எச். ராஜாவுக்கு எதிராக அணி திரள்கிறார்கள் வழக்கறிஞர்கள்!
சென்னை: காவல்துறையினர், டிஜிபி, சென்னை உயர்நீதிமன்றம் ஆகியவற்றை நடுத் தெருவில் நின்று படு அசிங்கமாக விமர்சித்துப் பேசிய எச். ராஜாவுக்கு எதிராக வழக்கறிஞர்கள் அணி திரள்கின்றனர்.
காவல்துறையினரையும், டிஜிபியையும் படு மோசமாக விமர்சித்து எச். ராஜா பேசியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதை விட மோசமாக உயர்நீதிமன்றத்தைப் பார்த்து சொல்லக் கூடாத, தகாத வார்த்தையால் விமரா்சித்துள்ளார் எச். ராஜா. இது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
தமிழக வரலாற்றில் இதுவரை யாருமே இப்படி நடுத் தெருவில் நின்று கொண்டு உயர்நீதிமன்றத்தை விமர்சித்ததில்லை. இதனால் சட்டத் துறையினரும் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
இதையடுத்து எச். ராஜா விவகாரத்தை உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதியிடம் முறையிட வழக்கறிஞர்கள் முடிவு செய்துள்ளனர். நாளை பல்வேறு சங்கங்களைச் சேர்ந்த வழக்கறிஞர்கள், தலைமை நீதிபதியை நாளை சந்தித்து முறையிடவுள்ளனர். அவரிடம் எச். ராஜா மீது கோர்ட் அவமதிப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தவுள்ளனர். அதேபோல தமிழக அரசின் தலைமை வழக்கறிஞரிடமும் ஒரு மனு தரவுள்ளனர். அதில் தமிழக அரசு சார்பில் அவதூறு வழக்குத் தொடர கோரிக்கை விடுக்கவுள்ளனர்.
இதுகுறித்து மூத்த வழக்கறிஞர் இளங்கோ கூறுகையில் எச். ராஜா மிகவும் கீழ்த்தரமாக பேசியுள்ளார். நீதிமன்றத்தை அவமதித்துள்ளார். தான் பேசவில்லை என்று அவர் கூறியிருப்பது பொய். அவர்தான் பேசியிருக்கிறார் என்பதை வீடியோவில் பார்த்தாலே தெரிகிறது. எந்த தடயவியல் சோதனைக்கு அதை அனுப்பினாலும் அது உண்மை என்று வரும். எனவே அவர் மீது பொய் பேசியமைக்காகவும் தனியாக வழக்கு தொடுக்கப்பட வேண்டும் என்றார்.
தானாக முன்வந்து வழக்கு?
இதற்கிடையே, எச். ராஜா மீது சென்னை உயர்நீதிமன்றமே தானாக முன்வந்து (சுவோமோட்டோ) வழக்கு தொடருமா என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது. எப்படி இருந்தாலும் எச். ராஜாவை சும்மா விடக் கூடாது. மிகக் கடுமையான நடவடிக்கை எடுத்தால்தான் இதுபோல அடாவடியாக செயல்படுவோரிடையே ஒரு பயம் வரும் என்ற எண்ணம் பொதுமக்களிடையே நிலவுகிறது.