அதிமுக அரசு தொடருவது அரசியல் சாசனத்துக்கு எதிரானது: ஹைகோர்ட்டில் கபில்சிபல் வாதம்
சென்னை: எடப்பாடி பழனிச்சாமி பெரும்பான்மையை நிரூபிக்க ஆளுநர் உத்தரவிட கோரி ஸ்டாலின் தாக்கல் செய்த வழக்கின் விசாரணை உயர்நீதிமன்றத்தில் இன்று நடைபெற்றது. ஸ்டாலின் தரப்புக்காக, மூத்த வழக்கறிஞரும், முன்னாள் அமைச்சருமான கபில்சிபில் ஆஜராகி வாதாடினார்.
இதனிடையேய டிடிவி தினகரன் ஆதரவு எம்எல்ஏக்களும் தங்களை இந்த வழக்கில் இணைத்துக்கொண்டனர். கபில் சிபல், ஆளுநர் மவுனத்திற்கு எதிராக தீவிரமாக வாதங்களை முன்வைத்தார்.
கபில் சிபல் தனது வாதத்தில், "நீதிமன்றம் உத்தரவிடாவிட்டால் மைனாரிட்டி அரசு சட்டவிரோதமாக தொடரும். சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டியது முதல்வர் எடப்பாடி கடமை. பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிட வேண்டியது ஆளுநரின் கடமை. ஆளுநரிடம் மனு கொடுத்தும் எந்த பதிலும் தரவில்லை. பெரும்பான்மை நிரூபிப்பு தொடர்பாக, உச்சநீதிமன்ற தீர்ப்பை மதித்து ஆளுநர் செயல்பட வேண்டும். பெரும்பான்மையே இல்லாமல், அதிமுக அரசு தொடருவது அரசியல் சாசனத்துக்கு எதிரானது" என்று கபில் சிபல் வாதங்களை முன் வைத்தார்.
இதனிடையே வழக்கு விசாரணை அடுத்த மாதம் 12ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. அப்போது இந்த வழக்கு விசாரணைக்கு ஏற்றதா, இல்லையா என்பதை நீதிமன்றம் முடிவு செய்யும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.