புதுவையில் மசூதி மீது கல்வீசித் தாக்குதல்- அதிமுக, மார்க்சிஸ்ட் கண்டனம்
புதுச்சேரி: புதுவை புதிய பேருந்து நிலையம் அருகே மசூதி மீது கல்வீசித் தாக்கியது தொடர்பாக மாநில அரசிடம் மத்திய அரசு விரிவான அறிக்கை கேட்க வேண்டும் என்று அதிமுக வலியுறுத்தியுள்ளது.
புதுவை மாநில இந்து முன்னணி சார்பில் சில நாட்களுக்கு முன்னர் புதிய பேருந்து நிலையம் அருகே பொதுக்கூட்டம் நடந்தது. அப்போது திடீரென யாரோ மர்ம நபர்கள் கூட்டத்தினர் மீது காலி பீர்பாட்டிலை வீசினர்.

இதில் 2 பெண்கள் உள்பட 3 பேர் காயம் அடைந்தனர். அவர்கள் சிகிச்சைக்காக புதுவை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.
இதனைத் தொடர்ந்து அப்பகுதியில் பள்ளிவாசல் மீது யாரோ சிலர் கல்வீசி சென்றனர். இதில் பள்ளிவாசல் ஜன்னல் கண்ணாடி உடைந்து சேதமானது.
இது தொடர்பாக முஸ்லிம் சமூக பிரதிநிதிகள் உருளையன் பேட்டை போலீஸ் நிலையத்துக்கு சென்றனர். இதையறிந்து இந்து முன்னணியினரும் காலி பீர்பாட்டில் வீசியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டனர்.
இதனால் அங்கு பதற்றமான சூழல் நிலவியது. இதனிடையே இச்சம்பவம் குறித்து மத்திய அரசு விரிவான அறிக்கையை மாநில அரசிடம் கேட்டுப் பெற வேண்டும் என்று அதிமுக வலியுறுத்தியுள்ளது.
புதுவையில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக சட்டசபை குழுத் தலைவர் அன்பழகன், வழிபாட்டுத் தலங்கள் அருகே பொதுக்கூட்டங்கள் நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. இத்தடையை மீறி அனுமதி அளிக்கப்பட்டுள்ளது குறித்து விசாரிக்க வேண்டும் என்றார்.
இதேபோல் புதுவை மாநில மார்க்சிஸ்ட் செயலர் ரங்கராஜனும் மசூதி மீதான கல்வீச்சு தாக்குதலுக்குக் கண்டனம் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications