இரு கையை கூப்பி வருத்தம் தெரிவித்த அஇஅதிமுக முன்னாள் எம்எல்ஏ! முன்ஜாமீன் கிடைக்குமா?
கள்ளக்குறிச்சி: முதல்வர் ஸ்டாலின், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோரை அவதூறாக பேசியதற்கு கள்ளக்குறிச்சியில் நடந்த பொதுக் கூட்டத்தில் முன்னாள் எம்எல்ஏ குமரகுரு வருத்தம் தெரிவித்தார். இந்த நிலையில் அவருக்கு முன்ஜாமீன் கிடைக்குமா இல்லை இந்த வழக்கே வாபஸ் பெறப்படுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
உளுந்தூர்பேட்டை அதிமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் குமரகுரு சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த முன் ஜாமீன் வழக்கில் கடந்த 19ஆம் தேதி கள்ளக்குறிச்சியில் மந்தைவெளி என்ற இடத்தில் நடைபெற்ற அண்ணா நூற்றாண்டு பொதுக்கூட்டத்தில் தமிழக முதலமைச்சரையும், மற்றும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினையும் ஆபாசமாக பேசியதாக, காவல்துறையினர் வழக்கு பதிவு செய்ததாக தெரிவித்துள்ளார்.

கள்ளக்குறிச்சி திமுக தெற்கு பகுதி செயலாளர் வெங்கடாசலம் அளித்த புகாரின் அடிப்படையில் தன் மீது பல்வேறு பிரிவின் கீழ் கள்ளக்குறிச்சி போலீசார் வழக்கு பதிவு செய்திருப்பதாகவும், அரசியல் உள் நோக்கத்தோடு, தொடரப்பட்ட வழக்கு என்றும், எனவே தனக்கு முன் ஜாமீன் வழங்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
இந்த வழக்கு நீதிபதி ஜெயச்சந்திரன் முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது காவல்துறை தரப்பில் அவருக்கு முன் ஜாமீன் வழங்ககூடாது என எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து இருதரப்பு வாதத்தையும் கேட்ட நீதிபதி, தமிழக முதல்வர் மற்றும் அவரது அமைச்சர் உதயநிதி குறித்து அவதூறாக பேசிய முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் குமரகுரு, காவல்துறையிடம் முறையான அனுமதி வாங்கி எந்த இடத்தில் மேற்கண்டவர்களை அவதூறாக பேசினாரோ அந்த இடத்தில் ஒரு பொதுக்கூட்டத்தை நடத்தி, அதில் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும். இது தொடர்பாக நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்.
அதன்பின்னர் தான் அந்த மனு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்றும் உத்தரவிட்டிருந்தார். இதையடுத்து கள்ளக்குறிச்சி மந்தைவெளியில் நேற்றைய தினம் அதிமுக சார்பில் பூத் கமிட்டி நிர்வாகிகளுக்கான கூட்டம் மற்றும் மதுரை மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் விளக்க பொதுக் கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
அதன்படி நேற்று மாலை அதிமுக கூட்டம் நகரச் செயலாளர் பாபு தலைமையில் நடந்தது. இந்த கூட்டத்தில் முன்னாள் எம்எல்ஏ குமரகுரு கலந்து கொண்டார். அப்போது அவர் பேசுகையில் நான் கடந்த அண்ணா பிறந்தநாள் விழா பொதுக் கூட்டத்தில் பேசிய போது உதயநிதி ஸ்டாலின் பற்றி தவறாக ஒரு வார்த்தை வந்துவிட்டது. தவறான வார்த்தை என தெரிந்தவுடன் நான் பேசிய வார்த்தை தவறு என சமூகவலைதளங்களில் வருத்தம் தெரிவித்தேன்.
அதை பத்திரிகை தொலைகாட்சியில் வெளியிட்டுள்ளனர், நான் பேசிய வார்த்தை அவர்கள் மனதை புண்படுத்தும் வகையில் இருந்தால் அதற்கு இந்த கூட்டத்தின் மூலம் வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன். எந்த காலத்திலும் நான் பேசும் வார்த்தை மற்றவர்கள் மனது புண்படும் வகையில் இருக்காது என தெரிவித்துள்ளார். இந்த நிலையில் அவர் மீதான வழக்கு வாபஸ் பெறப்படுமா, அவருக்கு முன்ஜாமீன் வழங்கப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
ஏற்கெனவே நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்டுவிட்டு வந்தால் முன் ஜாமீன் மனு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என நீதிபதி கூறியிருந்தார். அந்த வகையில் தற்போது குமரகுரு மன்னிப்பும் கேட்டுவிட்டார். எனவே இந்த பிரச்சினை இத்துடன் முடியுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.












Click it and Unblock the Notifications