தி.மு.க. மா.செ. தேர்தல்.. மீண்டும் கோலோச்சும் 'குறுநிலமன்னர்கள்'! கை கொடுக்காத கருணாநிதி வியூகம்!!
சென்னை: லோக்சபா தேர்தல் தோல்வியைத் தொடர்ந்து மாவட்டங்களைப் பிரித்து, 18 மாவட்ட செயலாளர்களிடம் உறுதிமொழிப் பத்திரங்களை வாங்கி.. தி.மு.க. தலைவர் கருணாநிதியின் இத்தனை வியூகத்தையும் மீறி அக்கட்சியில் 25 ஆண்டுகாலம் 'குறுநிலமன்னர்களாக' இருந்த மாவட்ட செயலாளர்களின் ஆதிக்கம் தொடர் கதையாகி வருவது தொண்டர்களை குமுற வைத்துள்ளது.
லோக்சபா தேர்தலில் தி.மு.க. ஒரு இடத்தில்கூட வெற்றி பெறவில்லை. மாவட்டச் செயலாளர்கள் குறுநிலமன்னர்கள்போல் நடந்து கொள்வதாகவும் இதனால் தான் கட்சிக்கு மிகப்பெரிய தோல்வி ஏற்பட்டது என்றும் தலைமையிடம் தொண்டர்கள் பலரும் புகார் தெரிவித்தனர்.
இதையடுத்து கட்சியில் அதிரடி மாற்றங்கள் செய்யப்பட்டன. 36 மாவட்டங்களாக இருந்த கட்சியின் அமைப்பு 65 ஆக உயர்த்தப்பட்டது. புதிதாக உருவாக்கப்பட்ட மாவட்டங்களில் புதியவர்களை பதவியில் அமர்த்தி அதிகார மையத்தை பரவலாக்கம் செய்யலாம் என கருணாநிதி நினைத்தார்.

வரலாற்றில் முதல் முறையாக..
இதனடிப்படையில் திமுகவின் 30 மாவட்டச் செயலாளர்களுக்கான தேர்தல் சென்னையில் நடந்தது. திமுக வரலாற்றில் முதல் முறையாக 30 மாவட்டங்களுக்கான உட்கட்சி தேர்தல் சென்னையில் நடத்தப்பட்டது.

உறுதிமொழிப் பத்திரம்
அத்துடன் மாவட்டச் செயலாளர் பதவிக்கு போட்டியிடும் சீனியர்கள், சட்டசபை, லோக்சபா தேர்தலிலும் கட்சிப் பதவிகளிலும் தங்களுக்கோ தங்கள் குடும்பத்தினருக்கோ சீட் கேட்கக் கூடாது எனவும் திமுக தலைமை நிபந்தனை விதித்தது. இதற்கான உறுதிமொழி பத்திரத்தில் 18 மாவட்ட செயலாளர்கள் கையெழுத்து போட்டிருப்பதாக கருணாநிதியே அறிவிக்கவும் செய்தார்.

மீண்டும் குறுநிலமன்னர்கள்
இதனையும் மீறி தற்போதைய மாவட்டச் செயலாளர்களின் அதாவது குறுநில மன்னர்களின் ஆதரவாளர்களும் வாரிசுகளும் புதிய மாவட்டச் செயலாளர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பது தொண்டர்களை குமுற வைத்துள்ளது.

டி.ஆர்.பாலு
தஞ்சை தெற்கு மாவட்டத்தில் டி.ஆர்.பாலுவின் ஆதரவாளரான துரை.சந்திரசேகரனும் வடக்கில் முன்னாள் அமைச்சர் கோ.சி.மணியின் ஆதரவாளரான எஸ்.கே.கல்யாணசுந்தரமும் வெற்றி பெற்றுள்ளனர். தஞ்சை தெற்கில் துரை.சந்திரசேகரனை எதிர்த்து போட்டியிட்ட முன்னாள் மத்திய அமைச்சர் பழனிமாணிக்கத்தின் சகோதரர் தோல்வியடைந்தார். திருவாரூர்

பூண்டி கலைவாணன்
மாவட்டத்தில் தற்போதைய மாவட்டச் செயலாளர் பூண்டி கலைவாணனே வெற்றி பெற்றுள்ளார். இவர் டி.ஆர்.பாலுவின் ஆதரவாளர்.

நேரு
திருச்சி தெற்கில் முன்னாள் அமைச்சரும் மாவட்டச் செயலாளருமான கே.என்.நேரு மீண்டும் போட்டியின்றி வெற்றி பெற்றுள்ள நிலையில், அவரது ஆதரவாளர் காடுவெட்டி தியாகராஜன் திருச்சி வடக்கில் வெற்றி பெற்றார்.

எம்.ஆர்.கே. பன்னீர்
கடலூர் கிழக்கில் தற்போதைய மாவட்டச் செயலாளர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் போட்டியின்றியும், மேற்கில் அவரது ஆதரவாளர் வி.கணேசனும் வெற்றி பெற்றனர்.

காந்திசெல்வன்
நாமக்கல் கிழக்கில் மாவட்டச் செயலாளர் காந்திசெல்வனும் மேற்கில் அவரது ஆதரவாளர் கே.எஸ்.மூர்த்தியும் வெற்றி பெற்றுள்ளனர்.

வேலு,பொன்முடி
திருவண்ணாமலை வடக்கில் எ.வ.வேலுவின் ஆதரவாளர் சிவானந்தமும் விழுப்புரம் வடக்கில் பொன்முடி ஆதரவாளர் மஸ்தானும் வெற்றி பெற்றுள்ளனர்.

துர்கா ஸ்டாலின்
விழுப்புரம் தெற்கில் அங்கயற்கண்ணி வெற்றி பெற்றுள்ளனர். முன்னாள் மக்கள் தொடர்பு அதிகாரி அண்ணாவின் உறவினரான இவர் துர்கா ஸ்டாலின் மூலம் வாய்ப்பு பெற்றதாக கூறப்படுகிறது.

வாரிசுகள்
சிவகங்கை மாவட்டத்தில் முன்னாள் அமைச்சர் பெரியகருப்பனும் ராமநாதபுரத்தில் முன்னாள் மாவட்டச் செயலாளர் சுப.தங்கவேலனின் மகன் திவாகரும் மதுரை தெற்கில் சேடப்பட்டி முத்தையாவின் மகன் மணிமாறனும் வெற்றி பெற்றுள்ளனர்.

குறுநிலமன்னர்கள்
இதுவரை நடந்துள்ள தேர்தலில் எல்.மூக்கையா, பூண்டி கலைவாணன், பெரியண்ணன் அரசு, சுரேஷ்ராஜன், காந்திசெல்வன், ஏ.கே.எஸ்.விஜயன் போன்றவர்கள் மீண்டும் மாவட்ட செயலாளர் ஆகியுள்ளனர். ஏற்கெனவே மாவட்டச் செயலாளராக இருந்தவர்களில் சுப.தங்கவேலன், பொங்கலூர் பழனிச்சாமி, வெள்ளக்கோவில் சாமிநாதன், கருப்பசாமி பாண்டியன், பொன்முடி, பழனி மாணிக்கம், கோ.சி.மணி போன்றவர்கள் போட்டியிடாமல் ஒதுங்கியுள்ளனர்.

எப்பதான் விடிவோ?
புதியவர்களுக்கு வாய்ப்பு வழங்க வேண்டும் என்பதற்காகத் தான் சீனியர்களுக்கு கருணாநிதி நிபந்தனைகளை விதித்தார். ஆனால், அதையும் மீறி தற்போதைய மாவட்டச் செயலாளர்களில் பெரும்பாலானவர்கள் தங்கள் ஆதரவாளர்களையே மாவட்டச் செயலாளர், பொருளாளர், அவைத்தலைவர் உள்ளிட்ட பொறுப்புகளுக்கு கொண்டு வந்துள்ளனர். இதனால் மாவட்டங்கள் பிரிக்கப்பட்டிருந்தாலும் அங்கு ஏற்கெனவே ஆதிக்கம் செலுத்தி வந்தவர்களின் கைகளிலேயே அதிகாரங்கள் குவிந்திருப்பதாக திமுக தொண்டர்கள் குமுறலைக் கொட்டி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications