சசிகலா சிறைக்கு போனாலும் கூவத்தூர் சிறையை விட்டு எம்எல்ஏக்கள் வரமாட்டாங்க போலிருக்கே!
கூவத்தூர் ரிசாட்டில் அதிமுக எம்எல்ஏக்கள் 8வது நாளாக அடைத்து வைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் அனைவரும் மக்கள் பணியாற்ற எப்போது தொகுதிக்கு செல்வார்கள் என்ற கேள்வி எழுந்துள்ளது.
சென்னை: ஆட்சியமைக்க ஆளுநர் அழைக்கும் வரை ரிசாட்டை விட்டு வெளியேற வேண்டாம் என்று சசிகலா உத்தரவிட்டுள்ளதால் 9வது நாளாக அதிமுக எம்எல்ஏக்களின் ஆடம்பர சிறை வாழ்க்கை நீடிக்கிறது.
பெங்களூரு சிறையில் சசிகலா அடைக்கப்பட்ட பின்னராவது அதிமுக எம்எல்ஏக்கள் விடுவிக்கப்படுவார்களா என்ற கேள்வி எழுந்துள்ளது.
பிப்ரவரி 7ஆம் தேதியன்று முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் மெரீனா கடற்கரையில் உள்ள ஜெயலலிதாவின் நினைவிடத்தில் 40 நிமிட தியானம் இருந்தார். சசிகலாவைப் பற்றி அடுக்கடுக்கானகுற்றச்சாட்டுகளை முன் வைத்தார். கட்டாயப்படுத்தி ராஜினாமா செய்ய வைத்தாக பன்னீர் செல்வம் கூறியது அதிர்ச்சி அலைகளை உருவாக்கியது.
இதனையடுத்து அதிமுக இரண்டாக பிளவு பட்டது. ஓபிஎஸ் அணி, சசிகலா அணி என இரண்டு அணிகளாக செயல்பட்டு வருகிறது. சில எம்எல்ஏக்கள் ஓ.பன்னீர் செல்வத்திற்கு ஆதரவு தெரிவித்து அவருடன் இணைந்துள்ளனர். 100க்கும் மேற்பட்ட எம்எல்ஏக்கள் கடந்த 8ஆம் தேதி முதல் கூவத்தூரில் உள்ள கோல்டன் பே ரிசார்ட்டில் சிறை வைக்கப்பட்டுள்ளனர்.
சசிகலாவின் செயல்பாடுகளால் அதிருப்தியடைந்த சில எம்எல்ஏக்கள் ஓபிஎஸ் அணிக்கு மாறி வருகின்றனர். மாறு வேடம் போட்டு தப்பி வந்து ஓபிஎஸ் அணியில் இணைந்தார் மதுரை எம்எல்ஏ சரவணன்.
ரிசார்ட் சிறை
எம்எல்ஏக்கள் சிறைவைக்கப்பட்டுள்ளதால் உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்யப்பட்டது. இதை விசாரித்த உயர்நீதிமன்றம், எம்எல்ஏக்கள் தங்கியுள்ள சிறையில் காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த வருவாய்துறை அதிகாரிகள் விசாரிக்க உத்தரவிட்டது. இதனையடுத்து அங்கு அதிகாரிகள் விசாரணை நடத்தி அதனை நீதிமன்றத்தில் அளித்துள்ளனர்.
எம்எல்ஏக்களுடன் சசிகலா
பல எம்எல்ஏக்கள் ஓபிஎஸ் வசம் செல்லப் போவதாக வெளியான தகவலால் பதற்றமடைந்த சசிகலா, கூவத்தூர் சென்று ஆலோசனை நடத்தினார். 30 மணி நேரத்திற்கும் மேலாக அவர்களுடனேயே தங்கினார்.
ஓபிஎஸ் அழைப்பு
சொத்துக்குவிப்பு வழக்கில் நேற்று உச்சநீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பளித்தது. சசிகலாவிற்கு 4 ஆண்டு சிறை தண்டனை விதித்தது. ஆனாலும் ரிசார்ட்டை விட்டு வெளியேறவில்லை சசிகலா. முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் எம்எல்ஏக்கள், அமைச்சர்களுக்கு அழைப்பு விடுத்தார். கூவத்தூரில் போலீஸ் குவிக்கப்பட்டது.
வெளியேற்றும் முயற்சி
ஓபிஎஸ் அணியைச் சேர்ந்த அமைச்சர் மாஃபா பாண்டியராஜன், பொன்னையன் ஆகியோர் நேற்று எம்எல்ஏக்களை மீட்க கிளம்பிச் சென்றனர். ஆனால் அவர்களை போலீஸ் தடுத்து நிறுத்தவே பாதி வழியில் திரும்பி வந்தனர். கூவத்தூரில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. எம்எல்ஏக்களை வெளியேற்றும் முயற்சியும் தோல்வியடைந்தது.
ஒரே குடும்பம்
எம்எல்ஏக்கள் அனைவரும் ஒரே குடும்பமாக இருப்பதாகவும், எங்களை வெளியேற்ற முயற்சி செய்தால் உண்ணாவிரதம் இருப்போம் என்றும் அதிமுகவினர் எச்சரித்தனர். இதனையடுத்து போலீசார் அமைதியாக அங்கேயே காவலுக்கு இருந்தனர்.
சிறை செல்லப்போகும் சசிகலா
சொத்துக்குவிப்பு வழக்கில் சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் தண்டனை பெற்றுள்ளனர். பெங்களூரு சிறையில் அடைக்கப்படுவது உறுதியாகியுள்ளது. இந்த சூழ்நிலையிலும் ஒற்றுமையாக இருங்கள் என்று கூறி உருக்கமாக பேசியுள்ளார் சசிகலா. கண்ணீர் மல்க விடை பெற்று திரும்பினார். இன்று காலையில் பெங்களூருவிற்கும் கிளம்பிவிட்டார்.
எம்எல்ஏக்கள் எப்போது ரிலீஸ்
சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை பெற்ற சசிகலா சிறையில் அடைபட கிளம்பிவிட்டார். அவரால் கூவத்தூர் ரிசார்ட்டில் கடந்த 9 நாட்களாக அடைபட்டுள்ள எம்எல்ஏக்கள் எப்போது விடுதலையாவார்கள் என்ற கேள்வி எழுந்துள்ளது.