119 அதிமுக எம்.எல்.ஏக்கள் சென்னையில் உண்ணாவிரதம்! தேமுதிக அதிருப்தி எம்.எல்.ஏக்களும் பங்கேற்பு!
சென்னை: தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா சிறையில் அடைக்கப்பட்டதைக் கண்டித்து 119 அதிமுக எம்.எல்.ஏக்கள் சென்னை எம்.ஜி.ஆர். நினைவிடத்தில் உண்ணாவிரதம் மேற்கொண்டனர். இந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் தேமுதிகவின் 5 அதிருப்தி எம்.எல்.ஏக்களும் கலந்து கொண்டுள்ளனர்.
சொத்துக் குவிப்பு வழக்கில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா சிறையில் அடைக்கப்பட்டதைக் கண்டித்து அதிமுகவினர் தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். டெல்லியில் நாடாளுமன்ற வளாகம் முன்பாக அதிமுக எம்.பிக்கள் நேற்று முன் தினம் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினர்.
இந்த நிலையில் அதிமுக எம்.எல்.ஏ.க்களும் சென்னையில் இன்று ஒருநாள் உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்தினர். சென்னை மெரினாவில் உள்ள எம்.ஜி.ஆர். நினைவிடம் அருகே அதிமுகவின் 119 எம்.எல்.ஏக்கள் இந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் பங்கேற்றனர்.
இன்று காலை 8 மணிக்கு தொடங்கிய உண்ணாவிரதம் மாலை 5 மணி வரை நடைபெற்றது. அ.தி.மு.க. கொறடா திருச்சி மனோகரன் இந்த போராட்டத்துக்கு தலைமை தாங்கினார்.
டி.ஜெயக்குமார், செங்கோட்டையன், கே.பி.முனுசாமி, நீலகண்டன், கலைராஜன், செந்தமிழன், பச்சை மால், சிவபதி, பரஞ்சோதி, வாலாஜாபாத் கணேசன், ஜி.வெங்கடாசலம், வைகை செல்வன், எஸ்.கே.செல்வம், கே.பி.கந்தன், செல்வி ராமஜெயம், விஜயலட்சுமி, பழனிசாமி உள்பட அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் 119 பேர் பங்கேற்றனர்.
இதில் அனைவரும் கருப்பு சட்டை அணிந்து கையில் பதாகைகளுடன் கலந்து கொண்டுள்ளனர். இதையொட்டி அங்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
அமைச்சர்கள் கலந்து கொள்ளவில்லை..
இந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் உட்பட அமைச்சர்கள் யாரும் கலந்து கொள்ளவில்லை.
All AIADMK MLAs on one day fast protesting against #Jayaverdict pic.twitter.com/GxBpxVRe0s
— TheNewsMinute (@thenewsminute) October 4, 2014
தேமுதிக அதிருப்தி எம்.எல்.ஏக்கள்
மேலும் தே.மு.தி.க. போட்டி எம்.எல்.ஏ.க்கள் மைக்கேல் ராயப்பன், மா.ப.பாண்டியராஜன், சுந்தர்ராஜன், தமிழழகன், சுரேஷ்குமார், அருண்சுப்பிரமணியம், சாந்தி, சமத்துவ மக்கள் கட்சி எர்ணாவூர் நாராயணன், இந்திய குடியரசு கட்சி செ.கு.தமிழரசன், கொங்கு இளைஞர் பேரவை தனியரசு, போட்டி புதிய தமிழகம் ராமசாமி ஆகிய எம்.எல்.ஏக்களும் உண்ணாவிரதம் இருந்தனர்.