அதிமுக ஓராண்டு நிறைவு- 3 முதல்வர்கள் மட்டுமே சாதனை... நிறைய வேதனைதான்
தமிழகத்தில் இரண்டாவது முறையாக தொடர்ந்து ஆட்சியை பிடித்த அதிமுக மே 23ஆம் தேதியுடன் ஓராண்டு நிறைவடைகிறது.
சென்னை: தமிழகத்தில் இரண்டாவது முறையாக தொடர்ந்து அமைந்த அதிமுக ஆட்சி ஓராண்டை நிறைவு செய்கிறது. ஆனால் இந்த ஓராண்டில் கட்சிக்குள் எத்தனை எத்தனையோ அதிரடித் திருப்பங்கள் மாற்றங்கள் ஏற்பட்டுவிட்டன. இந்த ஓராண்டில் மக்கள் பிரச்சினைகள் எதற்குமே தீர்வு காணப்படவில்லை. 3 முதல்வர்கள் மாறியது மட்டுமே சாதனையாக உள்ளது.
கடந்த 2011ஆம் ஆண்டு வெற்றி பெற்ற அதிமுக 5 ஆண்டு ஆட்சியை நிறைவு செய்தது. 2016ஆம் ஆண்டு தொடர்ச்சியாக வெற்றி பெற்ற அதிமுக இந்த முறை 5 ஆண்டுகளை நிறைவு செய்யுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. காரணம் முதல்வர் ஜெயலலிதாவின் மரணத்திற்குப் பிந்தைய நிகழ்வுகள்தான்.
அதிமுக இரண்டாக பிளவு பட்டு எம்எல்ஏக்கள் திசைக்கொரு திக்காக சிதறியுள்ளனர். என்னதான் பெரும்பான்மை எம்எல்ஏக்களுடன் எடப்பாடி பழனிச்சாமி ஆட்சி செய்தால் தினசரி குடைச்சல்தான். இதனால் மக்கள் பணிகளை முதல்வரால் சரிவர கவனிக்க முடியவில்லை.
அதிமுக வெற்றி
2016 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டசபை தேர்தலில் பெரும்பான்மை பெற்று அதிமுக வெற்றி பெற்றது. மே 19ஆம் தேதி 2016ஆம் ஆண்டு அதிமுக மிகப்பெரிய வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. எல்லாமே ஜெயலலிதாவிற்காக விழுந்த வாக்குகள்தான்.
மே 23,2016
வரலாற்று சிறப்பு மிக்க வெற்றி என்று கொண்டாடிய ஜெயலலிதா மே 23ஆம் தேதி பதவியேற்றார். இந்த நாளை ஜெயலலிதா தேர்வு செய்ய காரணம், சொத்துக்குவிப்பில் இருந்து விடுதலை பெற்ற ஜெயலலிதா கடந்த 2015ஆம் ஆண்டு மே 23ஆம் தேதி முதல்வர் பதவியேற்ற சென்டிமெண்ட்தான்.
தண்ணீர் தட்டுப்பாடில்லை
கடந்த 2015ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் பெய்த பெருமழையால் நீர் நிலைகள் எல்லாம் நிரம்பி வழிந்தன. அதனால் கோடையில் கூட தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படவில்லை. மின்சார பிரச்சினையும் ஏற்படவில்லை.
பொய்த்துப்போன பருவமழைகள்
ஜூன் மாதம் தாமதமாக தொடங்கிய தென்மேற்கு பருவமழை குறைந்த அளவே பெய்தது. அதே போல வடகிழக்கு பருவமழையும் பொய்த்துப்போனது. வறட்சி என்ற வார்த்தை அதிக அளவில் புழங்கத் தொடங்கியது.
ஜெயலலிதா உடல்நலக்குறைவு
செப்டம்பர் 22ஆம் தேதி ஜெயலலிதாவிற்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அதுமுதலே அரசு ஊசலாடத் தொடங்கிவிட்டது. பொறுப்புகள் அனைத்தும் ஓபிஎஸ் வசமானது. ஆனாலும் கட்சி, ஆட்சி கட்டுப்பாடு சசிகலாவின் வசமே இருந்தது.
ஆதரவு கையெழுத்து
ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்த நேரத்தில் உணவு பாதுகாப்பு மசோதா, உதய் மின் திட்டம் போன்ற திட்டங்களுக்கு தமிழக அரசின் சம்மதத்தை மத்திய அரசு எப்படியோ பெற்றுக்கொண்டது. இந்த இரண்டு திட்டங்களுக்குமே ஜெயலலிதா மிகக் கடுமையான எதிர்ப்பு தெரிவித்தார்.
ஜெயலலிதா மறைவு
கடந்த ஆண்டு டிசம்பர் 5ஆம் தேதி அதிமுகவின் எந்த ஒரு தொண்டரும் ஜீரணிக்க முடியாத சம்பவம் நடைபெற்றது. அதுதான் ஜெயலலிதாவின் மரணம். அவருக்குப் பின் நள்ளிரவில் முதல்வர் பதவியேற்றார் ஓ. பன்னீர் செல்வம்.
வர்தா புயல்
ஜெயலலிதா மறைவிற்குப் பிறகு ஓ.பன்னீர்செல்வம் முதல்வாரானதும் டிசம்பர் 12ஆம் தேதி அவர் எதிர்கொண்ட முதல் சவால் வார்தா புயல். சென்னையைப் புரட்டிப்போட்டிருந்தது வார்தா புயல். சுறுசுறுப்பாக மீட்பு, நிவாரணப் பணிகளை அதிகாரிகளுடன் இணைந்து மேற்பார்வையிட்ட ஓ.பன்னீர்செல்வம் மக்கள் அபிமானத்தை வென்றார்.
ஜனவரியில் ஜல்லிக்கட்டு
ஜல்லிக்கட்டுப் போராட்டம் தமிழகத்தில் மிகப்பெரிய போராட்டமாக வெடித்தது. அதை ஆரம்ப நிலையிலேயே கட்டுப்படுத்தாமல் அமைதி காத்தார் பன்னீர்செல்வம். போராட்டம் வலுப்பெற்ற நிலையில் மத்திய அரசுடன் பேசு சுமுகத்தீர்வையும் கண்டார். எனினும் போராட்டம் முடிவுக்கு வரும் நாளில் போராட்டக்காரர்கள் மீது போலீஸ் தடியடி நடத்தியது. அது கரும்புள்ளியாக மாறியது.
தலைமை செயலகத்தில் சோதனை
தமிழக தலைமைச் செயலாளர் ராமமோகன் ராவ் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர் தொடர்ந்து தமிழக வரலாற்றிலேயே முதன்முறையாக தலைமைச் செயலகத்துக்குள் தலைமைச் செயலர் அறைக்குள் வருமான வரித்துறையினர் நுழைந்தது ஓ.பி.எஸ் அரசுக்கு பின்னடைவுதான்.
பிளவுபட்ட அதிமுக
சசிகலா தரப்பு நெருக்கடியால் முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டார் ஓ.பன்னீர்செல்வம். சசிகலாவுக்கு எதிராக போர்க்கொடி உயர்த்தினார். பிப்ரவரி 7ஆம் தேதியன்று சசிகலாவிற்கு எதிராக திரும்பினார் ஒபிஎஸ், அதிமுக இரு அணிகள் ஆனது.
கூவத்தூர் கூத்து
சசிகலா அணி எம்எல்ஏக்கள் கூவத்தூரில் தங்க வைக்கப்பட்டனர். அவர்களுக்கு ராஜ உபசாரம் நடைந்தது.
சசிகலா தான் சிறை செல்லும் முன்னர் எடப்பாடி பழனிசாமியை முதல்வராக்கிவிட்டுச் சென்றார்.
தலைவிரித்தாடும் தண்ணீர் பிரச்சினை
சென்னையில் தண்ணீர் பிரச்சினை தலை தூக்கத் தொடங்கியது. ஆனால் ஊடகங்களில் அரசியல் செய்திகள் பிரதான இடம் பிடித்தன. இதனால் மக்கள் பிரச்சினைகளின் முக்கியத்துவம் குறையத் தொடங்கியது. கடந்த 2016ஆம் ஆண்டு நிரம்பியிருந்த ஏரிகள் எல்லாம் 2017 பிப்ரவரியிலேயே அபாயக்கட்டத்தை எட்டின. இதனால் தண்ணீர் பிரச்சினை தலைவிரித்தாடியது.
மக்கள் பிரச்சினை
அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் ஆட்சியை தக்கவைக்கவே அலைந்தனர். மக்கள் பிரச்சினைக்கு முக்கியத்துவம் தரவில்லை. இதனால் பல அரசு அலுவலகங்களில் லஞ்சம் தலைவிரித்தாடுகிறது. பணம் கொடுத்தால்தான் எதுவும் நடக்கும் என்ற நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
சிக்கலில் அமைச்சர்கள்
எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அமைச்சரவையில் உள்ள சுகாதார அமைச்சர் சி.விஜயபாஸ்கர் வீட்டில் வருமான வரித்துறை சோதனை நடைபெற்றது. உணவுத் துறை அமைச்சர் காமராஜ் மீது நடவடிக்கை எடுக்குமாறு உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு, லஞ்சம் கேட்டு மிரட்டுவதாக அதிகாரி ஒருவர் சமூக நலத்துறை அமைச்சர் சரோஜா மீது முன்வைத்த புகார் என எடப்பாடி பழனிச்சாமி அரசுக்கு தர்மசங்கடத்தையே ஏற்படுத்தியுள்ளது.
விவசாயிகள் தற்கொலை
காவிரி டெல்டா மாவட்டங்களில் தண்ணீர் இன்றி பயிர்கள் கருகின விவசாயிகள் அதிர்ச்சியில் செத்து மடிந்தனர். பலர் தற்கொலை செய்து கொண்டனர். ஆனால் அரசுக்கு இது பெரும் கவலையாக தெரியவில்லை. ஆட்சியை தக்கவைப்பதில்தான் பெரும் கவலையாக உள்ளது.
ரேங்க் முறை மறைந்தது
பள்ளிக்கல்வித்துறையில் மிகப்பெரிய மாற்றமாக மதிப்பெண் ரேங்க் முறை மறைந்தது. கிரேடு முறை அறிமுகப்படுத்தப்பட்டது. இதனால் ரிசல்ட் தினத்தன்று ஏற்படக்கூடிய மன உளைச்சல் மொத்தமாக குறைந்து போனது. கல்வியாளர்கள், பெற்றோர்கள், மாணவர்கள் இந்த முறைக்கு வரவேற்பு தெரிவித்துள்ளனர்.
தீர்வு இல்லையே
குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு இன்னும் ஏற்படவில்லை. பல ஊர்களில் காலி குடங்களுடன் போராட்டம் நடத்தி வருகின்றனர். ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிரான போராட்டம் நீடித்து வருகிறது. பட்ஜெட் மட்டுமே தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதுவும் வெறுங்கையில் முழம் போடப்பட்டதுதான். அதற்குப் பிறகு மக்கள் பிரச்சினைக்காகவும், மானியக் கோரிக்கைக்காகவும் சட்டசபை கூட்டப்படவில்லை.
ஓராண்டு நிறைவு
எம்எல்ஏக்கள் போர்க்கொடி, ஓபிஎஸ் அணியின் எதிர்ப்பு அலை என எப்படியோ அதிமுக அரசு என்ற தேர் ஓடுகிறது.
ஓயாத போராட்டத்திற்கு மத்தியில் ஓராண்டை நிறைவு செய்துள்ளது அதிமுக அரசு. அது நீடிக்குமா, நிலைக்குமா? பார்ககலாம்.