலாளரானார் விஜிலா சத்தியானந்த்
சென்னை: அதிமுகவில் நிர்வாகிகள் மாற்றம் செய்யப்பட்டுள்ள நிலையில் சட்டசபை தேர்தலில் தோல்வியடைந்த முன்னாள் அமைச்சர் கோகுல இந்திராவின் மகளிர் அணி செயலாளர் பதவி பறிக்கப்பட்டுள்ளது. புதிய மகளிர் அணி செயலாளராக விஜிலா சத்தியானந்த் எம்.பி ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். மகளிர் அணி இணைச் செயலாளராக கீர்த்திகா முனியசாமி நியமிக்கப்பட்டுள்ளார்.
சட்டசபை தேர்தலில் அதிமுக வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியைப் பிடித்தது. எனினும், கடந்த தேர்தலைப் போல் வெற்றி பெறவில்லை. தேர்தலில் 9 அமைச்சர்கள் தோல்வியை தழுவினர். இது அதிமுகவுக்கு கடும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது. இதனால் கட்சியை முழுமையாக சீரமைக்க ஜெயலலிதா முடிவு செய்தார். கட்சிக்கு கெட்ட பெயர் ஏற்படுத்திய பலரது பதவியை அதிரடியாக பறித்து உத்தரவிட்டுள்ளார்.
கட்சியின் தலைமை நிலைய செயலாளராக இருந்த செங்கோட்டையன் பதவி பறிக்கப்பட்டு அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமிக்கு வழங்கப்பட்டுள்ளது. பொருளாளர் பதவி கிடைக்கும் என்று எதிர்பார்த்துக்கொண்டிருந்த செங்கோட்டையனின் கட்சி பதவி பறிக்கப்பட்டதால் அவர் சோர்வடைந்து போயுள்ளாராம்.
கோகுல இந்திரா பதவி பறிப்பு
அண்ணாநகர் தொகுதியில் தோல்வியடைந்த முன்னாள் அமைச்சர் கோகுல இந்திராவிடம் இருந்து மகளிர் அணி செயலாளர் பதவி பறிக்கப்பட்டு நெல்லையைச் சேர்ந்த எம்பி விஜிலா சத்யானந்த் நியமிக்கப்பட்டுள்ளார்.
மகளிர் அணி செயலாளர்
கோகுல இந்திராவிற்கு மகளிர் அணி செயலாளர் பதவி உள்ளே வெளியே ஆட்டமாகவே இருக்கிறது. கடந்த 2011ம் ஆண்டு சட்டசபை தேர்தலின் போது மகளிரணி செயலாளராக இருந்தவர் கோகுல இந்திரா. தேர்தலில் வெற்றி பெற்று அமைச்சரான உடன், 2013ம் ஆண்டு அமைப்புச் செயலாளரானார்.
சசிகலா புஷ்பா
அதிமுக இளைஞர் பாசறை, இளம் பெண்கள் பாசறை துணைச் செயலாளராக சசிகலா புஷ்பாவை மகளிரணி செயலாளராக நியமனம் செய்தார் ஜெயலலிதா. கட்சிக்குள் எழுந்த புகைச்சலால், சசிகலா புஷ்பாவிடம் இருந்த மகளிரணி செயலாளர் பதவி பறிக்கப்பட்டது.
கொடுத்து பறித்த ஜெ.,
கடந்த ஜனவரி 6ம் தேதி மீண்டும் மகளிரணி செயலாளர் ஆனார் கோகுல இந்திரா. அமைச்சராக இருந்த அவர், நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் அண்ணா நகர் தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்தார். இதனையடுத்து அவரது கட்சிப்பதவி பறிக்கப்பட்டுள்ளது.
விஜிலா சத்யானந்த்
நெல்லை மேயராக இருந்த விஜிலா சத்தியானந்த் கடந்த 2014ம் ஆண்டு ராஜ்யசபா எம்.பியாக தேர்வானார். நெல்லை மாநகர் மாவட்ட அ.தி.மு.க. மகளிர் அணி செயலாளரும், ராஜ்யசபா அ.தி.மு.க. கொறடாவாகவும் நியமனம் செய்யப்பட்டார் விஜிலா சத்தியானந்த். கடந்த ஏப்ரல் மாதம் அ.தி.மு.க. மகளிர் அணி மாநில இணை செயலாளர் பொறுப்பில் நியமனம் செய்யப்பட்டார். தற்போது மாநில மகளிரணி செயலாளராக பதவி உயர்வு பெற்றுள்ளார்.
கீர்த்திகா முனியசாமி
மகளிர் அணி இணைச் செயலாளராக கீர்த்திகா முனியசாமி நியமிக்கப்பட்டுள்ளார். இவர் முதுகுளத்தூர் சட்டசபை தொகுதியில் அதிமுக வேட்பாளராக போட்டியிட்டார். காங்கிரஸ் கட்சி வேட்பாளர் மலேசியா எஸ்.பாண்டியிடம் தோல்வியடைந்த கீர்த்திகா முனியசாமிக்கு தற்போது கட்சிப்பதவி அளிக்கப்பட்டுள்ளது.