ஆர்.கே. நகரில் அதிமுகவை ஆதரிக்கும் பேச்சுக்கே இடமில்லை - திருநாவுக்கரசர் உறுதி
ஆர்.கே நகர் இடைத்தேர்தலில் அதிமுகவையோ, தினகரனையோ ஆதரிக்கும் பேச்சுக்கே இடமில்ல என்று திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார்.
சென்னை : ஆர்.கே நகர் இடைத்தேர்தலில் காங்கிரஸ் கட்சி திமுகவை மட்டுமே ஆதரிக்கும் என்றும் அதிமுகவையோ, தினகரனையோ ஆதரிக்கும பேச்சுக்கே இடமில்லை என்றும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசர் கூறியுள்ளார்.
இரட்டை இலை சின்னம் தற்போது பிரதமர் மோடியிடம் இருப்பதாக கருதுகிறேன் என்றும் திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார்.
ஆர்.கே. நகர் தொகுதியில் வருகிற ஏப்ரல் 12ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இதனையடுத்து நாளை முதல் வேட்பு மனு தாக்கல் தொடங்க உள்ளது. அதிமுக மற்றும் திமுக தங்கள் கட்சியின் சார்பாக போட்டியிடும் வேட்பாளர்களை இன்று அறிவித்துள்ளது.
தினகரன் கோரிக்கை
அதிமுகவின் துணை பொதுச் செயலாளரும், ஆர்.கே நகரின் அதிமுக வேட்பாளருமான டிடிவி தினகரன் , திமுகதான் தங்களின் எதிரி என்றும் அந்த கட்சியைத் தவிர மற்ற கட்சிகள் அதிமுகாவிற்கு ஆதரவு கொடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
திமுகவிற்கே ஆதரவு
இது குறித்து சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசர், ஆர்.கே நகர் இடைத்தேர்தலில் காங்கிரஸ் கட்சி திமுகவை ஆதரிக்கும். அதிமுகவையோ, தினகரனையோ ஆதரிக்கும பேச்சுக்கே இடமில்லை என்றார்.
மக்கள் நலக்கூட்டணி
மக்கள் நலக்கூட்டணியை நாங்கள் பொருட்படுத்துவதில்லை. தமாகா மட்டுமில்லாமல் வேறு எந்த கட்சி திமுகாவுக்கு ஆதரவு தெரிவித்தாலும் எங்களுக்கு ஆட்சேபனையில்லை என்று தெரிவித்தார்.
இரட்டை இலை
மேலும் அதிமுகவின் இரட்டை இலை சின்னம் தேர்தல் ஆணையதிடமோ அல்லது பன்னீர்செல்வத்திடமோ இல்லை. இரட்டை இலை சின்னம் தற்போது பிரதமர் மோடியின் கையில் இருப்பதாக கருதுகிறேன் என அவர் கூறினார்.