ஓபிஎஸ் அணி வசமாகிறது அதிமுக! மூத்த தலைவர்கள் ஓரணியில் கைகோர்ப்பு- சசிகலா பயங்கர ஷாக்!!
அதிமுகவின் மூத்த தலைவர்கள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் தலைமையிலான அணியில் இணைந்து வருவதால் சசிகலாவுக்கு பயங்கர அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.
சென்னை: அதிமுகவின் முக்கிய நிர்வாகிகள் அனைவரும் அடுத்தடுத்து முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் தலைமையில் அணிதிரள்வதால் சசிகலா தரப்பு பயங்கர அதிர்ச்சியில் உறைந்து போயுள்ளது.
அதிமுக தலைமையை கைப்பற்றிய சசிகலா, முதல்வர் பதவியையும் கபளீகரம் செய்வதை அக்கட்சியினரால்ல் ஏற்க முடியவில்லை. இதனால் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் தலைமையில் அதிமுகவினர் போர்க்கொடி தூக்கியுள்ளனர்.
முதல்வர் ஓபிஎஸ்-க்கு ஆதரவாக அடுத்தடுத்து அதிமுக மூத்த தலைவர்கள், முன்னாள் அமைச்சர்கள், நிர்வாகிகள் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். இதில் உச்சகட்டமாக அதிமுகவின் அவைத் தலைவராக இருக்கும் மதுசூதனனே இன்று முதல்வர் ஓ. பன்னீர்செல்வத்தை நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்துள்ளார்.
அதிமுகவின் முன்னணி அல்லது இரண்டாம் கட்ட தலைவர்களாக இருந்த மதுசூதனன், ஓ. பன்னீர்செல்வம், நத்தம் விஸ்வநாதன், கேபி முனுசாமி, பிஹெச் பாண்டியன், மைத்ரேயன் உள்ளிட்ட பலரும் ஓரணியில் இணைந்துள்ளனர். அதிமுகவின் அவைத் தலைவர் மதுசூதனன்; அதிமுக பொருளாளர் ஓ. பன்னீர்செல்வம் ஆகியோரும் ஓரணியில் கைகோர்த்துள்ளனர்.
அதிமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் நேற்று சசிகலாவுக்கு அருகே அமர்ந்திருந்தவர் மதுசூதனன். சசிகலாவை பொதுச்செயலராக்க முதன் முதலில் முன்மொழிந்தவரும் மதுசூதனன். இன்று அவரும் ஓபிஎஸ்-உடன் கை கோர்த்திருக்கின்றனர். இதனால் ஒட்டுமொத்தமாக அதிமுக, ஓபிஎஸ் அணியின் வசமாகும் என்பது உறுதியாக உள்ளது.