குடும்பம், குடும்பமாக குபீரென கிளம்பும் குடைச்சல்..அதிமுகவில் எல்லாமே கொயப்பம்!
திமுகவின் குடும்ப ஆட்சிக்கு எதிராக தொடங்கப்பட்டது என்ற இயக்கம் என கூறி, எம்.ஜி.ஆரும், ஜெயலலிதாவும் கட்டிக்காத்த அதிமுக இப்போது பல குடும்பங்களின் கையில் சிக்கி, திணறிக்கொண்டுள்ளது.
சென்னை: தமிழக மக்கள் இப்போது தலையை பிய்த்துக் கொண்டுள்ளார்கள். தமிழக அரசியல் நிலையை நினைத்து கூட அவர்கள் அதிகம் கவலைப்படவில்லை. அதிமுக குடும்பத்திற்குள் ஆளாளுக்கு அளிக்கும் பேட்டிகள்தான் அவர்களை மயக்கம் போட்டு கீழே தள்ளும் அளவுக்கு உள்ளது.
ஜெயலலிதா மறைவுக்கு பிறகு, தமிழக அரசியலில் தினமும் ஒரு சடுகுடுதான். அதிலும் அதிமுகவில் அடிதடிதான்.
அதிமுகவை சசிகலா கைப்பற்றியதில் ஆரம்பித்தது, குடும்ப கூத்துக்கள். அவர் முதல்வர் பதவிக்கு காய் நகர்த்தியபோதே, திடீரென இனிமேல் குடும்ப ஆட்சிதான் செய்வோம் என திரியை கொளுத்திப்போட்டார் சசிகலா கணவர் நடராஜன்.
கருத்து கூறாத சசிகலா
அதிமுக பொதுச்செயலாளர் என்ற முறையில் நடராஜன் கூறியதை ஆதரித்தோ, எதிர்த்தோ கருத்தே கூறவில்லை சசிகலா. ஜெயலலிதாவால் விரட்டிவிடப்பட்ட சசிகலா குடும்பத்தார், ராஜாஜி ஹாலில் அவரது உடலை சுற்றி அமர்ந்து அடாவடி செய்ததை பார்த்தில் கடுப்பாக இருந்த தமிழக மக்களுக்கு இது எரியும் விளக்கில் எண்ணையை ஊற்றியதை போல ஆனது.
சசிகலா குடும்பத்திற்குள் பூசல்
சசிகலா குடும்பவாவது ஒற்றுமையாக இருக்கிறதா என்றால் அதுவும் இல்லை. சிறை செல்ல வேண்டும் என தீர்ப்பு வந்ததும், அவசரமாக அக்கா மகன் டி.டி.வி.தினகரனை கட்சி துணை பொதுச்செயலாளராக நியமித்த சசிகலா, அண்ணன் மகன் வெங்கடேஷையும் கட்சியில் சேர்த்துக்கொண்டார். ஆனால் கணவர் நடராஜன், அக்கா மகன் திவாகரன் உள்ளிட்ட இன்னும் பல குடும்ப உறுப்பினர்களுக்கு கல்தாதான். இதனால் சசிகலா குடும்பத்திற்குள் ஆளுக்கொரு பக்கம் புகைச்சலாம்.
ஜெயலலிதா குடும்பமும்
சசிகலா குடும்பத்தில்தான் இப்படி என்று பார்த்தால், ஜெயலலிதாவின் குடும்பத்தாருக்குள்ளும் அக்கப்போர் தாங்க முடியவில்லை. முதலில் பகிரங்கமாக கிளம்பியவர், ஜெ. அண்ணன் மகள் தீபா. அரசியலுக்கு வரப்போகிறேன் என பூச்சுகாட்டியபடியே இருந்தார். ஜெயலலிதாவின் மறைவில் சந்தேகம் இல்லை என்றவர் பிறகு விசாரணை கமிஷன் அமைக்க வேண்டும் என சொல்லி பல்டியடித்தார். ஓ.பி.எஸ் புகழ்பெற்ற நேரத்தில் அவருடன் கை கோர்த்து வீடு வரை சென்ற தீபா, நம்பிக்கை வாக்கெடுப்பில் ஓ.பி.எஸ் வெற்றி பெற முடியவில்லை என்ற நிலையில் தனி ஆவர்த்தனம் பாட கிளம்பியுள்ளார்.
திடீர் பொங்கல் தீபக்
இந்த குடும்ப கோதாவில் புது வரவு தீபக். இவ்வளவு நாள் மிக்சர் சாப்பிட்டிருப்பாரோ என்னவோ, தட்டு காலியானதும், பொங்கி தீர்த்துவிட்டார் மனிதர். ஆனால் அவர் ஏன் பொங்கினார், என்ன பேசினார் என்பது கமல் கருத்தைவிட புரிந்து கொள்ள கஷ்டமான காரியம். எதையோ ஆரம்பிக்கிறார், எதை, எதையோ பேசுகிறார். தீபா பற்றி முன்பு ஒருமுறை தாக்கி பேசிய தீபக், நேற்று தீபாவுக்கும் எனக்கும் எந்த பிரச்சினையும் இல்லையே. அத்தையின் போயஸ் இல்லம் எங்கள் இரண்டு பேருக்கும்தான் என கூறி பாகப்பிரிவினை டயலாக் அடிக்கிறார்.
ஏதாவது ஒன்ன சொல்லுங்கப்பா
அப்பல்லோ ஆஸ்பத்திரியில் ஜெயலலிதாவுக்கு சிகிச்சையளித்தபோது உடனிருந்த உறவுக்காரர் தீபக் மட்டுமே. ஆனால் அவரே நேற்று அளித்த பேட்டியில் ஜெயலலிதா மறைவு குறித்து நீதி விசாரணை நடத்த வேண்டும் என்றார். தீபா இன்று அளித்த பேட்டியில், தீபக்கை யாரோ தூண்டிவிட்டு பேசுகிறார் என்கிறார். தீபாவுடன் கருத்து வேறுபாடு இல்லை என்று சகோதரர் தீபக் சொல்வது தூண்டிவிடும் பேச்சா? அப்படியானால் சண்டைதான் போட்டுக்கொள்கிறீர்களா என்று தீபாவிடம் கேட்டால், அதற்கும் இல்லை என்றுதான் சொல்கிறார்.
தலைசுத்துதடா சாமி
இருக்கும் இந்த குடும்ப குழப்பம் போதாது என்று, அதிமுகவே ஒரு குடும்பம்தான் என்றாரே பார்க்கலாம் தீபக். பன்னீர்செல்வத்தை உரிமையோடு அண்ணன் என்றும் சொன்னார். இருக்கும் குடும்ப பிரச்சினை போதாது என்று இதுவேறையா.. என்று தலையில் அடித்துக்கொள்கிறார்கள் அதிமுகவினர். இந்த குடும்ப கோல்மால்களை பார்த்து ஒன்றுமே புரியாமல், கொயப்பத்தில் தலை சுற்றி கிறுகிறுத்துக் கிடக்கிறது தமிழ்கூறும் நல்லுலகம். திமுகவின் குடும்ப ஆட்சிக்கு எதிராக தொடங்கப்பட்டது என்ற இயக்கம் என கூறி, எம்.ஜி.ஆரும், ஜெயலலிதாவும் கட்டிக்காத்த அதிமுக இப்போது பல குடும்பங்களின் கையில் சிக்கி, திணறிக்கொண்டுள்ளது.