ஏர் இந்தியா பைலட் தாக்கி இன்ஜினியர் மூக்கு உடைப்பு! சென்னை விமான நிலையத்தில் பரபரப்பு
சென்னை: ஏர் இந்தியா விமான பைலட் தாக்கி, அந்த நிறுவனத்தின் இன்ஜினியர் படுகாயமடைந்த சம்பவம் சென்னை விமான நிலையத்தில் இன்று பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னையில் இருந்து டெல்லி வழியாக பாரீஸ் செல்லும் ஏர் இந்தியா விமானம் (AI 143) இன்று காலை 7.30 மணிக்கு கிளம்ப தயாராக இருந்தது. ஆனால் சில தொழில்நுட்ப பிரச்சினைகள் காரணமாக விமானத்தின் புறப்பாடு தாமதப்பட்டது.
இதையடுத்து பயணிகள், கோபமடைந்து விமானத்தை உடனடியாக கிளப்புமாறு ஊழியர்களிடம் வாக்குவாதம் செய்துள்ளனர். இந்த தாமதத்தினால் கோபமடைந்த பைலட், மாணிக்லால், விமானத்தின் இன்ஜினியர் கண்ணன் என்பவருடன் தகராறில் ஈடுபட்டுள்ளார்.

விமானி அறையில் வைத்து இந்த வாக்குவாதம் நடந்துள்ளது. வாக்குவாதம் முற்றிய நிலையில் கண்ணனை மாணிக்லால் தாக்கத் தொடங்கி உள்ளார். இந்த தாக்குதலால், கண்ணன் மூக்கு உடைபட்டு ரத்தம் வழிந்துள்ளது.
இதையடுத்து விமான நிலைய காவல் நிலையத்தில், மாணிக்லாலுக்கு எதிராக, கண்ணன் புகார் கொடுத்துள்ளார். போலீசார் வந்தபோது, தனது அறை கதவை பூட்டிக் கொண்டு வெளியே வர மறுத்துள்ளார் மாணிக்லால். இருப்பினும் பேச்சுவார்த்தைக்கு பிறகு மாணிக்லால் வெளியே வந்தார். அவர் குடிபோதையில் இருந்தாரா என்பது குறித்து அறிந்துகொள்ள மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டது.
இந்த சம்பவத்தால் சுமார் நான்கு மணி நேரம் விமானம் தாமதமாக புறப்பட்டுச் சென்றது. ஏர் இந்தியா விமானத்திற்குள் நடந்த இந்த மோதல் சம்பவம் சென்னை விமான நிலையத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதனிடையே தாக்குதலில் தொடர்புள்ள பைலட்டை ஏர் இந்தியா சஸ்பெண்ட் செய்துள்ளது. விசாரணைக்கும் உத்தரவிட்டுள்ளது.












Click it and Unblock the Notifications