இரட்டை இலை வழக்கு - அவகாசம் கேட்ட தினகரன்... நவ.6க்கு தேர்தல் ஆணையம் ஒத்திவைப்பு
இரட்டை இலை வழக்கு நவம்பர் 6ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
சென்னை: இரட்டை இலை வழக்கில் டி.டி.வி.தினகரன் அணி தலைமை தேர்தல் ஆணையத்திடம் கால அவகாசம் கேட்டதை அடுத்து நவம்பர் 6 ஆம் தேதி ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
தேர்தல் ஆணையத்தினால் முடக்கப்பட்ட இரட்டை இலை சின்னத்திற்கு ஓபிஎஸ்,ஈபிஎஸ் அணியினர் ஒன்றாக இணைந்து தற்போது உரிமை கோருகிறார்கள். இதேபோல் டி.டி.வி.தினகரன் தலைமையில் செயல்படும் அணியினரும் உரிமை கோருகிறார்கள்.
இரட்டை இலை விவகாரத்தில் தீர்ப்பு யாருக்கு சாதகமாக அமைந்தாலும் பாதிக்கப்படும் எந்த அமைப்பும் நீதிமன்றத்துக்குப் போகவே வாய்ப்பு அதிகமுள்ளதாக கூறப்படுகிறது. தினகரன் தரப்பினர் அவகாசம் கேட்டதால் இன்றும் முடிவு அறிவிக்காமல் வழக்கை மீண்டும் தேர்தல் ஆணையம் ஒத்திவைத்துள்ளது.
இரட்டை இலை யாருக்கு?
சசிகலா சிறைக்கு சென்ற பிறகு அந்த அணி முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் கட்டுப்பாட்டில் வந்தது. பின்னர் அந்த அணியும், ஒபிஎஸ் அணியும் ஒன்றாக இணைந்தன. சசிகலா அணியின் ஒரு பிரிவினர் துணை பொதுச்செயலாளர் தினகரன் தலைமையில் செயல்பட்டு வருகிறார்கள். இரட்டை இலை சின்னத்தை தங்களுக்கே ஒதுக்கவேண்டும் இருவருமே முறையிட்டு வருகின்றனர்.
தீவிர விசாரணை தேவை
கடந்த 30ஆம் தேதி நடந்த விசாரணையில் டிடிவி தினகரன் அணி வழக்கறிஞர் தங்கள் தரப்பு வாதத்தை முன்வைத்துள்ளார். எடப்பாடி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் அவர்கள் தாக்கல் செய்த ஆவணங்களைப் பரிசோதிப்பது மட்டும் இல்லாமல் அவர்களிடம் தீவிர விசாரணை நடத்த வேண்டும் என்று கோரினார்.
3 மணி நேரம் வாதம்
இன்று தேர்தல் ஆணையத்தில் மீண்டும் விசாரணை தொடங்கியது. வழக்கு விசாரணைக்காக ஓபிஎஸ், ஈபிஎஸ், தினகரன் அணி வழக்கறிஞர்கள் தேர்தல் ஆணையத்தில் ஆஜராகினர். டிடிவி.தினகரன் தரப்பு வழக்கறிஞர் விஜய் ஹன்சாரியா 3 மணி நேரமாக வாதம் நடத்தினார். பின்னர் டி.டி.வி.தினகரன் தரப்பு அவகாசம் கேட்பதால் விசாரணை இன்று முடிக்காமல் திங்கள்கிழமைக்கு ஒத்திவைத்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது.
டிடிவி தரப்பு முறையீடு
இதனிடையே வழக்கு விசாரணை முடிந்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய டி.டி.வி.தரப்பு வழக்கறிஞர் ராஜா செந்தூர்பாண்டியன், இரட்டை இலை வழக்கில் தேர்தல் ஆணையத்திடம் 325 கையெழுத்துகள் மாறியுள்ளதை ஆதாரத்துடன் தாக்கல் செய்துள்ளதாக கூறினார். மேலும் முத்திரைத்தாள் வாங்கிய தேதிக்கு முன்பே கையெழுத்து வாங்கியுள்ளதாக தெரிவித்தார்.
வழக்கை இழுத்தடிக்க முயற்சி
இரட்டை இலை சின்னம் தொடர்பான விசாரணைக்கு டிடிவி தினகரன் தரப்பு ஒத்துழைக்கவில்லை என கே.பி.முனுசாமி தெரிவித்துள்ளார். ஆதாரம் ஏதும் இல்லாததால் டிடிவி தினகரன் தரப்பு இழுத்தடிக்கிறது, எங்கள் தரப்பு வாதம் முடிந்த பிறகு தீர்ப்பு வழங்கப்படும் எனவும் கூறியுள்ளார். ஓபிஎஸ் தரப்பு கூறியுள்ளதை பார்த்தால் வழக்கில் நவம்பர் 6 ஆம் தேதியும் தீர்ப்பு வெளியாக வாய்ப்பு இல்லை என்றே தெரிகிறது.
இரட்டை இலை யாருக்கு
இரட்டை இலை சின்ன வழக்கு விவகாரத்தில் உயர்நீதிமன்ற மதுரைக்கிளை அளித்த கெடு முடிந்து விட்டது. அதே நேரத்தில் உச்சநீதிமன்றம் நவம்பர் 10 வரை தேர்தல் ஆணையத்திற்கு கெடு அளித்துள்ளது. அதற்குள் தேர்தல் ஆணையம் சின்னம் யாருக்கு என்று விசாரித்து தீர்ப்பை அறிவிக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.