அப்பாடா.. 8 நாட்களுக்குப் பிறகு திரும்பிய ஊழியர்கள்.. இன்று முதல் பஸ்கள் ஓடுகின்றன
வேலைநிறுத்தம் வாபஸ் பெறப்பட்டதால் இன்று போக்குவரத்து ஊழியர்கள் பணிக்கு திரும்பி இருக்கிறார்கள்.
சென்னை: வேலைநிறுத்தம் வாபஸ் பெறப்பட்டதால் இன்று போக்குவரத்து ஊழியர்கள் அனைவரும் பணிக்கு திரும்பி இருக்கிறார்கள். இதனால் அனைத்து பேருந்துகளும் இயக்கப்படுகிறது.
தமிழக அரசு போக்குவரத்து கழக தொழிலாளர்கள் கடந்த 4-ந் தேதியில் தமிழகம் முழுக்க போராட்டம் செய்து வந்தனர். ஊதிய உயர்வு உட்பட 7 அம்ச கோரிக்கைகளை முன்னிறுத்தி இவர்கள் போராடினார்கள். இதனால் தற்காலிக போக்குவரத்து பணியாளர்கள் நியமிக்கப்பட்டு இருந்தார்கள்.
முதலில் இந்த போராட்டம் குறித்த பேச்சு வார்த்தை அனைத்தும் தோல்வியில் முடிந்தது. இந்த போராட்டத்திற்கு எதிராக நேற்று உயர்நீதிமன்றத்தில் நடத்த வழக்கில் தமிழக அரசின் 2.44 சதவீத இடைக்கால ஊதிய உயர்வை ஏற்க சங்கம் ஒப்புக் கொண்டது.
இதனால் போராட்டம் நேற்று கைவிடப்படும் என்று கூறப்பட்டது. அரசு தங்களுடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று ஊழியர்கள கோரிக்கை வைத்தனர். இதற்கு நேற்று தமிழக அரசு ஒப்புக் கொண்டது.
மேலும் அவர்கள் கோரியது போல் ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு செய்ய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இதற்காக ஓய்வு பெற்ற நீதிபதி ஈ. பத்பநாபனை நியமிக்கபட்டுள்ளார்.
மேலும் 0.13 சதவீத வித்தியாசத்தை இன்னும் ஒரு வார காலத்துக்குள் தொழிலாளர்களுடன் பேசி பத்மநாபன் அறிக்கை தாக்கல் செய்யவும் உத்தரவிட்டனர். இதனால் நேற்று இரவு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. தமிழகம் முழுக்க இன்று 100% பேருந்துகள் இயக்கப்படுகிறது.
மேலும் பொங்கல் சிறப்பு பேருந்து முன்பதிவு தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் பொங்கலுக்கு வீட்டிற்கு செல்பவர்கள் நிம்மதி அடைந்து இருக்கிறார்கள்.