முத்தரையர்களை சமாளிக்க ஸ்ரீரங்கம் வளர்மதிக்கு அமைப்புச் செயலாளர் பதவி கொடுத்த ஜெ.
சென்னை: அ.தி.மு.க. மீதான முத்தரையர்களின் அதிருப்தியை சமாளிக்கும் வகையில் ஸ்ரீரங்கம் சட்டசபை தொகுதி எம்.எல்.ஏவிற்கு அமைப்புச் செயலாளர் பதவி அளித்துள்ளார் பொதுச்செயலாளரும் முதல்வருமான ஜெயலலிதா.
அதிமுக மாநில நிர்வாகிகள் பட்டியலை வெளியிட்டுள்ளார் ஜெயலலிதா. அவைத் தலைவராக மதுசூதனனும் பொருளாளராக ஓ.பன்னீர்செல்வமும் மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளனர். பண்ருட்டி ராமச்சந்திரன், ஸ்ரீரங்கம் எம்எல்ஏ வளர்மதி உள்ளிட்ட 11 பேர் அமைப்புச் செயலாளர்களாக நியமித்துள்ளார். பலருக்கு பதவி கிடைத்திருந்தாலும் ஸ்ரீரங்கம் எம்.எல்.ஏ வளர்மதிக்கு பதவி கிடைத்ததுதான் ஊடகங்களில் பரபரப்பு செய்தியாக உள்ளது.

விஜயபாஸ்கர் மீது புகார்
அ.தி.மு.கவைச் சேர்ந்த புதுக்கோட்டை கறம்பக்குடி ஒன்றிய தலைவரான கெங்கையம்மாள், அவரது கணவரும் கருப்பட்டிப்பட்டி ஊராட்சி தலைவருமான சொக்கலிங்கம் ஆகியோரை அமைச்சர் விஜயபாஸ்கர் திட்டினார் என்பது புகார். அதுவும் கெங்கையம்மாளின் ஜாதி பெயர் சொல்லி விஜயபாஸ்கர் கேவலமாகத் திட்டியதாக முத்தரையர் சமூகத்தினரின் குற்றச்சாட்டாகும்.

கட்சியை விட்டு நீக்கிய ஜெ.
விஜயபாஸ்கரை அமைச்சர் பதவியில் இருந்து நீக்கக் கோரி கடந்த 5ம் தேதி போராட்டம் நடத்தவே, அ.தி.மு.க. மேலிடமோ கெங்கையம்மாள், அவரது கணவர் சொக்கலிங்கம் ஆகியோரை கட்சியைவிட்டே நீக்கியது. இது முத்தரையர் சமூகத்தை அதிர்ச்சி அடைய வைத்தது.

அதிருப்தியில் முத்தரையர்
இதனைத் தொடர்ந்து அ.தி.மு.கவில் உள்ள 5 லட்சம் முத்தரையர்களும் தங்களது உறுப்பினர் அட்டையை தலைமைக் கழகத்தில் ஒப்படைக்கப் போவதாகவும் சட்டசபை தேர்தலில் அ.தி.மு.கவை தோற்கடிக்க வேண்டும் என்றும் தீர்மானம் நிறைவேற்றினர்.

வளர்மதிக்கு அழைப்பு
இந் நிலையில் போயஸ்கார்டனுக்கு எம்.எல்.ஏ வளர்மதியை வரவழைத்த ஜெயலலிதா, ஜாதியை வைத்து போராட்டத்தை தூண்டி விடுறாங்களா? என்று கேட்டதாகவும், நான் எல்லோருக்கும் முதல்வர், யாருக்கு எப்போ என்ன செய்யணும்னு தெரியும் என்று சொன்னதாகவும் கூறப்படுகிறது.

அதிருப்தியை போக்க பதவி
முத்தரையர்கள் அதிருப்தியில் இருப்பதால் அவர்களை சமாதானப்படுத்தும் வகையில், ஆலங்குடி வெங்கடாசலத்திற்கு கொடுத்தது போல அமைப்புச் செயலாளர் பதவி கொடுத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

டோஸ்விட்ட ஜெ
அமைச்சர் விஜயபாஸ்கருக்கு எதிராக போராட்டத்தை தூண்டிவிட்டவர்களையும் நேரில் அழைத்து டோஸ் விட்டாராம். இதனால்தான் எம்.எல்.ஏக்கள் பரஞ்சோதி,சிவபதி ஆகியோர் ஸ்ரீரங்கத்தில் நடைபெற்ற கும்பாபிஷேக விழாவில் கூட பங்கேற்கவில்லையாம்.

பதவி பறிபோச்சே
அதேநேரத்தில் அதிமுக தேர்தல் பிரிவு செயலாளராக சட்டப்பேரவை துணைத் தலைவரான பொள்ளாச்சி ஜெயராமன் இருந்தார். தற்போது அவரிடம் இருந்து தேர்தல் பிரிவு செயலாளர் பதவி பறிக்கப்பட்டு, தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவன தலைவரான உடுமலை கே.ராதாகிருஷ்ணனிடம் வழங்கப்பட்டுள்ளது.
எதுவும் நிரந்தரமில்லை என்ற தத்துவத்துக்கு உதாரணம் தான் இப்போதைய அதிமுக!












Click it and Unblock the Notifications